Friday 20 November 2015

மழை

தொடர்மழை, வெள்ளபாதிப்புப் பதிவுகள் சற்றே குறைந்திருக்கும் இந்த வேளையில் சற்று கவனமாகவும் யோசனையுடனுமே தான் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.
இந்த கனமழையை எங்களை விட அதிகமாய் ரசித்து அனுபவித்தவர்கள் வேறு யாரும் இருக்க  முடியாது என்றே நினைக்கிறேன். காரணம் இந்த மழையால் எவ்விதத்திலும் நாங்கள் பாதிக்கப்படவில்லை. லேசான குற்றவுணர்ச்சி இருந்தாலும் சராசரி மனித மனம் இந்த மழையையும் அதன் மூலம் கிடைத்த அற்புதமான தருணங்களையும் வெகுவாய் ரசிக்க வைத்திருப்பது தான் உண்மை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில் உள்ள பாதுகாப்பான ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தான் எங்கள் வீடு. வேளச்சேரி ஏரிக்கும் எங்கள் வீட்டுச் சுவற்றுக்குமிடையேயான தூரம் நான்கு அடி அகலமான காம்பவுண்டு சுவர் மட்டுமே. மூன்று பக்கமும் ஜன்னல்கள் இருப்பதால் மழையின் தீவிரத்தை வெகுவாக உணரமுடிந்தது. அத்தனை மழையிலும் வீட்டுக்குள் தண்ணீர் ஏதும் வரவில்லை. பால்கனி கைப்பிடி சுவற்றில் சிறு சிறு தொட்டிகளில் வைத்திருக்கும் செடிகள் மழையில் நனைந்து பளிச்சென புத்துணர்ச்சியுடன் அசைந்தாடிக்கொண்டிருந்தது. வாசற்படிகளில் மட்டும் தெறித்துக் கொண்டிருந்த மழைத்துளிகளை அடிக்கடி துடைப்பானால் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. வாசலை ஒட்டிய பால்கனியில் பெரிய பாத்திரங்களை வைத்து மழைநீரை சேகரித்தோம். வடிகட்டிய மழைநீரை சமையலுக்குப் பயன்படுத்திக்கொண்டோம்.
தொடர்ந்த மின்வெட்டுக்களால் இணைய மற்றும் தொலைக்காட்சி இணைப்புகள் முற்றாக துண்டிக்கப்பட்டதும் வெளியே நடப்பது ஏதும் தெரியவில்லை. இடையிடையே கொஞ்ச நேரம் கிடைத்த மின்சார இணைப்பில் ஹீட்டர் போட்டு ஆவி பறக்கக் குளித்துக் கொண்டாயிற்று. வீட்டிலிருந்த சிறு சிறு டார்ச்சுகளில் இருந்து செல்ஃபோன், டேப்லட் என எல்லாவற்றுக்கும் கிடைத்த இடைவெளியில் சார்ஜ் போட்டு வைத்துக் கொண்டோம்.
முதல் நாளே சற்று திட்டமிடலுடன் வாங்கி வந்திருந்த காய்கறிகள், பால், பிரெட் பாக்கெட்டுகள், முட்டை போன்றவற்றோடு வேளைக்கு வேளை சுடச்சுட சாப்பாடும் நடுநடுவே இஞ்சி தட்டிப் போட்ட காரமான டீயோடு ரவா கேசரி என சமைத்து ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.
இருவர் வீடுகளுக்கும் நாளுக்கொரு முறை ஃபோன் செய்து பாதுகாப்புடன் நாங்கள் இருப்பதை சொல்லிக்கொண்டதோடு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என முடிந்தவரையில் ஃபோன் செய்து நலத்தையும் வெள்ள நிலவரத்தையும் அறிந்து கொண்டோம்.
மாதக்கணக்கில் செல்ஃபில் தூங்கிக்கொண்டிருந்த சீட்டுக்கட்டுகளைப் பிரித்து விரல்கள் வலிக்க வலிக்க ரம்மி விளையாடிக்கொண்டோம். மழை குறைந்த வேளையில் அவரவர் கேமராக்களோடு மொட்டை மாடிக்குச் சென்று ததும்பி வழிந்த ஏரியை சந்தோஷத்தோடும், வெள்ளம் சூழ்ந்த தெருக்களை வருத்தத்தோடும் ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டோம்.
உதய்யும் ஓம்ஸ்ரீயும் இரண்டு மணிநேரத்திற்கொரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று சாலையில் போக்குவரத்து ஒழுங்குபடுத்த உதவி செய்து கொண்டிருந்தனர். எனக்கும் கூட ஆசை இருந்தாலும் சேலை/சுடிதார்/லெக்கின்ஸ்/நைட்டியில் மழையில் நனைந்தபடி ரோட்டில் திரிந்து கொண்டிருந்த இளம்பெண் என்றபடி குமுதம் ரிப்போர்ட்டரில் தலைப்புச் செய்தியாக வர விருப்பமில்லாததால் அமைதி காத்தபடி வீட்டிலேயே இருந்துகொண்டேன். 
ஏரியில் எப்போதும் அங்கங்கு மிதந்து கொண்டிருக்கும் பெலிக்கான் பறவைகள் இந்த மழையில் மிக அதிகமாகக் காணப்பட்டன. புறாக்கள் ஜன்னல் ஓரத்தில் அனத்தியபடி அடைந்து கிடந்தன. ஏரியின் மேற்புறத்தில் மீன்கள் மொய்த்துக் கிடந்தன. நீர்மூழ்கிக்காக்கைகள் தண்ணீரைக் கிழித்தபடி  மிதந்து கொண்டும் அடுத்த நொடியில் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. வீட்டைச் சுற்றியிருந்த தென்னை மரங்களில் மொத்த மழைக்கும் சொட்டச் சொட்ட நனைந்தபடி தலை கவிழ்ந்து கிடந்தன காக்கைகள். தென்னம்பாளைகளை கொறித்தபடி அணில்கள் இங்குமங்கும் ஓடிக்கொண்டேயிருந்தன. சிறிய குருவிகளும் தட்டான்களும் வீட்டைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன.
தெருக்களில் எல்லா கடைகள், அலுவலகங்கள், காய்கறி/மளிகைக்கடைகள், மருந்துக்கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களை விட வெள்ளத்தை வேடிக்கை பார்க்கவும் செல்ஃபோனில் ஃபோட்டோ எடுக்கவும் குவிந்திருந்த மக்கள் தான் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்ரமித்திருந்தனர். சாலைக்கு நடுவே பள்ளம் வெட்டி வெள்ளத்தண்ணீர் வழிந்தோட வழி செய்திருந்தனர் நகராட்சி ஊழியர்கள். சாலைத்தண்ணீரும் ஏரி நீரும் கலக்கும் இடத்தில் நிறைய பேர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

நேரடியாக அடைமழையில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருந்தாலும் வாட்ஸப், ஃபேஸ்புக் தாண்டி ஊரிலிருந்து ஒவ்வொரு உறவினர்களாக ஃபோன் செய்து அக்கறையுடன் நலம் விசாரித்தது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

Saturday 24 October 2015

வெள்ளிக்கொலுசு மணி

மாடியில துணி காயப் போடப் போயிருந்தேன். கீழ் வீட்டுல பேச்சுலர்கள் குடியிருக்குறாங்க. அவங்க துணிகள துவைச்சுப் போடுற அக்கா மாடியில துவைச்சுட்டு இருந்தாங்க. நான் நடந்து வர்ற சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாங்க. ரொம்ப அசவுகர்யமா உக்கார்ந்திருந்தது மாதிரி தெரிஞ்சது.
“ஏன்க்கா முக்காலி இல்லையா?”
“இன்னாதும்மா?”
“இல்ல உக்கார்ர பலகை இல்லயான்னு கேட்டேன்”
“இல்லம்மா…இந்தப் பசங்கட்ட சொல்லி வெச்சேன்…ஒரு பலக வாங்கிக் குடுங்கன்னு…இன்னும் வாங்கியார்ல… அதான் துவைக்க கஷ்டமார்க்குது”
”அவங்க வாங்கிக் குடுக்குறவரைக்கும் எங்க வீட்ல வந்து வேணா வாங்கிக்கோங்கக்கா”
“ஆங்ங் ..சரிம்மா ..வாசல்ல கோலம் போட்டிருக்கே அந்த வீடா”
“ம்ம் ஆமா”
”உங்க கொலுசு அழகா இருக்கும்மா…இப்பல்லாம் இந்த மாதிரி பெரிய கொலுசு யாரும் போட மாட்டேங்குறாங்களே….மெல்லிசா மணி வெச்சு போடுறாங்க”
“ம்ம் இது என் கல்யாணத்தப்ப வாங்கினது..அப்டியே போட்டுட்டு இருக்கேன்”
“எங்க ஆயா சொல்லும்…நெறைய சலங்கை வச்சு கொலுசு போடுறவங்க நல்லா கலகலன்னு பேசுவாங்களாம்…உசாரா இருப்பாங்களாம்”
நான் சிரிச்சுக்கிட்டே “அட அப்டியா”
“ஆமா….உங்க கொலுசு சத்தம் கேட்டு தான் நான் திரும்பிப் பார்த்தேன்…இல்லாட்டி யாரு வந்தாலும் தெரியாதுல்ல”
”ம்ம்”
நான் ஆஃபீஸ் போய்ட்டு இருக்கும் போதும் கொலுசு போட்டிருந்தேன். நிறைய சலங்கை இல்லாம கொலுசு மாட்டுற இடத்துல மட்டும் மூணு முத்து வச்ச மாதிரி இருக்கும். நடக்கும் போது கொலுசு சத்தம் வராத மாதிரி நடக்கப் பழகியிருந்தேன்.
அப்போ புதுசா வேலைக்குச் சேர்ந்த ஒரு பெண் ஜால்ரா கொலுசு போட்டுட்டு ஆஃபீசுக்கு வருவாங்க. அவங்க நடந்து போகும் போது ஆஃபீஸ்ல இருக்க நிறையப் பேரோட கவனம் திரும்பும்..ஒருநாள் மேனேஜர் கூப்பிட்டு இவ்ளோ சத்தம் வர்ற மாதிரில்லாம் கொலுசு போட்டுட்டு வராதீங்கன்னு சொல்லிட்டார்…அந்தப் பொண்ணு மறுநாள்ல இருந்து வேலைக்கே வரல.
நான் ஸ்கூல்ல படிக்கும் போது எங்க ஹாக்கி கோச் எங்கிட்ட ”நீ கிரவுண்ட்ல ஹாக்கி விளையாட வந்தியா இல்ல பரதநாட்டியம் ஆட வந்தியா”ன்னு திட்டி இனிமே கொலுசு போட்டு கிரவுண்ட்ல இறங்கக்கூடாதுன்னு சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு.
”எனக்குக் கூட இத மாதிரி ஒண்ணு வாங்கிப் போடணும்னு ரொம்ப நாளா ஆச”
அப்பதான் அவங்க காலைப் பார்த்தேன்…கொலுசு இல்ல.
“உங்க ஆயா தப்பா சொல்லிருக்காங்கக்கா….கொலுசு இல்லாட்டியும் கூட நீங்க கலகலன்னு தான பேசுறீங்க.. நடந்து வர்ற சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தீங்களே அப்போ உசாராத்தான இருக்கீங்க”
அவங்க சிரிச்சுட்டே சொன்னாங்க “ஆமால்ல”
பி.கு : திரும்பவும் கொலுசு சத்தம் வராம நடக்கப் பழகணும் போல tongue emoticon

பாட்டியும் நானும்

பக்கத்து வீட்டுப் பாட்டி அவங்க ஊருக்குப் போயி ரெண்டு மாசம் ஆச்சு...பத்து நாளைக்கு ஒரு தரம் ஃபோன் பண்ணி எப்டி இருக்கேன்னு விசாரிச்சுக்குவாங்க. என்னை விட அவங்க மருமகளைப் பத்தி தான் விசாரிப்பாங்க பேரனை நல்லா பார்த்துக்குறாங்களான்னு...வழக்கமான மாமியார் தான். இன்னைக்கும் ஃபோன் பண்ணிருந்தாங்க.
“எப்டி இருக்க கண்ணு”
“நல்லாருக்கேன் பாட்டி”
“தம்பி நல்லாருக்குதா ...ஆஃபீஸ் போயிருக்கா?”
“ஆமா பாட்டி..நீங்க தாத்தால்லாம் நல்லாருக்காங்களா”
“ஆங்ங் எங்களுகென்ன...இருக்கோம் கண்ணு”
“ம்ம்”
“என் மருமவ வந்தாளா உங்க வீட்டுக்கு”
“நேத்து வந்தாங்க பாட்டி...இன்னைக்கு வரலையே”
“ஆங்ங் அதாங்கேட்டேன்”
“ஏன் பாட்டி என்னாச்சு”
“அது ஒண்ணுமில்லம்மா”
“அட சும்மா சொல்லுங்க பாட்டி”
“இல்லம்மா...ஒண்ணுமில்ல”
“ஏதோ சொல்ல வந்தீங்க...இப்ப ஒண்ணுமில்லங்குறீங்க...சொல்லுங்க பாட்டி”
“அய்ய...அதொண்ணுமில்ல கண்ணு...முந்தாநாளு வீட்டுக்குப் பின்னாடி ஏரியில யாரோ விழுந்து செத்துட்டாங்களாமாம்னு ஃபோன்ல சொல்லிச்சு...அதான் தேவிக்கு தெரியுமான்னு கேட்டேன்...இல்ல அவங்களுக்கு தெரியாது போலன்னு சொன்னா”
“ம்ம்”
“நாந்தான் அவகிட்ட இதெல்லாம் சொல்லாத...அது ஏற்கனவே பயந்து கிட்டு இருக்கும்னு சொல்லிவச்சேன்...அதான் உங்கிட்ட சொல்லிட்டாளோ என்னமோன்னு நெனைச்சு ஃபோன் பண்ணேன்”
“ gasp emoticon "
"அதெல்லாம் நீயொண்ணும் மனசுல நெனைச்சு பயந்துக்காத கண்ணு....நல்லா சாப்புடு...உடம்ப பார்த்துக்க...வச்சுரட்டா”
“ஆங்ங்ங்”
நான் பாட்டுக்கு செவனேன்னு இருந்தேன்....இப்ப ஃபோனப் போட்டு இப்டி பயமுறுத்திருச்சு பாட்டி gasp emoticon

கதை ஒன்று - காட்சி இரண்டு

கி.ரா-வின் “கோபல்ல கிராமம்” வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
முதல் மரியாதை திரைப்படத்தில் அனைத்துக் காட்சிகளும் சிறப்பாக இருந்தாலும் தண்ணீர் குடிக்க ஆற்றுக்குள் இறங்கும் ரஞ்சனி பொட்டுத் தங்கத்துக்காகக் (கம்மல்) கொலை செய்யப்படும் போது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடி கொலைகாரனின் கால் கட்டை விரலைக் கடித்து துண்டிப்பதாக வரும் காட்சியைப் படம் பார்த்த எவருமே நிச்சயம் மறந்திருக்க முடியாது.
கி.ரா வின் “கோபல்ல கிராமத்திலும்” இப்படியான ஒரு காட்சி வருகிறது. தண்ணீர் தாகத்தை தணித்துக் கொள்ள குளத்தில் இறங்கி நீர் அருந்தும் பெண்ணின் பாம்படங்களைக் கொள்ளையடிக்க முயற்சிக்கும் ஒருவன் அவளைத் தண்ணீரில் அமிழ்த்தி கொலை செய்து பாம்படங்களை அபகரித்துக் கொள்கிறான். அந்தப் பெண் உயிர்ப் போராட்டத்தில் கொலைகாரனின் வலது கால் கட்டை விரலைக் கடித்த படியே உயிரை விடுகிறாள். பின்னர் பிணத்தின் வாயிலிருந்து கொள்ளைக்காரனின் கால் கட்டை விரலை கிருஷ்ணப்ப நாயக்கர் அறுத்து எடுப்பதாக அந்தக் காட்சி அமைந்திருக்கும்.
”முதல் மரியாதை” திரைப்படம் 1985-ம் வருடம் திரைக்கு வந்ததாக விக்கிப்பீடியா சொல்கிறது.
“கோபல்ல கிராமம்” நாவலின் முதல் பதிப்பு 1976-ம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.
( ஒருவேளை “கோபல்ல கிராமம்” வாசித்த பாதிப்பில் பாரதிராஜா அந்தக் காட்சியை படத்தில் சேர்த்தாரா என்னன்னு தெரியல)

கீழடி - நம் முன்னோர்களின் காலடி

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த நம் தமிழ் மக்களின் வாழ்விடத்தை சற்றும் சலனமேயின்றி தன்னுள் புதைத்து வைத்தவாறு அன்றைய வரலாற்றின் மவுன சாட்சியாய் பரந்து கிடந்தது அந்த தென்னந்தோப்பு. கால் பதிக்கும் இடமெல்லாம் சிதறிக் கிடக்கும் மண்பாண்டத் துண்டுகளில் மறைந்து போன அம்மக்களின் பசி தீர்த்த கலயங்கள் எத்தனையோ !!!! இத்தனை ஆயிரம் வருடங்கள் கழித்தும் இந்த பூமிக்குப் பங்கமின்றி அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களுக்கு இன்றைய தினத்தில் விலை மதிப்பே இல்லை.
மண்பாண்டங்களின் வடிவமைப்பும், உறுதியும், வேலைப்பாடுகளும் இத்துனை வருடங்கள் தாண்டியும் சிதையாமல் இருப்பதில் அதை வனைத்தவர்களின் உழைப்பும், ஈடுபாடும், அர்ப்பணிப்பும் பிரமிக்க வைக்கிறது. அவர்கள் அணிந்திருந்த ஆபரணத்தில் தங்கமும் வைரமும் இல்லை தான்.... கண்ணாடியிலும் களிமண்ணிலும் கண்ணைக் கவரும் வகையில் கலைநயத்துடன் ஆபரணங்களை வடிவமைக்கத் தெரிந்தவர்களுக்கு தங்கம் வைரத்தின் தேவையென்ன இருந்திருக்கப் போகிறது?. அன்றைக்கு நம் பூட்டி அணிந்திருந்த அந்த நகைகள் தான் இன்றைய நவீன நங்கையரின் நாகரீக அடையாளமான டெரகோட்டா நகைகள். வரலாறு இந்த இடத்தில் திரும்பித்தான் இருக்கிறது….
கட்டிடங்களுக்கு உபயோகப்படுத்தியிருக்கும் செங்கற்களின் அதிக எடையும் அளவும் அவற்றின் கட்டமைப்பும் அதீத பலத்துடன் இன்றும் கம்பீரமாய் இருக்கிறது. உறைகிணறுகள் , தரைப்பரப்பு, தண்ணீர்த்தொட்டிகள் , தானியங்கள் சேமித்து வைக்கும் குலுதாடி , இரும்பு ஆயுதங்கள், சிட்டாங்கல் விளையாடப் பயன்படுத்தும் வட்டவடிவ தட்டைக்கல், மண்பொம்மைகள், தந்தம், கண்ணாடியில் செய்யப்பட்ட ஆபரணங்கள் எனப் பலவற்றையும் காண முடிந்தது.
இந்த வருடம் மழைக்காலம் தொடங்குவதற்குள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இந்த இடங்கள் அனைத்தும் மறுபடி மூடப்படும் என அங்குள்ள ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இத்தனைப் பேரின் முயற்சியாலும் உழைப்பாலும் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த அரிய பொக்கிஷத்தை அதிக விலை கொடுத்தேனும் பாதுகாக்காமல் மறுபடி ஏன் மூடுகிறார்கள் என விளங்கவேயில்லை. அரசாங்கம் இந்த இடத்தை தன்னகப்படுத்தி மேலும் ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கப்படுத்தினால் இன்னும் பலப்பல அரிய பொருட்களும் நம் தமிழ் வரலாற்றின் தொன்மையும் தெளிவாக உலகுக்கு தெரியும் என்பதில் ஐயமேதும் இல்லை.
அடுத்தமுறை இங்கு வந்தால் இவற்றை மறுபடி பார்க்க முடியுமா என்ற சிந்தனையோடு அந்த தென்னந்தோப்பை விட்டு வெளியேறுகையில் மனதில் தோன்றியது ஒரு விஷயம் தான். அதிகபட்சம் இரண்டே இரண்டு வருடங்களில் நம் வாழ்நிலத்தை பிளாஸ்டிக் பொருட்களால் எளிதாக சீரழித்துக் கொள்ள முடிகிற நமக்கு இந்த வரலாறு சொல்லும் பாடம் என்ன தெரியுமா? நமக்குப் பின்னான சந்ததிக்குமானது தான் இந்த நிலமும் நீர்ப்பரப்பும்….இயற்கை கொடுத்த எதையுமே அழிக்கும் உரிமை மனிதனுக்கு கிடையாது. நம் முன்னோர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ள அதே சமயத்தில் நமக்குப் பின்னான அனைத்து உயிர்களும் வாழக்கூடியதாய் இந்த பூமியை விட்டுச் செல்வதில் தான் நாம் வாழும் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தம் உள்ளது.
கீழடி – நம் முன்னோர்களின் காலடி

ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல் நிகழ்வு

”ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல்” நிகழ்வு நேற்று மாலை சென்னை தி.நகரில் “வினோபா அரங்கம், தக்கர் பாபா வித்யாலயாவில் மாலை 4 மணி அளவில் தொடங்கியது.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர் திரு.பிருத்விராஜ், மருத்துவர் திரு.சிவபிரகாஷ் ஸ்ரீனிவாசன் மற்றும் மருத்துவர் திருமதி தேவகி. சாத்தப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்ள வந்திருந்தனர். குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக அரங்கின் வெளியே இருபுறமும் பெரிய அளவிலான சறுக்கு பலூன்கள் அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் விளையாடத் துவங்கினர். நிகழ்வில் தன்னார்வத்துடன் வந்திணைந்த இளைஞர்கள் அவர்களை கவனித்துக் கொண்டதால் பெற்றோர்கள் இலகுவாக அரங்கத்தினுள் பொருந்தி இருக்க முடிந்தது.
“அரும்பு அறக்கட்டளை”யின் நிர்வாகி திருமதி.லக்‌ஷ்மி பாலகிருஷ்ணனின் துவக்க உரையுடன் நிகழ்வு இனிதே தொடங்கியது. ”ஆட்டிச நிலையாளர்களின் பெற்றோர் ஒன்றுகூடல்” நிகழ்வின் காரணத்தையும், அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் மிகச் சிறப்பாக எடுத்துரைத்துப் பேசினார் திருமதி.லக்‌ஷ்மி பாலகிருஷ்ணன்.
அடுத்ததாகப் பேசிய “அரும்பு அறக்கட்டளை”யின் மற்றொரு நிர்வாகியும், “ஆட்டிசம் சில புரிதல்கள்” மற்றும் “சந்துருவுக்கு என்னாச்சு” போன்ற ஆட்டிச நிலையாளர்களை முன்வைத்து எழுதப்பட்ட நூல்களின் ஆசிரியருமான திரு.யெஸ்.பாலபாரதி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதன் பின்புலத்தையும் ஒரு பெற்றோராக தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். நடிகர் திரு.பிருத்விராஜ் பற்றிப் பேசும் போது ”ஒரு முறை பிருத்விராஜ் விமானப்பயணம் மேற்கொண்ட போது ஆட்டிசநிலையில் இருந்த அவர் மகனுக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதை தொடந்து முனைப்புடன் அரசுடன் போராடி”ஆட்டிச நிலையாளர்கள் விமானத்தில் பயணம் மேற்கொள்ள தடையேதும் இல்லை” என்ற நீதிமன்ற தீர்ப்பினை வெற்றிகரமாகப் பெற்றுத் தந்திருக்கிறார் என்பது குறிப்பிட்டதோடு இன்றைக்கு ஆட்டிச நிலையாளர்கள் விமானத்தில் இலகுவாகப் பயணிக்க முடிவதின் பெரும்பங்கு திரு.பிருத்விராஜ் அவர்களையே சாரும்” என்று கூறியது அங்கு வந்திருந்த பலருக்கும் வியப்பான , பாராட்டத்தகுந்த செய்தியாக இருந்தது.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் திரு.பிருத்விராஜ் அவர்கள் பேசும் போது அவருடைய மகனுக்கு வயது 20 என்றும், இருபது ஆண்டுகளுக்கு முன் ஆட்டிசம் என்ற சொல்லே பரவலாக அறியப்படாத காலத்தில் இருந்து இன்றுவரை தான் சந்தித்து வந்த சோதனைகளையும் அவற்றை வெற்றிகரமாகக் கையாண்டதையும் தன்னுடைய மகனின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒவ்வொரு நாளும் புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொண்டு அவர் செய்யும் செயல்களும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், சராசரி குழந்தைகளைப் பெற்ற பெற்றோருக்கு இருக்கும் எவ்விதக் கவலையும் தனக்கு இல்லையென்றும் தன் மகன் ஒரு ஆட்டிச நிலையாளர் என்பதை தான் எல்லாவகையிலும் ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன் வாழ்வதாகவும் கூறியது அங்கு வந்திருந்த அனைத்து பெற்றோர்களுக்கும் மிகுந்த ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பதாக இருந்தது.
அடுத்ததாகப் பேசிய மருத்துவர் திரு.சிவப்ரகாஷ் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேச்சும் , மருத்துவர் திருமதி.தேவகி சாத்தப்பன் அவர்களின் உரையும் வந்திருந்த பெற்றோரின் மனத்தடைகளை உடைத்ததோடு வாழ்வின் இடர்களை உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொண்டு வாழப் பழகிக் கொண்டால் ”வாழ்தல் இனிதே” என்பதை தெளிவாக உணர வைத்தது.
நிகழ்வின் இனிய திருப்பமாக, ஆதித்யா தொலைக்காட்சியின் வழி நாம் அனைவரும் நன்கறிந்த “கலக்கப் போவது யாரு” நிகழ்ச்சி பிரபலம் திரு.வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்கள் தனி ஒருவனாக மேடையேறி நகைச்சுவை விருந்தளித்தார். அரங்கம் முழுவதையும் கைதட்டலாலும் சிரிப்பலைகளாலும் நிரம்பச் செய்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்கள் சக பெற்றோர்களின் அன்றாடப் பிரச்சனைகளையும் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினர்களின் ஆலோசனையையும் பெற்று இதுபோல மேலும் பல நிகழ்வுகளின்வழி ஆட்டிசநிலையாளர்களின் பெற்றோரை ஒன்றிணைக்க வேண்டுமாறு அரும்பு அறக்கட்டளையின் நிர்வாகிகளான திரு.யெஸ்.பாலபாரதி, திருமதி.லக்ஷ்மி பாலகிருஷ்ணனை உரிமையுடன் கேட்டுக்கொண்டு நெகிழ்வோடு விடைபெற்றனர்.
ஆட்டிசம் குறித்த புரிதல் ஆட்டிசநிலையாளர்களின் பெற்றோர் மட்டுமன்றி மற்ற அனைவருக்குமே பரவலாகச் சென்றடைய வேண்டியதன் அவசியம் இந்நிகழ்வின் வாயிலாகத் தெளிவாகத் தெரிகிறது. ஆட்டிசநிலையாளர்கள் எந்தவொரு பொது இடத்திலும் இயல்பாகப் பொருந்தி இருக்குமாறு சூழலை மாற்றுவதில் சமுதாயத்தில் அனைவருக்கும் நிச்சயம் பங்கு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான வாழ்வு எல்லாருக்கும் பொதுவானது என்பதைத் தெளிவாக உணர்த்திய ஒரு சிறப்பான மன நிறைவான நிகழ்வின் தொகுப்பாளராக சிறிய அளவில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.
பி.கு: நண்பர்கள் இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சுட்டினைப் பகிர்ந்து பலருக்கும் சென்றடைய உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி !!!

Monday 17 August 2015

கீதாவும் நானும்

கீதா : சித்தி இன்னைக்கு ஸ்கூல்ல நான் ப்ரீத்திய அடிச்சிட்டேன்
நான் : ஏண்டி அடிச்ச?
கீதா: ஆங்ங் ...அவ என்னைய கருவாச்சின்னு சொன்னா
நான்: அதுக்காக அடிப்பியா... அப்டில்லாம் பண்ணக்கூடாது
கீதா: .......
நான்: அவ உங்க மிஸ் கிட்ட சொன்னா என்ன பண்ணுவ?
கீதா: மிஸ்...மிஸ்...அவளா சுவத்தில முட்டிக்கிட்டு நான் அடிச்சேன்னு சொல்றா மிஸ்னு சொல்லுவேன்
நான்: அடிச்சதே தப்பு ...இதுல பொய் வேறயா...இரு நாளைக்கு உன்ன ஸ்கூல்ல இருந்து கூப்பிட வரும்போது உங்க மிஸ் கிட்ட சொல்றேன்
கீதா :........
நான்: சரி...டிஃபன் பாக்ஸ எடு....ஃபுல்லா சாப்பிட்டியா ?
கீதா: ம்ம்ம் சாப்ட்டேன்
நான்: இதென்ன பீட்ரூட் கலர்ல... லெமன் ரைஸும் உருளக்கிழங்கும் தான உங்கம்மா குடுத்து விட்டா?
கீதா: அது பீட்ரூட் தான் சித்தி...ப்ரீத்தி கொண்டு வந்துருந்தா
நான்: பார்த்தியா... சாப்பாடெல்லாம் ஷேர் பண்ணி சாப்பிடுறீங்கல்ல....இனிமே அவள அடிக்காத...என்ன?
கீதா: ம்ஹும்..அவ என்ன கருவாச்சின்னு சொன்னா நான் அடிப்பேன்
நான்: சரி அப்போ அவகிட்ட பேசாத....சாப்பாடு வாங்கி சாப்பிடாத
கீதா: ஆங்ங்ங் ....எதுக்கு ??? ஷேர் பண்ணி தான் சாப்புடுவோம்.. அவ என் ஃப்ரெண்டு சித்தி ....
நான்: ஷப்பா....அப்போ எதுக்குடி சண்ட போடுறீங்க?
அக்கா : இரு..இப்ப நான் கேக்குறேன் பாரு.....ப்ரீத்தி எதுக்கு உன்ன கருவாச்சின்னு சொன்னா?
கீதா: நான் அவள வெள்ளச்சின்னு சொன்னேன்...அதான் அவ என்ன கருவாச்சின்னு சொன்னா
நான்: அடிங்ங்ங் அப்போ நீ தானா முதல்ல ஆரம்பிச்சது...அத சொல்லவேயில்ல
கீதா: நீங்க தான் கேக்கவே இல்லையே....அம்மா கேட்டாங்க சொன்னேன்...
gasp emoticon gasp emoticon gasp emoticon gasp emoticon

Thursday 16 July 2015

பாகுபலி

பாகுபலி.......
வாரத்தின் முதல் நாளில் எந்த தியேட்டரிலும் சினிமா பார்த்திராத எனக்கு நேற்று (திங்கள் கிழமை) தேவி தியேட்டரில் நிறைந்திருந்த மக்கள் கூட்டம் முதல் ஆச்சர்யம். வெற்றிப்பட இயக்குனர் என்ற முத்திரையும், டிரெய்லரில் வெளிப்பட்ட படத்தின் பிரம்மாண்டமும், படம் பற்றிய பரபரப்பான செய்திகளும் மக்களின் ஆர்வத்தை தூண்டி தியேட்டருக்கு இழுத்து வந்திருப்பதில் வியப்பேதுமில்லை. பெரும்பாலும் குடும்பம் குடும்பமாக மக்களைக் காண முடிந்தது.
“தேவி பாரடைஸ்” அரங்கம் நிறைந்திருந்தது. “D"வரிசையில் நடு”நிலையாக”(!!) உட்காரும்படி சீட் கிடைத்தது படத்தை ரசிக்க வைத்த முதல் காரணம் tongue emoticon. பிரபாஸ், ராணா அறிமுகக் காட்சிகளை விட ரம்யாகிருஷ்ணன், தமன்னா, அனுஷ்கா திரையில் தோன்றும் காட்சிகளில் விசில் பறக்கிறது. (வயசானாலும் உங்க அழகும் கம்பீரமும் இன்னும் குறையல ரம்யா மேடம்ம்ம்…..♥). இல்லாத காலரை தூக்கி விட்டுப் பெருமை கொண்ட கொஞ்ச நேரத்திலேயே அந்த விசிலை சத்யராஜுக்கும், (ஒரேயொரு காட்சியில் வந்தாலும்) டைரக்டர் ராஜமௌலிக்கும் சரிசமாகப் பிரித்துக் கொடுத்து பைசல் பண்ணி விடுகின்றனர் ரசிகக் கண்மணிகள்.
தமிழ், தெலுங்கு ஹீரோயிச படங்களில் ஹீரோ ஹெலிகாப்டர் மேல் தாவுவதையும், உயரமான கட்டடத்திலிருந்து ரயில் மீது குதிப்பதையும், ராட்சச பலூன் மீது பறந்து பறந்து சண்டையிடுவதையும் பார்த்துப் பழகிப் போன நம் கண்கள் பிரபாஸ் அத்தனைப் பெரிய சிவலிங்கத்தை ஒற்றை ஆளாகத் தூக்குவதையும் …..மலை விட்டு மலை தாவுவதையும், பாறைகளை உடைப்பதையும், 100 அடி சிலை கீழே விழும் முன் அதன் கயிற்றை இழுத்து நிறுத்துவதையும், எதிராளிகளை சிதறடிப்பதையும் ஏகமனதாக மன்னித்து ஏற்றுக் கொள்கிறது. (அவ்வப்போது சிரிப்பும் வருவதை தவிர்க்கமுடியவில்லை என்பது உண்மை).
பிரபாஸை விட உயரமாகவும் உறுதியாகவும் இருக்கும் ராணா அதிக ஸ்கோர் எடுத்து ஆட்டக்கதாநாயகனாக அரும்பாடுபடுவதில் நியாயம் இருக்கவே செய்கிறது. கதைப்படி அவரின் அவசரப்புத்தியின் காரணமாக (வேறு வழியின்றி) வில்லனாக சித்தரிக்கப்பட்டாலும் ராணா ரசிக்கவே வைக்கிறார்... wink emoticon
ஹீரோக்கள் தவிர்த்து பிரதான கதாப்பாத்திரங்கள் அனைவரும் தமிழ்கூறு நல்லுலகம் அறிந்த முகங்களாயிருப்பது கூடுதல் பலம். கட்டப்பா பாத்திரத்தில் நம்ம நெட்டப்பா சத்யராஜ். ஒரே நேரத்தில் மெய்க்காப்பாளனாக வீரத்துடன் சண்டையிடுவதும் மறுநிமிடம் அடிமையாக அடக்கி வாசிப்பதுமாக அப்ளாஸ்களை அள்ளிக்கொள்கிறார். . நாசர் பாத்திரமும் ஆஸம்…ஆஸம்…தமன்னா வழக்கம் போல மெழுகுப் பொம்மை.
படத்தின் பிரம்மாண்டம் மிரட்டியிருக்கிறது. நிறைய வெளிநாட்டுப் படங்கள் பார்ப்பவர்களுக்கு இது பழகியிருந்தாலும் சராசரி சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் புது அனுபவம் கிடைக்கும். வேற்றுமொழி பேசும் எதிர்படைத் தலைவன் நாக்கைச் சுழற்றிப் பேசும் வசனக் காட்சிகளில் தியேட்டரில் ஆங்காங்கே கிண்டலும் கேலியும். பாடல் காட்சிகளில் பலர் வெளியேறிச் செல்வதையும், அமர்ந்திருப்பவர்கள் செல்போனில் பேசிக்கொள்வதையும் பார்க்க முடிகிறது. வசனங்களில் கையாளப்பட்ட கவனம் பாடல்களில் தவறி இருக்கிறது. படத்துடன் பாடல்கள் ஒட்டவேயில்லை. படத்தில் சில இடங்களில் வசனங்களைக் கூர்ந்து கவனிக்க விடாமல் காட்சிகளின் பிரம்மாண்டம் முந்திக்கொள்கிறது. அதேபோல சில லாஜிக் மீறல்களையும் அதுவே சமன்படுத்தி விடுவதை உணர முடிகிறது.
ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பல புராணக்கதைகளுக்கு மூலக்கருவாகப் பெண்ணே இருப்பதை இந்தப் படத்திலும் நினைவூட்டியிருக்கிறார் இயக்குனர். முதல்பாதியில் ரம்யாகிருஷ்ணனின் ஆதிக்கத்தைப் போல இரண்டாம் பாதியில் அனுஷ்கா களமாடியிருப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. விமர்சனங்கள், சிறு குறைகள், லாஜிக் மீறல்கள் அனைத்தும் படத்தின் இரண்டாம் பாதியில் சரிசெய்யப்படும் என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் “பாகுபலி” – பிரம்மாண்ட “பலசாலி” (மற்றபடி அவரவர் நாக்கு அவரவர் ருசி)
************************************************************************************************
(டிஸ்கி :படம் முடிந்து வெளியே வரும்போது காதில் விழுந்த உரையாடல்கள் ...
”புது டைரக்டரா”
”இல்ல ...”ஈ”ய வச்சு ஒரு படம் வந்திச்சே.... ஜீவாவும், நயன்தாராவும் நடிச்ச படம்...அந்த டைரக்டராம்”
......................................................................................................................................
“டைரக்டர் பேரு என்ன?”
“பேரு என்னவோ வருமே...ஆங்ங்ங் ....சந்திரமவுலி”
.........................................................................................................................
“ஹீரோ யாரு”
“சிரஞ்சீவி மகனாம்”
......................................................................................................................................
”தமிழ்ல எந்த ஹீரோ நடிச்சா நல்லாருக்கும்”
“வேற யாரு விஜய் தான்”
” …..(கெட்ட வார்த்தை) இதுக்கு அவரு படமே எடுக்க வேண்டாம்டா

Monday 22 June 2015

அகத்தியர் மருத்துவக் குறிப்பு

இன்னைக்குக் காலையில "Z"தமிழ் டீ.வியில ஒரு மூலிகை மருத்துவ நிகழ்ச்சியில வல்லாரையையும், பொன்னாங்கண்ணியையும் அரைக்க சொல்லிட்டு இருந்தாங்க. சரி எதுக்குன்னு பார்ப்போமேன்னு கொஞ்ச நேரம் கவனிச்சுட்டு இருந்தேன். மேலே சொன்ன ரெண்டு மூலிகை இலைகளையும் சுத்தம் பண்ணி அரைச்சுட்டு அந்தக் கலவையில, நைஸா அரைச்ச மிளகு ஏலக்காய்,அன்னாசிப்பூவைச் சேர்த்து அதில பசுநெய் மிதக்க மிதக்க ஊத்திக் கிளறி அதுக்கும் மேல ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நல்லா கலக்கிட்டு அந்தக் கலவையை அப்படியே அடுப்புல வச்சு கிளறிட்டு இருந்தாங்க.
அப்போ அந்த மூலிகை மருத்துவர் ஒரு பாடல் வரிகளைச் சொல்லி அது அகத்தியர் எழுதிய மூலிகைக் குறிப்புன்னும் அதை யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு எழுதி வச்சுட்டுப் போயிருக்கதாகவும் சொன்னாரு. யாருக்கும் தெரியக் கூடாதுன்னா அப்புறம் எதுக்கு எழுதி வைக்கணும்னு புரியல. அதைவிட இன்னொரு விஷயம் என்னன்னா அதை யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு அந்த நிகழ்ச்சியிலயே ஏன் சொல்றாங்கன்னும் புரியல. (அதனால நானும் இத சொல்லல. நீங்களும் கேக்கல. நானும் மறந்துட்டேன். நீங்களும் மறந்துடுங்க ஃப்ரெண்ட்ஸ் wink emoticon )
ஆங்ங் .... அடுப்புல அந்தக் கலவையைக் கிண்டிக்கிட்டே இருந்தாங்கல்ல.... அதோட சீனியச் சேர்த்தாங்க. அதுவும் கொஞ்சமா இல்ல. அதிகமான அளவு இனிப்பு தேவைப்படுற ஒரு தின்பண்டத்துக்கு சேர்க்குற மாதிரி அவ்ளோ சீனி. ஒரு வழியா கெட்டியானதும் அடுப்பை நிறுத்திட்டு அதை ஒரு கிண்ணத்துல போட்டு காட்டினாங்க. அந்த மருந்தை சாப்பிட்டா பலவிதமான நோய்கள் குணமாகும்னும் பசுநெய் சேர்த்திருக்கதால சீக்கிரம் கெட்டுப் போகாதுன்னும் சொன்னாங்க. நியாயப்படி பார்த்தா அவங்க சேர்த்த நெய்யோட அளவுக்கும் சீனியோட அளவுக்கும் சர்க்கரை, ரத்தக்கொதிப்பு இன்ன பிற நோய்கள் இல்லாதவங்களுக்குக் கூட அதெல்லாம் கண்டிப்பா வந்துடும்.
இதுல இன்னொரு முக்கியமான டவுட்டு என்னன்னா ”அகத்தியர் எழுதி வச்ச மூலிகை மருத்துவக் குறிப்பு”ன்னு இதைச் சொல்றாங்க. அகத்தியர் காலத்துல எல்லாம் சீனி இருந்திச்சா? தேன், வெல்லம், பனங்கல்கண்டு, கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை இதெல்லாம் தான அந்தக் காலத்துல இனிப்புக்காகச் சேர்க்குற பொருட்களா இருந்திருக்கும் ? இதுல எங்க இருந்து சீனி வந்திச்சு ??? எனக்குப் புரியல..

Saturday 6 June 2015

சரக்கொன்றை

எக்மோர் மாண்டியத் ரோடில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்த்த போது தினமும் காசா மேஜர் ரோட்டிலுள்ள டான் பாஸ்கோ ஸ்கூலைக் கடந்து செல்வது வழக்கம்.
முதல்நாள் இரவு மழையில் கழுவி விடப்பட்டு பளிச்சென்றிருந்த கருநிறத் தார்ரோட்டில் டான் பாஸ்கோ ஸ்கூல் காம்பவுண்டுக்குள் இருந்த மரத்தின் மேலிருந்து அன்றைக்கு மலர்கள் உதிர்ந்து கிடந்தது அழகான நிறக்கலவையோடு வரையப்பட்ட ஓவியம் போலிருந்தது.
அத்தனை அழகான மலர்களை அதுவரை நின்று நிதானித்து கவனிக்காத என் ரசனையைச் சபித்தவாறு அண்ணாந்து பார்க்கையில் தங்கம் போன்ற தகதகப்போடு மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாய் மேல்வரிசையில் மலர்ந்த பூக்களும் கீழ் வரிசையில் மலராத மொட்டுக்களுமாய் இலைகளேயற்று மரம்முழுக்கப் பூக்களாயிருப்பதை அன்று தான் முதல் முதலாய் அதிசயித்துப் பார்த்தேன்.
அப்போதே ஆர்வம் மேலிட அந்த மரத்தின் பேரைத்தெரிந்து கொள்ள விரும்பினாலும் யாரிடம் சென்று கேட்பதெனத் தெரியவில்லை. அவ்வளவு பரபரப்பான அந்த ரோட்டில் இருபக்கமும் விரைந்து சென்று கொண்டிருந்தவர்கள் யாருமே அந்த மரத்தையோ மலர்களையோ ரசித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை உணர்ந்தபோது என் ரசனையின் மீது முதன்முதலாக மெல்லிய ஒரு சந்தேகம் எழுந்தது.
மறுபடி அண்ணாந்து பார்க்கையில் சினிமாக் காட்சிகளில் வருவது போல் மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த என் முகத்தின் மீதே இரண்டு பூக்கள் விழ எனக்கு தாளாத சந்தோஷம் தொற்றிக் கொண்டது. அப்படியே அந்த மலர்களைப் பற்றி ஒரு கையில் வைத்துக் கொண்டு மறுகையில் ஏற்கனவே வைத்திருந்த செல்ஃபோனையும் கர்ச்சீஃபையும் ஹேண்ட் பேக்கில் போட்டு விட்டு மிகக் கவனமாக அவ்விரு மலர்களும் கசங்காமல் உள்ளங்கைக்குள் பொதிந்து வைத்துக் கொண்டு ஆஃபீசுக்கு விரைந்தேன்.
இந்த மரத்தின் பெயர் எதுவாக இருந்தாலும் அது நிச்சயம் மாதவன் சாருக்குத் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையோடு அவர் வருகைக்காகக் காத்திருந்தேன். மாதவன் சார் எங்கள் அலுவலகத்தின் மேனேஜர்.
மாதவன் சாருக்கு வயது 55க்கும் மேலிருக்கும். பூர்வீகம் திருநெல்வேலி. சிறு வயதிலேயே குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறிய அய்யங்கார் குடும்பம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு அருகில் வீடு. இவரோடு சேர்த்து நான்கு தம்பிகளும் இரண்டு தங்கைகளும் கொண்ட அந்தக் குடும்பத்தில் நன்றாகப் படித்து வங்கியில் பொறுப்பான பதிவியிலமர்ந்து ஒவ்வொருவராகக் கரை சேர்த்த கதையை என்னிடம் அவர் சொல்லக் காரணம் குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலையின் காரணமாய் அத்தனைச் சிறிய தென்மாவட்டத்து ஊரிலிருந்து இந்தப் பெருநகரத்துக்குக் வேலைக்கு வந்தவள் என்பதே. என் மீது எப்போதும் தனிப்பாசம் அவருக்கு.
என் பொறுமையைச் சோதித்தவாறு 11 மணிக்கு மேல் ஆஃபீஸ் வந்து தன்னுடைய சீட்டை அடைந்து அப்போது தான் உக்காரப் போனவரிடம் “சார் ஒரு நிமிஷம்” என்றவாறு அந்தப் பூக்களை அவர் மேசையின் மீது வைத்து “ இந்தப் பூ பூக்குற மரத்தோட பேரு என்னன்னு உங்களுக்குத் தெரியுமா சார்?”
சட்டைப் பைக்குள்ளிருந்த கண்ணாடியைத் தேடி எடுத்து மாட்டிக் கொண்டு மேசை மேலிருந்த பூக்களை உற்றுப் பார்த்துக் கொண்டு.... ஒரு நிமிடம் கழித்து அதைக் கையில் எடுத்து திருப்பித் திருப்பிப் பார்த்துப் பின் மெதுவாக முகர்ந்து “இது எங்க இருந்து எடுத்துட்டு வந்தேம்மா” எனக் கேட்டார்.
“சார் டான் பாஸ்கோ ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ள இருக்கு சார் இந்த மரம். அதை ஒட்டியிருக்க ப்ளாட்ஃபார்ம்ல நான் நடந்து போய்ட்டு இருக்கும் போது தான் இந்தப் பூவைப் பார்த்தேன். அப்புறம் அந்த மரத்தைப் பார்த்தா மரம் ஃபுல்லா கொத்துக் கொத்தா மஞ்ச மஞ்சேன்னு பூவாப் பூத்திருக்கு சார்....அவ்ளோ அழகாருக்கு. ஆனா இந்த மாதிரி ஒரு மரத்த நான் எங்கேயுமே இதுவரைக்கும் பார்த்ததில்ல. அதான் பேர் தெரிஞ்சுக்கலாம்னு கேக்குறேன்”
“ம்ம்ம் இதுக்குப் பேரு சரக்கொன்றை மரம்”
“சரக்கொன்றையா”
“ஆமா. கொன்றை மரத்தோட ஒரு பிரிவு. சரம் சரமா பூத்துக் குலுங்குறதால சரக்கொன்றைன்னு பேரு. பூவப் பார்த்து எனக்குக் கண்டுபிடிக்க முடியல. ஆனா டான் பாஸ்கோ ஸ்கூல் காம்பவுண்ட்ல சரக்கொன்றை மரம் இருக்கது எனக்குத் தெரியும்மா”
“அட....பேரே அழகாருக்குல்ல சார்...”சரக்கொன்றை” “சரக்கொன்றை”
என்னுடைய சந்தோஷம் அவருக்கு வியப்பாக இருந்திருக்க வேண்டும். ஒரே ஒரு ஆண் பிள்ளையைப் பெற்று வளர்த்து தற்போது அவரும் வெளிநாட்டில் பணிபுரிவதால் ஒரு சாராசரி இந்தியத் தகப்பனைப் போல பெண் பிள்ளை இல்லையென்ற ஏக்கம் அவருக்கு எப்போதும் உண்டு. அதனாலேயே என் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டவர். ஆரம்ப காலத்து சென்னை வாழ்வின் மோசமான பொருளாதாரத் தருணங்களைக் கடக்கப் பெரு உதவியாய் இருந்தவர்.
தற்போது மகனுக்குத் திருமணம் முடிந்து அவர் வெளிநாட்டிலிருந்து பெங்களூருக்கு பணி மாற்றுதல் வாங்கி விட மாதவன் சாரும் அவர் மனைவி காந்திமதி அம்மாளும் சென்னை வீட்டை விற்று விட்டு மகன் மருமகளுடன் வசித்து வருகின்றனர். அவ்வப்போது ஃபோன் பண்ணி என் நலம் விசாரித்துக் கொள்வார்.
இரண்டு நாட்களுக்கு முன் வேளச்சேரி 100 அடி ரோட்டில் உதய்யுடன் பைக்கில் போகும் போது தான் கவனித்தேன்.....நீல்கிரீஸ்க்கு முன்னால் நலைந்து கட்டிடங்களுக்கு முன்னாலுள்ள ஒரு வீட்டில் சற்று வெளிர் மஞ்சள் நிறத்தில் சரம்சரமாய் பூத்துக் கிடந்த சரக்கொன்றை மரத்தை... கண்களை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டே வந்தேன். காட்சி மறந்ததும் இறுகக் கண்களை மூடிய போது மூடிய இமைகளுக்குள் மஞ்சள் நிறமும் மாதவன் சாரும் வந்து நின்றனர்.

Thursday 14 May 2015

பக்கத்து வீடு


மனதோடு பேசலாம்

தந்தி டி.வியில் மனநல மருத்துவர் டாக்டர்.ருத்ரன் அவர்களோடு பெண் தொகுப்பாளர் ஒருவர் தொலைபேசி வாயிலான நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். ருத்ரன் அவர்கள் எங்கள் பள்ளிக்கு ஒருமுறை வந்திருந்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலான அவரது அன்றைய பேச்சுக்கு நிமிடத்துக்கு நிமிடம் அரங்கம் கைதட்டலால் அதிர்ந்து கொண்டிருந்ததும் நிகழ்ச்சி முடிந்து அவர் வெளியே வந்ததும் நாங்கள் முண்டியடித்துச் சென்று அவரிடம் கையெழுத்து பெற்றதும் நினைவுக்கு வந்தது.
இன்றைய நிகழ்ச்சியில் நேயர் ஒருவர் பேசியது “சார்...எனக்கு ஒரு அண்ணன் இருக்கான். நல்லா தான் இருந்தான் ஆனா இப்போ கொஞ்ச நாளா சரியில்ல. காலேஜுக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டான். தண்ணியடிச்சுட்டு ஊரைச் சுத்திட்டு இருக்கான். எங்க வீட்ல யாரோடவும் ஒட்ட மாட்டேங்குறான். சில நேரம் நல்லா பேசுறான். பல நேரம் கடுகடுன்னு இருக்கான். ஃப்ரெண்ட்சுங்களோட சேர்ந்து சுத்திட்டு வீட்டுக்கு சரியா வரமாட்டேங்குறான் சார். எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியல சார்”
தொகுப்பாளர் இப்போது டாக்டர் ருத்ரனிடம் தொலைபேசியில் பேசியவர் சொன்னதை திரும்பவும் ஒருமுறை சுருக்கமாகக் கூறி அதற்கான தீர்வு என்ன என்று கேட்கிறார். (டாக்டர் ருத்ரனும் அந்த நேயர் பேசியதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தார் என்பது வேறு விஷயம் 
tongue emoticon
 )

டாக்டர் ருத்ரன் “குடிய திருத்துறது பத்தி இப்பல்லாம் பலவிதமான வழிகள நிறைய பேர் சொல்லிட்டு வராங்க. குடிக்குறவங்களுக்கு தெரியாம மருந்து கலந்து கொடுத்தோ, கவுன்சிலிங் கொடுத்தோல்லாம் திருத்த முடியும்கிற மாதிரி விளம்பரங்களப் பரப்பிட்டு இருக்காங்க. ஆனா அப்டில்லாம் அவங்கள திருத்த முடியாது. குடிக்குறவங்க அதை மனசார உணர்ந்து குடிக்குறது தப்புன்னும் அதனால எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுதுன்னும் உணர்ந்து அவங்களா முன்வந்து குடியை நிறுத்தணும்னு முயற்சி எடுத்தா மட்டும் தான் மத்தவங்க துணையோட அவங்க குடிக்குறத நிறுத்த முடியும். அதுவரைக்கும் யாரும் எதுவும் பண்ண முடியாது. சும்மா அவங்ககிட்ட மனம் விட்டுப் பேசியோ குடிக்குறது தப்புன்னு சொல்லியோல்லாம் புரிய வைக்க முடியாது”ன்னு முடிச்சார்.
நிகழ்ச்சியோட பேரு என்னான்னு பார்த்தேன் ..... “மனதோடு பேசலாம்

Friday 8 May 2015

புன்னகை என்ன விலை

நாலு நாளைக்கு முன்னாடி சென்னைல இருந்து மதுரைக்கு கிளம்பினோம். உதய்க்கு மட்டும் தான் டிரெயின் டிக்கெட் கன்ஃபர்ம் ஆகியிருந்தது. எனக்கு வெயிட்டிங் லிஸ்ட் 1ல வந்து நின்னுருச்சு. வேளச்சேரியில இருந்து கிளம்பி மவுண்ட் ஸ்டேஷன்ல எனக்கு ஒரு ஓப்பன் டிக்கெட் எடுத்துட்டு எலக்ட்டிரிக் டிரெயின்ல எக்மோருக்கு போய்ட்டு இருந்தோம்.
நாங்க உக்கார்ந்திருந்த ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல மொத்தமே பத்து பேர் தான் இருந்தாங்க. டிக்கெட் கன்ஃபர்ம் ஆகாத கடுப்புல கொஞ்சம் டென்ஷன்ல இருந்தேன். எதிர்ல ஒரு அம்பது வயசுக்காரர் என்னைப் பார்த்து ஃப்ரெண்ட்லியா சிரிச்சாரு. நான் இருந்த டென்ஷன்ல “யாருய்யா நீ எதுக்கு என்னையப் பார்த்து சிரிக்குற?”ன்னு மனசுக்குள்ளயே கேட்டுட்டு வேற பக்கம் திரும்பிட்டேன். அப்புறமா நைஸா அவர் என்னைப் பார்க்காத நேரம் அவரைப் பார்த்தா அவர் அப்பவும் சிரிச்ச முகமா தான் இருந்தாரு....இன்னும் சொல்லப் போனா அங்கே இருந்த எல்லாருக்குமான புன்னகை ஒண்ணு அவர்கிட்ட இருந்தது.
அந்த சிரிப்பு என்னை ரொம்பவே யோசிக்க வைக்க இவரப் பார்த்து சிரிக்காம இருந்தா மட்டும் டிக்கெட் கன்ஃபர்ம் ஆகிடப்போவுதா என்னான்னு யோசிச்சுட்டே அவரைப் பார்க்க அவர் கிட்ட திரும்பவும் அதே புன்னகை. இந்த முறை நானும் லேசா சிரிச்சு வச்சேன். அவர் கிட்ட இருந்து பதிலுக்கு ஒரு சின்ன ஆமோதிப்பு இதான் என் வெற்றின்னு சொல்ற மாதிரி இருந்தது எனக்கு. மறுபடியும் முகத்தை திருப்பிக்கிட்டேன்.
அடுத்த ஸ்டேஷன்ல பார்வையில்லாத ஒருத்தர் ஏறினார். கையில வச்சிருந்த சின்ன தம்பட்டத்தை தட்டிக்கிட்டே ஒவ்வொருத்தர் பக்கமும் குத்துமதிப்பா நடந்துக்கிட்டே “பூ மழை தூவி“னு பாடிட்டு இருந்தார். இப்போ நம்ம புன்னகை மன்னன் அவரோட சட்டைப்பையில இருந்து சில்லரை எடுத்துப் பாட்டு பாடினவர் பாத்திரத்துல போட்டார். அப்படியே என்னைப் பார்த்து ஒரு புன்னகை.
“ம்ம்...இருய்யா நானும் காசு போடுறேன் பாரு”ன்னு மைண்ட் வாய்ஸ்ல பேசிட்டே உதய் கிட்ட இருந்து காசு வாங்கி நானும் பாத்திரத்துல போட்டுட்டு அவரை நைஸா பார்த்தேன். அதே சிரிப்பு. பார்வையில்லாதவர் சத்தமா பாடிட்டே அந்த கம்பார்ட்மெண்ட்டோட மறுபக்கத்துக்கு மெதுவா நடக்க ஆரம்பிச்சாரு.
அவரோட பாட்டுச்சத்தம் தேயுற வரைக்கும் புன்னகை மன்னன் கால் மேல கால் போட்டு பாட்டுக்கு ஏத்த மாதிரி காலையும் தலையையும் பக்கவாட்டுலயும், மேலயும் கீழயுமா லேசா ஆட்டி அதே புன்னகையோட கேட்டுட்டு இருந்தார்.
எக்மோர் ஸ்டேஷன நெருங்கும் போது தான் சுருக்குன்னு தோணுச்சு. அவர் அந்தப் பார்வையில்லாதவருக்கு வெறும் பிச்சையா அந்தக் காசைப் போடல....அந்தப் பாட்டை ரசிச்சு அதுக்கான சன்மானமாத்தான் குடுத்திருக்கார். ஆனா நான் அப்டிச் செய்யாம வெறும் பிச்சை தான் போட்டிருக்கேன்னு ஒரு குற்றவுணர்ச்சி வந்தது. அந்தப் பார்வையில்லாதவருக்கு நிச்சயமா என்னோட காசு மரியாதை கொடுக்கல..... ஆனா அந்தப் புன்னகை மன்னன் போட்ட காசுல மரியாதையும் சேர்ந்திருந்தது அப்போ தான் உறைக்க ஆரம்பிச்சது.
தோள்ல பேக்கை மாட்டிட்டு கம்பார்ட்மெண்ட் வாசலுக்குப் பக்கத்துல நின்னு திரும்பிப் பார்த்தேன். அவர் இப்பவும் சிரிச்ச முகத்தோட எதிர்ல இருந்தவரப் பார்த்துட்டு இருந்தார். அவர் என்னைப் பார்க்கலைன்னாலும் நான் அவரப் பார்த்து சிரிச்சுட்டு வந்தேன்

Saturday 25 April 2015

டிராஃபிக் “ஆட்டோக்காரர்”

இன்று சனிக்கிழமையாதலால் வேளச்சேரி 100 அடி ரோடில் அளவுக்கதிகமான டிராஃபிக். எந்த நிமிடமும் பறக்கத் தயாராய் ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடி பரபரத்துக் கொண்டிருந்த இளைஞர் பட்டாளம், குறைந்தபட்சம் நான்கு பேரைக் கொண்ட மிடில்கிளாஸ் ஃபேமிலியைச் சுமந்தபடி  நிறைமாத கர்ப்பிணி போல திணறிக்கொண்டிருந்த டூவீலர்கள்  , வீக் எண்ட் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளக் கிளம்பிய பார்ட்டி மூட் பார்ட்டிகளை சவாரிகளாகக் கொண்ட ஆட்டோக்கள், பஸ்கள், கார்கள் என ஆளாளுக்குத் தெரிந்த மொழியில் அவரவர் இருந்த இடத்திலிருந்தே அவர்களுக்கு முன்னால் இருந்த டூவீலர், கார், ஆட்டோக்காரர்களைத் திட்டிக் கொண்டும் ஹாரன் அடித்துக்கொண்டும் ஒரு பெரும் யுத்தபூமி போலக் காட்சியளித்த அந்த இடத்தை விட்டு யாரும் ஒரு அடி கூட அசைய முடியாதபடி எல்லா வழிகளும் அடைபட்டுக் கிடக்க யாரும் எதிர்பாராமல் சட்டென்று ஒரு பக்கத்தில் வாகனங்கள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டு விரைவாக நகரத்தொடங்கின.

அத்தனை நேரம் எங்கேயோ போயிருந்த டிராஃபிக் போலீஸ் தான் கடைசியில் வந்துவிட்டார் போல எனப் பெருமூச்சு விட்டபடி நாங்கள் வாகனங்கள் நகர்வதை கவனித்துக் கொண்டிருக்கும் போது தான் சாலையில் ஒரு ஓரத்தில் நின்றபடி வாகனங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த அந்த மனிதர் தென்பட்டார். 

உள்சட்டைக்கு மேல் பட்டன்கள் போடாத காக்கிச்சட்டை அணிந்து சாலையின் ஒருபக்கம் நின்றபடி கணீரென்ற குரலில் மறுபக்க வாகனங்கள் அனைத்தையும் ஒரு தேர்ந்த  டிராஃபிக்போலீஸின் லாவகத்தோடும் சைகையோடும் விரைவாகக் கடந்து போகும்படி ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த அந்த மனிதர் ஒரு ஆட்டோக்காரர். ஆட்டுமந்தைகள் போல அத்தனை பேரும் அவரவர் இடத்தில் நின்றபடியே கத்திக்கொண்டிருக்க சாலையின் ஓரத்தில் சவாரிக்காக காத்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் அவர் இப்படி களத்தில் இறங்கியிருக்கிறார். யார் எப்படிப் போனால் என்ன என்று அவரும் கூட வேடிக்கை பார்த்துக்கொண்டோ அல்லது சவாரி ஏதும் கிடைத்தால் தானும் அந்த மந்தையில் ஒருவனாக வெறுமனே நின்றுகொண்டோ கூட இருந்திருக்க முடியும். ஆனால் அத்தனையையும் மீறி பொதுநலத்தோடு அவர் செய்த காரியத்தை நிச்சயம் வெறும் வார்த்தைகளால் மட்டுமே பாராட்டிவிட முடியாது.


எங்கள் பக்கம் வாகனங்கள் நகரத் தொடங்க நாங்களும் முன்னோக்கி அவரைக் கடந்த கணத்தில் ”தேங்க்ஸ் அண்ணா …சூப்பர்” என்று சத்தமாக நானும் உதயசங்கரும் கத்தியது கூட அவர் காதுகளில் விழுந்திருக்கவில்லை. 

பூனைக்கு மணி

இந்த தடவ ஊருக்குப் போனப்ப நான் படிச்ச பாலிடெக்னிக்ல வேலை பாக்குற ஒருத்தர்கிட்ட (எங்க பேட்ச் லேப் அட்டெண்டர்) இருந்து சில தகவல்கள் தேவைப்பட்டதால அவரை நேர்ல பார்க்கப் போயிருந்தேன். பாலிடெக்னிக்ல இப்போ எக்ஸாம் நடந்துட்டு இருக்கதால என்னை ஆஃபீஸ் ரூம் வெளியில வெயிட் பண்ணச் சொல்லியிருந்தார்.

கிட்டத்தட்ட பத்து வருஷம் கழிச்சு நான் படிக்குற பாலிடெக்னிக்கப் பார்த்தேன். நுழைவாயில் கிட்ட ஒரு ஓடை இருக்கும். அதுக்கு குறுக்க சின்னதா பாலம் கட்டியிருப்பாங்க அது மேல நடந்து/சைக்கிள்ள/பைக்குல/கார்ல தான் உள்ள போக முடியும்.  (கிட்டத்தட்ட அகழி மாதிரி) முன்வாசல் நுழைவுல பெரிய ஆர்ச்ல காலேஜ் பேர் எழுதியிருந்தாங்க. வாசல்லயே செக்யூரிட்டி ரூம். மெயின் கேட் பூட்டியிருக்க சைட்ல இருந்த சின்ன இடைவெளி வழியா என் வண்டியில உள்ள வந்தேன். 

செக்யூரிட்டி நிறுத்தி “மேடம்….எக்ஸாமைனரா”ன்னு கேட்க வண்டி ஸ்பீடை இன்னும் குறைச்சு “இல்ல ஓல்டு ஸ்டூடண்ட்டு”ன்னு பெருமையா(!!) சொல்லிட்டு ஆக்ஸிலேட்டரை முறுக்கி விட்டுப் பறந்தேன்.

மெயின் கேட்டுக்கும் பாலிடெக்னிக் நிறுவனர் சிலைக்கும் கிட்டத்தட்ட ரெண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கலாம். ரெண்டு பக்கமும் காட்டுச் செடிகளா இருக்கும்/ இருந்தது. கொஞ்ச தூரத்துல ஒரு பெரிய கல்லு மேல மயில் உக்கார்ந்திருந்தது. வண்டிய நிறுத்தி ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன்.
நிறுவனர் சிலைக்கு இடது பக்கம் சுத்தி தான் காலேஜுக்குள்ள போகணும். வழியில ஃபர்ஸ்ட் இயர் லேப், மெக்கானிக்கல் லேப் அடுத்து சிவில் லேப் எல்லாம் கடந்து பசங்க சைக்கிள் ஸ்டாண்ட். எதிர்ல காலேஜ் லைப்ரரி. அதுக்கு அடுத்து தான் ஆஃபீஸ் இருக்கும்.  இப்போ சிலைக்கு வலது பக்கம் புதுசா ஆஃபீஸ் கட்டியிருக்காங்க. ஷெட் போட்டிருந்த இருந்த டூவீலர் ஸ்டாண்ட்ல வண்டிய நிறுத்திட்டு உள்ள போனேன். நான் பார்க்க வந்தவரின் பேரைச் சொல்லி விசாரிக்க அவர் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துடுவார்னு தகவல் சொன்னதும் வெளியே கிடந்த பெஞ்ச்சில் உக்கார்ந்து வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்.

உள்ளேயிருந்து மணி சாரின் குரல் கேட்டுச்சு. மணி சார் தான் எக்ஸாம்க்கு பணம் கட்டின ரசீது/ஹால் டிக்கெட் எல்லாத்துக்கும் இன்சார்ஜ். ரொம்ப நக்கல் பிடிச்ச ஆளு. எல்லா ஸ்டூடெண்ட்டும் அவர் கிட்ட பேசவே பயப்படுவோம். அவர்கிட்ட ஹால் டிக்கெட் வாங்குறதுக்குள்ள கிட்டத்தட்ட எக்ஸாம் எழுதுற அளவுக்கு டென்ஷன் ஆக்கி விட்ருவாரு. எத்தனையோ முறை அவரைப் பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ணினாலும் அந்த மணிக்குப் பூனை கட்டுற….ச்சே அந்தப் பூனைக்கு மணி கட்டுறதுக்கு ஆளே இல்லாமப் போச்சு.

மாறாத அதே நக்கல் குரலில் மணி சார் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்.

“நாளைக்கு எக்ஸாம வச்சிட்டு இன்னைக்கு ஹால் டிக்கெட் வாங்க வந்திருக்க…. அதுவும் உடனே பிரின்ஸ்பால் கையெழுத்து வேணும்னா எப்டி…அவர் ஊருக்குப் போயிருக்கார்….வர்றதுக்கு எப்படியும் 5 இல்லேன்னா 6 மணியாகிடும்”

”சார் …நான் ஃபோன் பண்ணிக் கேட்டுட்டு தான் வந்தேன். பிரின்ஸ்பால் 4 மணிக்கு வந்திடுவார்ன்னு சொன்னாங்க சார்”

“அப்டின்னு யாரு சொன்னா?” 

“ஆஃபீஸ்ல இருக்க லேண்ட் லைனுக்கு தான் சார் ஃபோன் பண்ணிக் கேட்டேன். யாரு பேசுனாங்கன்னு பேர் தெரியல சார்”

“யார் சொன்னாங்களோ அவங்க கிட்டயே போய் கேளு….”

”சார்…”

“நீ காலேஜ் முடிச்சுப் பத்து வருஷமாச்சு ….இன்னும் பாஸ் பண்ணாம இருந்துட்டு இங்க வந்து ஏம்மா எங்க உயிர வாங்கிட்டு இருக்க? இங்க வாய் பேசுறதெல்லாம் அரியர் க்ளியர் பண்றதுல காட்டு”

“ஆமா சார்…நான் ஃபர்ஸ்ட் இயர் கணக்குப் பாடத்துல ஃபெயிலாகி அரியர் வச்சிருக்கேன் தான். அதுக்கென்ன இப்போ?? இந்தப் பத்து வருஷத்துல நான் கரஸ்ல படிச்சு ரெண்டு டிகிரி வாங்கிட்டேன். சொந்தமா கம்பெனி வச்சி நடத்துறேன். மாசம் 40,000 சம்பாதிக்குறேன். ஆஃபீசுல என்கிட்ட 20 பேர் வேலை செய்றாங்க. இங்க ஃபெயிலான கணக்குப் பாடத்துல வர்ற ஒரு கணக்கு கூட எனக்கு இந்தப் பத்து வருஷத்து வாழ்க்கையில ஒரு தடவை கூட யூஸ் ஆகல….பிரின்ஸ்பால் கையெழுத்து இல்லேன்னா அஸிஸ்டென்ட் பிரின்ஸ்பால் கிட்ட கையெழுத்து வங்கிக்கலாம்ல…நான் அவர்கிட்டயே வங்கிக்குறேன் சார்”

உறுதியா தெளிவாப் பேசுன அந்தப் பெண் குரல் எனக்குப் பரிச்சயமான குரல்னு மண்டைக்குள்ள மணி அடிக்க சட்டுன்னு எழுந்து நிக்கவும் அந்தப் பெண் உள்ளே இருந்து வெளியே வரவும் சரியா இருந்தது. நேராக முகத்தைப் பார்த்து அடையாளம் தெரிஞ்சதும் பேர் என்னன்னு ரெண்டு நிமிஷம் குழம்பி என்னையும் அறியாம “ஹேய்ய்ய் உமா”ன்னு நான் சந்தோஷமாய்க் கத்த முன்னாடி நடந்துட்டு இருந்தவ திரும்பிப் பார்த்து புருவத்தை சுருக்கி கண்ணுக்குள்ள என்னை உள்வாங்கி அதே சந்தோஷக் குரலில் கூப்பிட்டா “ஏய்ய்ய் ஸ்ரீ”

”ஹேய்ய்ய் என்னடி …எப்டியிருக்க? எங்கேயிருக்க? லைஃப் எப்டிப் போகுது என்ன ஒரு சர்ப்ரஸ்ல….நம்பவே முடியலடி”ன்னு நான் சொல்லிட்டே போக அவள் பதிலுக்கு “நல்லாருக்கேண்டி…. இப்போ மதுரையில இருக்கேன். ரெண்டு பசங்க. சொந்தமா கடை வச்சிருக்கோம். லைஃப் சூப்பரா போகுது. நீ என்கேயிருக்க? ஆள் அடையாளமே தெரிலடி”

“ம்ம் நான் நல்லாருக்கேன்டி. சென்னைல இருக்கேன். இங்க ஒரு வேலையா மூர்த்தி சாரைப் பார்க்க வந்தேன்”

அவ அடுத்த கேள்வி கேக்குறதுக்கு முன்னாடி வைஸ் பிரின்ஸ்பால் பைக்ல லேப் பக்கம் போகவும் “ஏய்…இருடி …ரெண்டு நிமிஷத்துல வரேன்”ன்னு அவரைப் பார்த்து ஹால் டிக்கெட்ல கையெழுத்து வங்கிட்டு வரப் போனா.

நான் திரும்பவும் வெயிட் பண்ணுன இடத்துக்கே போகவும் நான் பார்க்க வந்தவர் எதிரே வரவும் சரியா இருக்க, நான் தேடி வந்த தகவல்களின் பிரிண்ட் அவுட்டை வாங்கிட்டு அவருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு உமா போன பக்கமே பார்த்தபடி வண்டி நிறுத்தியிருந்த இடத்துக்குப் போய் அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.   

கையெழுத்து வாங்கின ஹால் டிக்கெட்டை ஹேண்ட்பேக்குல போட்டபடி எங்கிட்ட வந்தவ ” வண்டியில வந்தியா? நான் ரெயில்வே ஸ்டேஷன் போய் டிரெயின பிடிக்கணும்டி. கிளம்பட்டுமா”ன்னு கேக்க “எரும….வண்டில ஏறு …ஸ்டேஷன்ல விடுறேன்”

 “நீ எப்ப டி டூவீலர் ஓட்டக் கத்துக்கிட்ட……லைசன்ஸ் இருக்கான்னு” கேட்டவள்ட்ட “ம்க்கும் லைசன்ஸ் வாங்கி எட்டு வருசம் கழிச்சு தாண்டி வண்டியே வாங்கிருக்கு”ன்னு சொல்லிட்டே வண்டியை நிறுத்தி “ஏய் இருடி …ஒரு ஃபோட்டோ எடுக்கலாம்னு” அவள் மொபைல்லயும் என்னோட கேமராவுலயும் எடுத்துக்கிட்டோம். சத்தமா பேசிக்கிட்டும் சிரிச்சுக்கிட்டும் மெயின் கேட்டைத் தாண்டினோம்.

பாலிடெக்னிக்கை விட்டு வெளியே வந்து மெயின் ரோட்டத் தொட்டு கொஞ்ச தூரத்தில் தள்ளு வண்டியில் நுங்கும் பதனியும் விற்குறதப் பார்த்து வண்டியை ஓரங்கட்டி ஆளுக்கொரு தொன்னையில பதனி குடிச்சு ரெண்டு பார்சல் நுங்கும் வாங்கியாச்சு. ராஜலட்சுமி தியேட்டர் பக்கத்துல ரயில்வே சிக்னல்ல போடாம இருந்த நல்ல நேரத்துல போனதால ஸ்டேஷனுக்கு சரியான டைமுக்கு போயாச்சு.  

எனக்கொரு பிளாட்ஃபார்ம் டிக்கெட்டும் அவளுக்கு மதுரைக்கு டிக்கெட்டும் எடுத்துட்டு டிரெயினுக்காகக் காத்திருந்த நேரத்துல அவ கிட்ட சொன்னேன் “உன்ன நெனைச்சா ரொம்பப் பெருமையாவும் சந்தோசமாவும் இருக்குடி. இந்தப் பத்து வருசத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்து ரெண்டு டிகிரி முடிச்சு சொந்தமா பிஸினெசும் நடத்திட்டு இருக்க பாரு…யூ ஆர் ரியலி கிரேட் டி. படிக்கும் போது பார்த்த உமாவா இதுன்னு ஆச்சரியமா இருக்கு…. என்னப் போல நிறைய பேருக்கு நீ ஒரு முன்னுதாரணம்”

ஆமோதிக்குற மாதிரி ரெக்கார்ட் வாய்ல டிரெயின் பத்தின அறிவிப்பு கேட்டது…… தோள்ல மாட்டியிருந்த ஹேண்ட் பேக்க அட்ஜஸ்ட் பண்ணிட்டே டிரெயின் வரப்போற திசைய ஒரு முறை பார்த்துட்டு “போடி …நானாவது ரெண்டு டிகிரி வாங்குறதாவது….. கல்யாணம் ஆனதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் ஹவுஸ் வொய்ஃப் தான். இவரு போன மாசம் தான் துபாய்ல வேலைக்கு சேர்ந்துருக்காரு. ஃபேமிலி கஷ்டமெல்லாம் இல்ல….ஆனா பிள்ளைங்க படிப்புக்காக கொஞ்சம் பணம் சேர்க்க வேண்டிருக்கே அதான் போயிருக்காரு…. அப்பா இறந்த பிறகு அம்மா எங்கூட தான் இருக்காங்க. பிள்ளைங்க ரெண்டும் நல்லா படிக்குறாங்க. மாமியாரும் மாமனாரும் இவர் தம்பி வீட்ல இருக்காங்க. நான் சந்தோசமா இருக்கேன்….. கருமம் இந்த எக்ஸாம மட்டும் எழுதித் தொலைச்சு பாஸ் பண்ணிட்டா என் வீட்டுக்காரர் கிண்டல்ல இருந்து தப்பிச்சுடலாமேனு தான் இந்த தடவ எழுத வந்தேன்…. ஆனாலும் அந்த மணிக்கு ரொம்பத் தான் வாயிடி….. காலேஜ்ல படிக்கும் போதே அந்தாளப் பிடிக்காது …இன்னைக்கு தான் சான்ஸ் கெடைச்சது. அதான் ரெண்டு வாங்கு வாங்குனேன்… சரிடி டிரெயின் வந்திருச்சு…நான் வரேன்…மதுரையில இறங்கிட்டு ஃபோன் பண்றேன்”ன்னுட்டுப் போனா….


டிரெயின் என்னைக் கடந்து கடைசிப் பொட்டி கண்ல இருந்து மறையுற வரைக்கும் அவ போன திசையவே பார்த்துட்டு இருந்தேன் ….. தக்காளி இந்த வருஷமாச்சும் நானும் அரியரைக் க்ளியர் பண்ணிடனும் ;) :p 

Thursday 23 April 2015

சுயமரியாதைப் பெண்கள்

கீழ்வீட்டுப் பெண்மணி ஒருவர் இன்று காலையிலேயே உரத்த குரலில் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார். எவ்வளவு உரக்க என்றால் கீழ்த்தளத்திலுள்ள அவர் வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு பேசியது இரண்டாம் தளத்தில் செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த என் காதுகளில் சன்னமாக விழும் அளவிற்கு. அவர் பேசியதின் (!!!) மன்னிக்க ..... கத்திக் கொண்டிருந்ததின் சாராம்சம் இது தான். அவர் வீட்டில் சமையல் மற்றும் இதர வேலைகளைச் செய்ய புதிதாய் வரப்போகும் பெண்மணி விதித்த நிபந்தனைகள் குறித்து ஃபோனில் வேறொருவருடன் அவர் விவாதித்துக் கொண்டிருந்தார்.

1) அன்றைய சமையலுக்கான பட்டியலை முதல் நாளே தெரிவித்து விட வேண்டும்.
2) சமையல் செய்யும் நேரத்தில் வீட்டினர் தொந்திரவு இருக்கக் கூடாது.
3) எக்காரணம் கொண்டும் பட்டியலில் சொல்லப்படாத உணவு கூடுதலாக சமைக்கப்பட மாட்டாது.
4) வீட்டினரின் உள்ளாடைகள் தவிர மற்றவை வாஷிங் மெஷினில் துவைத்து தரப்படும்.
5) சமைக்க  உபயோகிக்கும் பாத்திரங்கள் தவிர எச்சில் பாத்திரங்கள் கழுவப்பட மாட்டாது.
6) ஞாயிற்றுக் கிழமை விடுமுறை.
7) மாத சம்பளம் பிரதி மாதம் 5ம் தேதி கொடுக்கப்பட வேண்டும்.

ஃபோனில் இவர் கத்திக்கொண்டிருந்தது வேலைக்கு வரப்போகும் பெண்மணியைப் பரிந்துரைத்த உறவுக்கார பெண்ணிடம் தான். அதற்கு மேல் நில்லாமல் என் வேலை முடிந்து வீட்டுக்குள் வந்தேன்.

மனதுக்குள் என் அலுவலக நாட்கள் நினைவுக்கு வந்தது. அதுவொரு கட்டுமானக் கம்பெனி. தினமும் பல்வேறு ஆட்கள் வந்து போகக்கூடிய இடம். ஆஃபீஸ் பாயில் இருந்து எம்.டி வரை அனைவரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் சூழல்.

ஒருநாள் ஹவுஸ்கீப்பிங் அக்காள் விடுமுறை எடுத்த தினத்தில் ஆஃபீஸில் பெரிய அளவிலான மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாக மீட்டிங் ஆரம்பித்த நேரத்தில் ஆஃபீஸ் பாய் ஒரு அவசர வேலையாக பக்கத்திலிருக்கும் ஆர்க்கிடெக்ட் ஆஃபீசுக்குச் சென்று விட மீட்டிங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் தேநீர் எடுத்துச் செல்ல ஆளில்லாமல் போனது.

இண்டர்காமில் ரிசப்ஷனிஸ்டை அழைத்த எம்.டி அனைவருக்கும் தேநீர் கொண்டு வருமாறு பணிக்க அவரோ ஆளின்றி திணறிப் போய் விட்டார். ரிஸப்ஷனிஸ்ட் எம்.டியிடம் மிகுந்த பயந்த சுபாவம் கொண்டவர். வேலைக்குச் சேர்ந்து வெகு சொற்ப மாதங்களே ஆகியிருந்தது. அத்தோடு அப்போது நிறைமாத கர்ப்பிணி வேறு. அக்கவுண்ட் செக்‌ஷனில் இருந்த அத்தனை பேரும் ஆடிட்டிங் வேலையில் பிஸியாக இருந்ததால் எவரையும் அழைக்க முடியவில்லை போலும். எனக்கு போனில் அழைத்து விஷயத்தைச் சொன்னதோடு வேறு வழியின்றி தேநீர் கோப்பைகளை அவரே எடுத்துச் செல்லப் போவதாகவும் ஏதேனும் தொலைபேசி அழைப்புகள் வந்தால் என்னுடைய கேபினில் இருந்தே அவற்றை அட்டெண்ட் செய்து பேச முடியுமாவெனவும் கேட்டார்.

அவரைச் சற்றுப் பொறுத்திருக்கச் சொல்லிவிட்டு ஆஃபீஸ்பாயின் நம்பருக்குப் போன் செய்து உடனடியாய் அவரை ஆஃபீசுக்கு வரச்சொல்லி பணித்து விட்டு எம்.டியிடம் இண்டர்காமில் காஃபி மெஷினில் சிறு கோளாறு இருப்பதாகவும் வெளியே சென்றிருக்கும் ஆஃபீஸ் பாய் வந்தவுடன் தேநீர் வாங்கி வரச் செய்து அனுப்புவதாகவும் தகவலளிக்கச் சொன்னேன்.

அவரும் அப்படியே செய்துவிட, வெகு சில நிமிடங்களிலேயே விரைந்து வந்த ஆஃபீஸ் பாயிடம் தேநீர் கோப்பைகளை மீட்டிங்கில் வந்தவர்களுக்குக் கொடுக்கச் செய்தோம். பரபரப்பும் பயமும் விலகியவுடன் ஒரு பெருமூச்சை விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்ட ரிஸப்ஷனிஸ்ட் என்னிடம் “ரொம்ப தேங்க்ஸ் மேடம்…. நல்ல நேரத்துல வந்து ஹெல்ப் பண்ணீங்க. இல்லேன்னா நாந்தான் எல்லாருக்கும் டீ எடுத்துட்டுப் போக வேண்டியிருந்திருக்கும். ரிஸப்ஷன்ல இருந்தா இந்த வேலையெல்லாம் கூட செய்ய வேண்டியிருக்கு பாருங்க” என்று அலுத்துக் கொண்டார்.

அவரிடம் “ரிசப்ஷன்ல இருந்தா இந்த வேலையெல்லாம் செய்யணும்னு எந்த கட்டாயமும் இல்ல. நீங்க கன்ஸீவா இல்லாம இருந்திருந்தா கூட நான் போக வேண்டாமின்னு தான் சொல்லியிருப்பேன். உங்களுடைய வேலைகள்ல நீங்க தெளிவாகவும் திறமையாவும் இருந்தா போதும். உங்களுக்கு விருப்பமில்லாத இந்த வேலைகளை நீங்க எப்போதும் செய்ய வேண்டியதில்லை”ன்னு சொல்லிட்டு வந்தேன்.  


வீட்டுவேலை செய்யும் பெண்களென்றால் மிகுந்த இளக்காரத்துடனும் அடிமையாகவும் நிறைய வீடுகளில் நடத்தப்படுகின்ற சூழ்நிலையில் தனக்கான வேலைகள் மற்றும் சுதந்திரம் குறித்து தானே தீர்மானித்து சகலமும் வரையறுத்து இதற்கு சம்மதமென்றால் உன் வீட்டில் நான் வேலை செய்யத் தயாரென்று தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கும் அந்த முகமறியாப் பெண்மணியிடம் மிகுந்த மரியாதை உண்டாகி இருக்கிறது.   

Saturday 11 April 2015

குற்றம் பார்க்கின் ....

வேளச்சேரியில் நாங்கள் அடிக்கடி செல்லும் ஒரு உணவகத்துக்கு சென்றிருந்தோம். அங்கு பணிபுரியும் கடைநிலை ஊழியர்களில் இருந்து மேலாளர் வரை அனைவரும் பணிவுடனும் துரிதமாகவும் நாம் கேட்கும் உணவுகளை வழங்குவார்கள். உணவகம் சுத்தமாகவும் அமைதியான சூழ்நிலையோடும் இருக்கும். வழக்கம் போல ஆர்டர் செய்து விட்டு பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது 40-45 வயது மதிக்கத்தக்க நபர் பக்கத்து மேசையில் வந்தமர்ந்தார். அடுத்த சில நொடிகளிலேயே அவரை நோக்கி வந்த உணவக பணியாளர்  சுத்தமான கண்ணாடி தம்ளரை மேசையில் வைத்து அதில் குடிநீர் ஊற்றிச் சென்றார். அவர் நகர்ந்து சென்ற இரண்டொரு நிமிடங்களில் மற்றொரு பணியாளர் அவரிடம் வந்து மிகப் பணிவாக மெனு கார்டை கொடுத்து அவர் விரும்பும் உணவினை தேர்வு செய்யக் கொடுத்தார்.

மெனுகார்டைப் பார்வையிட்டபடி அந்தப் பணியாளரிடம் அதட்டலான குரலில் அந்தந்த உணவு வகைகள் இருக்கிறதாவென ஒவ்வொன்றாய் மெனுகார்டைக் காட்டிக் கேட்டபடி இருந்த நபர் கடைசியில் ஒரு உணவு வகையினை தேர்வு செய்து ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்கத் தொடங்கினார்.

எங்களுக்கான உணவு வந்ததும் நாங்கள் சாப்பிடத் தொடங்கினோம். திடீரென்று அந்த பக்கத்து மேசை நபர் பெருங்குரலில் உணவகப் பணியாளர்களை நோக்கிக் கத்திக் கொண்டிருந்தார். வேறொரு மூலையில் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்த மேலாளர் இவரின் கூக்குரல் கேட்டு அவர் மேசையை நோக்கி ஓடி வந்தார்.

“என்னாச்சு சார்”

“ஆர்டர் குடுத்து எவ்ளோ நேரமாச்சு....இன்னும் டேபிளுக்கு வரல”

மேலாளர் , சமையல் அறை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த மேசைக்குரிய பணியாளரிடம் சென்று  விசாரித்து விட்டு “சார்....இதோ ரெடியாகிருச்சு சார் ...ரெண்டு நிமிஷத்துல வந்திடும்”

“என்ன ...வந்திடும் ....எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது.... ஆர்டர் வாங்கிட்டுப் போன அந்த ஹிந்திக்காரப் பையனக் கூப்பிடுங்க”

மேலாளர் அந்தப் பணியாளரை வரச் சொல்ல , அவரும் பணிவுடன் வந்து நின்றார்.

அவரிடம் ஹிந்தியில் இந்த நபர் “உங்கிட்ட ஆர்டர் குடுத்து அரைமணி நேரமாச்சு.....இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க” என எகிற

பணியாளரோ மிகத் தாழ்மையான குரலில் “ சார்.... உள்ள ரெடியாகிருச்சுன்னா  உடனே எடுத்துட்டு வந்திடுறேன்”

“இந்த ஐட்டத்துக்கே இவ்ளோ நேரமா .....நான் வந்து உக்கார்ந்து முக்கால்மணி நேரமாச்சு.... கஸ்டமரை சரியா கவனிக்க மாட்டேங்குற....என்னய்யா வேலை பார்க்குற” என்று அதிகாரமாகக் கேட்டார்.

பணியாளர் அப்போதும் அமைதியாக “ சார் ....நீங்க வந்து உக்கார்ந்து ரெண்டு நிமிஷத்துல தண்ணீர்  கொண்டு வந்து வச்சோம் சார்.... அப்புறம் ஆர்டர் எடுத்து அதுவும் ரெடியாகிருச்சு சார்”

“முட்டாள்.... எதிர்த்து எதிர்த்து பேசுற .....எந்த ஊரு நீ”

“சார் ....ஹைதராபாத் சார்”

“ஹைதராபாத்தா ....ஹிந்தி பேசுற....அப்புறம் ஹைதராபாத்துன்னு சொல்ற....என்ன பொய் சொல்றியா”

“இல்ல சார் நான் ஹைதராபாத் தான்”

இடையில் குறுக்கிட்ட மேலாளர் அந்த வாடிக்கையாளரிடம் “சார்...இங்க கஸ்டமர்  கிட்ட  எப்படி நடந்துக்கணும்னு இவங்களுக்கு கத்துக் கொடுத்திருக்காங்களோ அப்படி தான் சார் அந்தப் பையனும் நடந்துகிட்டான்....என்னோட வேலை இவங்கள கண்காணிக்குறது தான் சார்....உங்களுக்கு சரியான நேர இடைவெளியில தான் சார் ஆர்டர் எடுத்திருக்காங்க. அதுவும் ரெடியாகிருச்சு. இப்போ எடுத்துட்டு வந்துடுவாங்க” என்று பொறுமையாக விளக்கம் கொடுத்தார்.

அப்போதும் கோவம் குறையாத அந்த நபர் பணியாளரிடம் “நீ ஹிந்தி தான பேசுற…பின்ன ஏன் ஹைதராபாத்துன்னு பொய் சொல்ற” என்று ஹிந்தியில் கேட்க அதுவரை அமைதியாக இருந்த அந்தப் பணியாளர் தன் குரலை உயர்த்தி ”ஏன் சார் ஹைதராபாத்ல இருக்கவங்க ஹிந்தி பேசக்கூடாதா இல்ல ஹிந்தி பேசுறவங்க ஹைதராபாத்ல இருக்கக் கூடாதா ? உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை நான் வேலை செய்யுறதுலயா இல்ல ஹிந்தி பேசுறதுலயா?” என்று பொட்டில் அடித்தாற் போலக் கேட்க இப்போது அந்த நபர் வாயடைத்துப் போயிருந்தார்.

அந்த ஹோட்டலில் இருந்த யாருமே அந்த நபரின் பேச்சை விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. எல்லார் முன்பாகவும் உரக்கக் கேள்வி கேட்ட அந்தப் பணியாளரை நிமிர்ந்து பார்த்து பதில் சொல்ல முடியாத அந்த நபர்  மேலாளரிடம் திரும்பி “இங்க கஸ்டமர் கவனிப்பே சரியில்ல...நீங்களும் பொறுப்பில்லாம உங்க வேலைக்காரங்களை பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க....நான் உங்க எல்லார் மேலயும் உங்க மேனேஜ்மெண்ட்ல கம்ப்ளெயிண்ட் பண்ணப் போறேன்” என்றார்.

சரியாக அந்த நிமிடத்தில் மேசைக்கு வந்த உணவினை அந்த நபருக்குப் பரிமாறச் சொல்லியபடி மேலாளர் வெகு சாதாரணமாக “சார்....நீங்க பில் கட்டுற இடத்தில் கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு போங்க. அவங்க பார்த்துப்பாங்க” என்று கூறிவிட்டு அந்தப் பணியாளரை அழைத்துப் புன்னகையுடன் தோளைத் தட்டிக்கொடுத்து வேறொரு டேபிளைக் காட்டி “அந்த கஸ்டமரைக் கவனி” என்று பணித்து விட்டு விலகி நடந்தார்.

மேலாளரும் அந்தப் பணியாளரும் வேறு வேறு மேசைகளில் புதிதாய் வந்த வாடிக்கையாளர்களை சிரத்தையோடு கவனித்துக் கொண்டிருந்தனர். பக்கத்து மேசை நபர் அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து மேசையிலேயே பில்லுக்கான பணத்தை செலுத்தி வெளியேறும் வரை குனிந்த தலை நிமிரவேயில்லை.