Tuesday 30 December 2014

சென்னை

ஏழு வருடங்களுக்கு முன் சொந்த ஊரில் தைப்பொங்கல் முடிந்த இரண்டாம் நாளில் வேலை மாற்றலுக்காய் இந்த நகரத்திற்குள் அடியெடுத்து வைத்த போது முதலில் தோன்றியது “திரும்ப எப்ப ஊருக்குப் போவோம்” என்ற நினைப்பு தான். சென்னை ஒன்றும் புதிதல்ல எனக்கு. அம்மாவின் பூர்வீகம் சென்னை தான். ஆச்சி, தாத்தா, மாமா, பெரியம்மா இன்னும் அம்மாவின் தாய்மாமா உள்பட நிறைய சொந்தங்கள் வாழும் ஊர். நான் பிறந்ததும் வண்ணாரப்பேட்டையின் ஒரு சிறிய மருத்துவமனையில் தான். வளர்ந்ததும் படித்ததும் விருதுநகரில். பள்ளிக்காலங்களின் ஆண்டு விடுமுறை நாட்களில் சென்னைக்குப் பலமுறை வந்ததுண்டு. அப்போதெல்லாம் மெரீனா பீச்சையும், பழைய வண்ணாரப்பேட்டையின் குறுகலான வீதிகளையும் தவிரப் பெரிதாய் ஒன்றும் சென்னையைச் சுற்றிப் பார்த்ததில்லை.
சென்னையில் எங்கள் அலுவலகம் இருந்தது அண்ணாநகரின் பிரதான சாலையில். ஆரம்பத்தில் தங்கியிருந்த பெரியம்மா வீட்டிலிருந்து அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் விடுதியில் சில காலம் தங்கியிருந்தேன். உணவு, சுற்றுச்சூழல் உள்பட எதுவுமே அங்கு ஒவ்வாமல் போனதால் அண்ணாநகர் திருமங்கலத்தில் இருக்கும் அண்ணன் குடும்பத்துடன் சில மாதங்கள் தங்கியிருந்து வேலையைத் தொடர்ந்தேன். திருமங்கலத்தில் இருந்து தினமும் நடந்தே அண்ணாநகர் ரவுண்டானா வரை சென்று வேலை பார்த்த நாட்களில் அலுவலகம் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் இரு பக்கமும் சாலையையும், அதில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்துப் பார்த்துப் பிரமிப்பில் பூத்துப் போனது கண்கள்.
வேலை, தங்குமிடம் இரண்டிலுமே மாற்றம் வந்தபின் திருவல்லிக்கேணியில் ரத்னா கஃபேவுக்கு பின்புறம் உள்ள ஹாஸ்டலில் 2 வருடங்கள் தங்கியிருந்தேன். அலுவலகம் எக்மோரில். பேருந்துக்கு காசு இல்லாத போதெல்லாம் எக்மோரில் இருந்து விடுதி வரை நடந்தே தேய்ந்து போனது செருப்புகள். அதன் பிறகு சேப்பாக்கத்தில் உள்ள தங்கும் வசதி மட்டும் உள்ள விடுதிக்கு மாறியபின் தானே சமைத்துச் சாப்பிட வேண்டியிருந்தது. உடன் தங்கியிருந்த தோழிகளின் வேலை நேரம், பொருளாதாரம் போன்ற காரணங்களால் தொடச்சியாய் சமைக்க முடியவில்லை.
அந்த நேரங்களில் ஆபத்பாந்தவன் ”ஆந்திரா மெஸ்” தான். சோறு, காரக்குழம்பு, ரசம், சாம்பார், தயிர், மோர், பொரியல், கூட்டு , அப்பளம் கூடிய ஒரு சாப்பாடு வாங்கி நான்கு பேர் பகிர்ந்துண்ட காக்கை கூட்டுக் காலங்கள். (தினசரி சாப்பாடு வாங்குவதால் கூடுதலாய் இரண்டு சிறிய வாழைப்பழங்கள் கொடுப்பார்கள்.) அதை இரவு உணவுக்குப் பின் சாப்பிட வைத்துக் கொள்ளுவோம். இரவுச் சாப்பாடு பாண்டியன் மெஸ்ஸில் 8 பரோட்டாவுக்கு கொடுக்கும் சால்னாவோடு கூடுதலாய் ஒரு பொட்டலம் கேட்டு வாங்கி பரோட்டாவை விட அதிகமாய் சால்னாவைத் தின்று பசியாறியதெல்லாம் ”வறுமையின் நிறம் சிவப்பு” படக் காட்சிகள்.
அறுந்து போன செருப்பை அப்படியே விட்டுப் போகவா அல்லது எடுத்துக் கொண்டு போய்த் தைத்துப் போடலாமா என் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் பேருந்து வந்துவிட செருப்பை மறந்து வெறுங்கால்களுடன் மழைநீரில் வழுக்கி விழப் பார்த்து பின் சுதாரித்துப் பேருந்தில் தொற்றிக் கொள்ள, பக்கத்தில் நின்றிருந்த சக பயணியின் குதிகால் செருப்பின் நீண்டிருந்த கூர்மை என் இடதுகால் சுண்டு விரலின் வலிமையைப் பரிசோதித்த நாளில் தான் அறுந்து போன செருப்பின் அருமை தெரிந்தது. இன்று உடையின் நிறத்திக்கொன்றாய் செருப்பு வைத்திருப்பது வேறு விஷயம்.
அதன்பிறகு எக்மோருக்கே ஹாஸ்டல் மாறி வந்தேன். இரண்டாம் மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த அறை அது. தனித்தனி மரக்கட்டில்களுடன் ஆளுக்கொரு டேபிள் அளித்த ஹாஸ்டல் நிர்வாகத்தினரின் கருணைக்கு எல்லையே இல்லை. ஒரு நாளின் அத்தனை காரியங்களும்……உண்பது, உறங்குவது, உடைகள் வைத்திருப்பது என சர்வமும் நடப்பது அந்தக் கட்டிலில் தான். ஹாஸ்டல் சாப்பாடு பாரபட்சமாய் அளிக்கப்பட வார்டன் முன்பு தட்டுகளை விசிறியடித்து சண்டை போட்டதன் விளைவாக அங்கும் என் ரவுடித்தனம் வெளிச்சப்பட்டுப் போனது. இரவுச் சாப்பாட்டுக்குக் கடலை உருண்டை வாங்கி வந்த இனிதான நாட்கள்.
தண்ணீர் வசதிக்குறைவு, மின் இணைப்பு, கழிப்பறை வசதி எனத் தொடந்த நெருக்கடிகளால் ஹாஸ்டலை விட்டு வெளி வந்து தோழிகள் நான்கு பேர் சேர்ந்து எக்மோரிலேயே ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து அதில் குடி வந்தோம்.வீட்டு நிர்வாகத்தைக் கற்றுக். கொண்டது அங்கு தான். அட்வான்ஸ்,வீட்டு வாடகை, வீட்டு ஒப்பந்தப்பத்திரம், கியாஸ் இணைப்பு, வரவு, செலவு, சமையல், தண்ணீர், மின்சாரம் உள்பட வீட்டின் அனைத்து மேற்பார்வைகளும் என் பொறுப்பிலேயே இருந்தது. பேருந்து செலவுக்குக் கூட திணறிய காலம் போய் தினமும் அலுவலகம் சென்று வர ஆட்டோ பயன்படுத்துமளவுக்குப் பொருளாதாரம் மேம்பட்டது பணியோடு சேர்ந்து சம்பள உயர்வும் கிடைத்த இந்த காலக்கட்டத்தில் தான்.  
சீராகவேப் பயணித்துக் கொண்டிருந்தாலும் எதிர்காலம் குறித்த ஒரு பயம் தொடந்து கொண்டே இ\ருந்தது. சரியாக ஒரு வருடம் முன்பு நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து விருதுநகருக்கு ஒரு வார விடுப்பில் சென்றேன். திருமண ஏற்பாடுகள், வீட்டு சூழ்நிலை, என்னுடைய உடல்நிலை எல்லாமுமாகச் சேர்ந்து நினைத்த நேரத்தில் சென்னைக்குத் திரும்ப முடியவில்லை. ஒரு மாறுதல் தேவைப்பட்டிருந்த அந்த சமயத்தில் உடலும் மனமும் சொந்த ஊரை நிறையவே சார்ந்திருந்ததை மறுக்க முடியாது. வேலையில் திரும்ப சேர்வதற்கான கால அவகாசமும் ஒத்தி வைக்கப்பட்டது. அம்மாவின் கவனிப்பிலும், அக்கா குழந்தைகளின் அருகாமையிலும் நிறையவே தெம்பு வந்தது உடலிலும் மனதிலும். ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் குடும்ப நண்பர் மூலம் உதயசங்கர் தரப்பிலிருந்து என்னைப் பெண் கேட்டு வந்தனர். பரஸ்பர விசாரிப்புகளின் அடிப்படையில் ஒரு நிறைவான நாளில் மதுரை “கூடலழகர் கோவிலில்” முதன்முறையாக உதயசங்கரும் நானும் அவரவர் குடும்பத்துடன் நேரில் சந்தித்துப் பேசினோம்.
பெரியோர்கள் கலந்து பேசி நிச்சயித்தபடி செப்டம்பர் 4ம் தேதி என்ற ஆசீர்வதிக்கப்பட்ட நாளில் அப்பா இல்லாத குறை தெரியாமல் கல்யாண ஏற்பாடுகளைப் பார்த்துக் கொண்ட தம்பிகளால்  மிகக் கோலாகலமாய் நடந்தது திருமணம். அதே மாதம் 12ம் தேதி சென்னையில் புது வீட்டில் குடியேறி , 14ம் தேதி திருமண வரவேற்பும் சிறப்பாக நடைபெற்று இதோ மூன்று மாதங்கள் ஓடியே போய்விட்டது.  
சென்னையைப் புறக்கணிக்க ஒரு போதும் காரணங்கள் இருக்கவில்லை எனக்கு. சொந்த ஊரில் தங்கியிருந்த மாதங்களில் கூட சென்னைக்கு இனிப் போக முடியுமா என்ற கவலையுடன் கூடிய ஏக்கம் இருந்தது. திருமணம் முடித்து சென்னைக்கே குடிவருவேன் என்பதெல்லாம் நானே எதிர்பாராதது. சொந்தங்களை விட நண்பர்கள் தான் கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்று என்னைத் தேற்றியவர்கள். சென்னை என் சுயத்தை ஒருபோதும் பறித்துக் கொள்ளவில்லை. வேலை, பணம், வசதி, நாகரீகம், நண்பர்கள், தன்னம்பிக்கை, சுயமரியாதை, படிப்பினை என இங்கு கற்றதும் பெற்றதும் ஏராளம். அத்தனைக்குப் பிறகும் நான் நானாகவே இருக்கிறேன் அப்போதும் இப்போதும்.
சென்ற வருடம் குறித்துச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ப்ளாக் தொடங்கியது, யமஹா ”ரே” வண்டி வாங்கியது, திருமணம் என மூன்று பெருங்கனவுகளை மகிழ்வான தருணங்களோடு நிறைவேற்றி வைத்த வருடம் இது. இந்த வாழ்வும் இனி வரவிருக்கும் புதிய வருடமும் நெஞ்சம் நிறைய நம்பிக்கைகளையும் தெளிவான ஒரு பாதையையும் உடன் பயணிக்க ஒரு தந்தையுமானவனையும் தந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போகும் இந்தக் காதலின் தன்மை வாழ்வை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

மனம் முழுக்க ஒரு புத்துணர்ச்சி பரவியிருக்கும் இந்த நிமிடத்தில் இரண்டு நாட்களாய்த் தொடந்த மழையினால் அழுக்கு தீரக் குளித்த சென்னைச் சாலைகள் தன் பளபளப்பான நியான் கண்களால் என்னை வசீகரித்துக் கொண்டிருக்கிறது. லவ் யூ சென்னை.

Monday 22 December 2014

வற்றா நதி

புத்தக வெளியீட்டுக்கு வந்திருங்கக்கான்னு சொன்ன கையோட ....சாரி வாயோட “புத்தகத்தப் பத்தி ரெண்டு வார்த்த பேசுறீங்களக்கா”ன்னு கேட்டான் கார்த்தி.
“இன்ன்ன்னாது ...புத்தகத்தப் பத்தி நான் பேசுறதா? புத்தகம்னா என்னான்னு தெரியாது. புத்தக வெளியீடுன்னா என்னன்னு தெரியாது. என்னப் போய்ய்...பேசச் சொல்றியே”ன்னு கேட்டதும் ,
“வெரி குட் ...யூ ஆர் செலக்டடு”ன்னு சொல்லி அப்போ தான் அச்சிலிருந்து வந்த புத்தம் புதுப் புத்தகத்த ....”வற்றா நதி”யக் கையில குடுத்துட்டுப் போய்ட்டான்.  அட்டைப் படத்தை மட்டுமே அரை மணி நேரம் பார்த்துட்டு உக்கார்ந்திருந்தேன். கால்கள் சில்லிப்பை உணர்ந்தது. அத்தனை அழகு. வாழ்த்துகள் சிவகாசி சுரேஷ்.
காலேஜ்ல படிக்கும் போது 46 பசங்க 6 பொண்ணுங்க (பாவப்பட்ட பசங்க  ) இருந்த எங்க கிளாஸ்ல “கன்ஸ்ட்ரக்‌ஷன் மெட்டீரியல்ஸ்” பத்தி செமினார் எடுத்த தைரியத்துல நானும் புத்தகத்த வாசிக்க ஆரம்பிச்சேன்.
ரெண்டுமூணு கதைகள் வாசிச்சு முடிச்சதுமே ரொம்ப ஆச்சர்யமாச் போச்சு. “நிலைக்கதவு” கதையில வர்ற பெரியாச்சி வீட்டுக்கதவு மாதிரி தான் எங்க லட்சுமி ஆச்சி வீட்டுக் கதவும். மஞ்சள் கலர் பெயிண்ட் அடிச்சு , மூணு குறுக்குக் கட்டைகளோட அழகழகா குமிழ்கள் வச்சு அதுல வளையமும் தொங்க அவ்ளோ பிரம்மாண்டமா கனமா இருக்கும். ரெண்டு கைகளாலயும் அழுத்தித் தள்ளினா தான் கதவைத் திறக்க முடியும்.
கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதின “கதவு” கதையில வர்ற சின்னப் பசங்க மாதிரி தான் நாங்களும் அந்தக் கதவுல ஏறிக் குறுக்குக் கட்டையில கால ஊனி நின்னுக்கிட்டு ரெண்டு பேர் தள்ளிவிட்டு விளையாடுவோம். கார்த்தி இதையெல்லாம் பார்க்கல. ஆனா எழுதியிருக்கானே . எப்படி!!!!!!
அதே மாதிரி “டெஸி” கதையில வர்ற டெஸி தான் எங்க பக்கத்து வீட்டுக் காம்பவுண்டுல இருந்த கிருஷ்ணவேணி. பத்தாங்கிளாஸ் படிக்கும் போது ஏதோ பிரச்சனையில மண்ணெண்ணெய் ஊத்தித் தீக்குளிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டா. உடம்புல தீயோட அவ ஓடி வந்து விழுந்தது எங்க தெருவே தண்ணி பிடிக்குற குழாயடியில தான். எப்ப தண்ணி பிடிக்கப் போனாலும் உசுரக் கையில பிடிச்சுட்டுப் போவேன் நான். இப்ப டெஸி கதை வாசிச்சதுல இருந்து ரெண்டு நாளா கிருஷ்ணவேணி ஞாபகம் தான் வருது 

அதுவும் அந்த டெஸி வெள்ளைக்கலர் டிரெஸ்ஸுல கையில பைபிளோட உலாவுறதா கார்த்தி சொல்லும் போது லேசா சிரிப்பு வந்தாலும் மெய்யாலுமே பயமாக்கீது பா 

“லைட்ஸ் ஆஃப்” கதையில வர்ற பாக்கு மண்டி ராமசாமி நாடாரெல்லாம் அப்படியே எங்க ”கருப்பட்டிக்கடை வெள்ளைசாமி நாடார்” தாத்தா தான். தலைப்பாக்கட்டும் மீசையும் அப்படியே. அவர் ஃபோட்டோ ஃப்ரேமுக்கு முன்னாடி ஏத்தி வச்ச “சர்வோதயா ஊதுபத்தி” ரைட்டர் டச்.... 

நிறையக் கதைகளக் குறும்படமா எடுக்கக் கூடிய காட்சி அமைப்புகள் இந்தக் கதைத் தொகுப்புல இருந்தாலும் என்னோட ஓட்டு “பச்ச” கதைக்குத்தான். ”பொங்கலோ பொங்கல்” “ தீபாவளி” பத்தின கதைகளெல்லாம் அப்படியே பண்டிகை நேரத்துக் காட்சிகளையும் மன உணர்வுகளையும் அப்படியே படம் பிடிச்சுக் காட்டியிருக்கார் கதாசிரியர்.
இப்பல்லாம் மக்கள் ரொம்பத் தெளிவு. மைசூர்பாகுல “மைசூரே” வேணும்னு கேக்குறாங்க. சிமெண்ட்ல உயிர் இருக்கணும்கிறாங்க. அட ....டூத் பேஸ்ட்ல கூட உப்பு இருக்கணும்கிற மாதிரி ரஜினி படத்துல எல்லாம் லாஜிக், கதை வேணும்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. கலி முத்திடுச்சு .... காசு குடுத்துப் புத்தகம் வாங்குற வாசகன் அதிகபட்சம் எதிர்பார்க்குறது கவிதப் புத்தகத்துல கவிதையையும், கதைப் புத்தகத்துல கதையையும் மட்டும் தான் . நம்ம நூலாசிரியர் அதைச் சரியாப் புரிஞ்சுக்கிட்டு இந்தத் தொகுப்புல மொத்தம் 22 சிறுகதைகள் குடுத்திருக்கார். அத்தனையிலும் ”கதை” இருக்கு 

தீபாவளிப் பட்சணங்கள், பொங்கல் நேரத்து பரபரப்பான வீதிகள், விடலைப் பருவத்தில் அரும்பும் காதல்கள், நட்பு, பாசம், செண்டிமெண்ட், நகரத்து வாழ்க்கையில் தொலைத்திட்ட இயல்புகள், பேருந்துப் பயணம், சாதி வெறி, மரணம், ஏக்கம்னு எல்லா உணர்வுகளுக்கும் இந்தத் தொகுப்பில் இடமுண்டு. “சென்னையில இருக்கதே உத்தியோகஸ்தனம்”னு நெனைக்கிற ஊர்க்காரப் புரிதலை ஒரே வரியில் சொன்ன சாமர்த்தியத்துக்கு 100 லைக்ஸ்.
இல்லாத ஒன்றைக் கற்பனையாகவோ , நடக்காத ஒன்றை நடந்ததாகவோ கதை ஆசிரியர் சொல்லல. புத்தகம் முழுக்க சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் எல்லாமே உங்களுக்கும் எனக்கும் எங்கோ எப்போதோ நடந்தது தான். நம்ம வீட்டிலேயோ அல்லது அக்கம்பக்கத்து வீடுகள்லயோ நிச்சயம் ஒரு க்ரிஸ்டியோ, மைக்கேலோ, நாதனோ, அபிராமியோ, டெஸியோ, ப்ரீத்தியோ உண்டு. இவங்க தான் இந்தக் கதைத்தொகுப்பின் காரணகர்த்தாக்கள்.
சம்பவங்களையெல்லாம் நேர்த்தியான சம்பாஷைனைகளாக் கோர்த்து நெல்லை மண் மணக்க மணக்க மாலையாக்கித் தொடுத்திருக்கிறார் கதை ஆசிரியர். அத்தனைத் தெளிவான எழுத்து நடை. வட்டார வார்த்தைப் பிரயோகம். வாசிக்கும் போதே நெல்லை மண்ணின் வீதிகளில் நாம் நடந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது.
நெல்லையப்பரையும் , இருட்டுக்கடை அல்வாவையும் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் நாமும் இனி சென்னையில் இருந்து ஊருக்குச் செல்லும் பயணத்தின் போது நெல்லை வட்டார மக்கள் உடனிருந்தால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பது ”மேரி ஆர்டனா” “மேரி சார்ஜண்ட்டா” இல்ல “கதீட்ரலா”ன்னு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கூடவே வீடு எங்கே “பொதிகை நகரா” “என்.ஜி.ஓ. காலனியா” இல்ல “டேனியல் தாமஸ் தெருவா”ன்னு பரிச்சயம் காட்டிக் கொள்ளலாம்.
நீங்களும் ”வற்றா நதி”யை வாசிச்சுப் பாருங்க. புரியும். உங்களுக்கும் பிடிக்கும். வற்றா நதிக்குக் ”காட்டாறு”ன்னு கூடப் பேர் வச்சிருக்கலாம் தான். அப்படி ஒரு பாய்ச்சல் கார்த்தியின் எழுத்து நடையில்.
”வற்றா நதி”யில் வாசகர் வெள்ளம் பெருகி வளம் சேர்க்கட்டும்.
வாழ்த்துகள் கார்த்தி.

Thursday 18 December 2014

ஏர் ஹோஸ்டஸ்

”ஸ்ரீ .... பக்கத்து ஃப்ளாட்ல புதுசா ஒரு ஏர்ஹோஸ்டஸ் குடி வந்திருக்காங்க போல.... ஃப்ரெண்ட் பிடிச்சு வச்சிக்கோ. ஏதாச்சும் ஆஃபர் வந்தா ஹெல்ப் கேக்க யூஸ் பண்ணிக்கலாம்”

“சேச்சே ...எனக்கு இண்ட்ரஸ்ட் இல்ல”

“என்ன இன்ட்ரஸ்ட் இல்ல”

“ப்ச் ....ஏர்ஹோஸ்டஸ் ஆக இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொன்னேன். ஷிஃப்ட் மாத்தி மாத்தி வரும். டைம் செட் ஆகாது. அதோட எனக்கு உயரம்னா ரொம்ப பயம். ரெண்டாவது மாடியில இருந்து எட்டிப் பார்க்கவே பயப்படுவேன். ஃப்ளைட்ல அவ்ளோ உயரத்துலயா ???? அதுவுமில்லாம ஏர்போர்ட் கூரை வேற அடிக்கடி உடைஞ்சு விழுதாம். அதனால நோ சான்ஸ்”

“ஹேய்ய்ய் உன்ன யாருடி இப்ப ஏர்ஹோஸ்டஸ் வேலைக்குக் கூப்பிட்டாங்க”

“பின்ன....நீ தானப்பா சொன்ன ....ஏதாச்சும் ஆஃபர் வந்தா ஹெல்ப் கேட்டு யூஸ் பண்ணிக்கலாம்னு ..... ”

“நான் சொன்னது ஃப்ளைட் டிக்கெட்ஸ்க்கு ஏதும் ஆஃபர் வந்தா யூஸ் பண்ணிக்கலாம்னு”

“ஹி ஹி அப்டியா”

“வர வர நீ எப்ப சீரியஸா பேசுற எப்ப காமெடி பண்றன்னே தெரியல”
( பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு  ...... )

காளி

ஒவ்வொரு காயத்தின் மீது
கூர் தீட்டிப் பார்த்து
கவனமாய் செதுக்கியிருக்கிறேன்
என் வலிகளனைத்தையும்

உன் குருதி பார்க்கத் துடிக்கும்
என் வலியின் நாவினை
கடிவாளமிட்டுச் சற்றே
பொறுத்திருக்கப் பழக்கியிருக்கிறேன்

இன்னும் தீர்ந்துவிடவில்லை
நம் எல்லாக் கணக்குகளும்
தீர்ப்பெழுதா வழக்கொன்றில்
தண்டிக்கப்பட்டவள் நான்

வலி சுமந்தலையும் யட்சிணி
பலி கேட்கிறாள் உன் சிரசை
குரூரம் உறைந்திருக்கும் இதயத்தை
எரித்துச் சாம்பலாக்கி

நரம்புகளறுத்து மாலையாக்கி
கடைசித்துளி உதிரத் திலகமிட்டு
வெற்றிக் களியாடும் பொழுதினில்
மீண்டும் காளியாவேன் நான்......

Monday 15 December 2014

இடியாப்ப அச்சு

காலங்காத்தால 6:00 மணிக்கெல்லாம் (!!!!) காலிங் பெல் சத்தம் கேட்டு திடுக்குன்னு எழுந்து போய்ப் பார்த்தா பக்கத்து வீட்டுப் பையன்.

“என்னடா சக்தி”

“அம்மா ....இடியாப்பம் பிழியுறது வாங்கிட்டு வரச் சொன்னாங்க ஆண்ட்டி”

“இரு வரேன்”னு சொல்லிட்டுப் போய் எடுத்துக் குடுத்தேன்..

உதய்க்கும் தூக்கம் கலைஞ்சு போய்..... “யாரது ..இந்நேரத்துல காலிங்பெல் அடிச்சுட்டு”

“பக்கத்து வீட்டுப் பையன்”

“என்னவாம்”

“இடியாப்பம் பிழியுறது கேட்டு வந்தான்”

“ப்ச் ...அதுக்கு இவ்ளோ காலங்கார்த்தால இப்டியா காலிங் பெல் அடிச்சுக் கேக்குறது”

“ம்ம்.. தப்பு தான்”

“கதவைத் தட்டியாவது கேக்கலாம்ல...காலிங்பெல் அடிச்சது தலை வலிக்குது”

“சரி அவனுக்குத் தெரிஞ்சது அவ்ளோ தான்”

“ இதெல்லாம் சொந்தமா வாங்கி வச்சுக்க வேண்டியது தான ....காலையில வந்து கடன் கேட்டுட்டு”

“ம்ம்ம்”

” இனி தூங்கின மாதிரி தான். ”

“சின்னப் பையன் தான ...”

"நீ போய் அவங்க அம்மாகிட்ட சொல்லு ...இனி எதும் கேக்குறதுன்னா கதவைத் தட்டிக் கேக்க சொல்லுங்க ...காலிங்பெல் அடிக்காதீங்கன்னு”

“ சரி விடுப்பா ...எனக்கு தூக்கம் வருது”

திடீர்னு ஞாபகம் வந்து “ஆமா ...நம்ம வீட்ல ஏது இடியாப்பம் பிழியுறது????”

“அது அவங்களோடது தான் .....போன வாரம் நான் தான் அவங்ககிட்ட இருந்து இடியாப்பம் செய்யலாம்னு  வாங்கிட்டு வந்தேன்.... திருப்பிக்குடுக்க மறந்துட்டேன்”

.............

என்னவோ திட்ற மாதிரி சத்தம் கேட்டுச்சு ...அதுக்குள்ள நான் தூங்கிட்டேன்

Wednesday 10 December 2014

தாய் மண்

புதிதாய் முளைத்த ஒரு செடியை வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு வைக்க நேர்கையில் தவறாமல் அதன் தாய்மண்ணையும் சேர்த்தே எடுத்துச் செல்வது வழக்கம். புதிய சூழல், மண்ணின் தன்மை , ஈரப்பதம், பழகி வேர்விடத் தொடங்கும் செடிக்கு ஆதாரமே அந்தத் தாய்மண் தான்.

பெண்களின் திருமண வாழ்வும் இப்படித் தான். திருமணம் முடிந்து கணவனுடன் புதிதாய் ஒரு வாழ்வைத் தொடங்கும் பெண்ணும், அவள் வந்தடைந்த புதிய சூழல், புதிய மனிதர்கள், அவர்தம் பழக்கவழக்கங்கள் என எல்லாவற்றிலும் .....தான் அத்தனைக் காலம்  ஒன்றி வாழ்ந்திட்ட தாய்வீட்டின் சாயலையே அஸ்திவாரமாக்கிக் கட்டமைத்துக் கொள்கிறாள்.

நானும் அப்படியே. திருமணம் முடிந்து சென்னையில் துவங்கிய புதுவாழ்க்கை. வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் உள்ள பொருட்களை வைப்பதில் என் தாய் வீட்டு சாயல்