Thursday 23 January 2020

சிறுகிழங்கு


சென்னைக்கு வந்து இத்தனை வருசம் ஆனாலும் இன்னும் கூட சில நேரங்கள்ல இங்க பேசுற சில வார்த்தைகள் எங்க ஊர்ப்பக்கம் பேசுற வார்த்தைகளோட ரொம்பவே முரண்பட்டிருக்கும்….எனக்கும் சில வார்த்தைகள் சுட்டுப்போட்டாலும் இங்க பேசுற மாதிரி வராது….
அதனாலேயே வெளி இடங்களுக்குப் போய் பேசும் போது நம்ம இந்த ஊரு ஆளு இல்லன்னு ரொம்ப ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க…. ஆஃபீஸில இருந்தப்ப கட்டடம் சம்பந்தமான பல வார்த்தைகளெல்லாம் ஊர்ல பேசுறதுக்கு அப்டியே ரிவர்ஸ்ல இருக்கும்….
பள்ளம் நோண்டிருக்காங்க - தோண்டியிருக்காங்க 
காவா அடைச்சிருக்கு     - வாய்க்கால் அடைச்சிருக்கு
இப்டி நிறைய்ய வார்த்தைகள்…..
ஆனாலும் இந்தக்காய்கறி வாங்கும் போது அதிலும் குறிப்பா கிழங்கு வகைகள்லாம் ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு பேர் இருக்க இவங்க ஏன் எல்லாக் கிழங்கையும் ஒரே பேர் சொல்லிக் கூப்பிடுறாங்கன்னு இருக்கும்…..
இன்னைக்கு காய்கறிக்கடையில சிறு கிழங்கு இருக்கான்னு கேட்டேன்….காய்கறி வாங்க வந்த ரெண்டு மூணு லேடீஸுக்கு அப்படி ஒரு கிழங்கு இருக்குன்னே தெரியல….அது பரவால்ல….ஒரு அக்கா சேப்பங்கிழங்க எடுத்துக் காட்டி ”தோ ருக்கு பாரும்மா”ன்னாங்க…
“அய்யோ அக்கா அது பேரு சேப்பங்கிழங்கு”ன்னு சொன்னேன்….
“தோ பார்ரா….சேனக்கெழங்க சேப்பக்கெழங்குன்னுது”ன்னாங்க
“அதான பாரேன்ன்”ன்னு இன்னொரு அக்கா சொன்னதும்
“ஆமா…இது பேரு சேப்பங்கிழங்கு தான்….அதோ இருக்கே அது பேரு தான் சேனக்கிழங்குன்னு சொன்னதும்
“தோ….இதான் சேனக்கெழங்கு”ன்னு கருணக்கிழங்க எடுத்து காட்டுனாங்க
“இது கருணக்கெழங்குக்கா… பிடி கருணைன்னு சொல்லுவோம் …இதுல புளிக்குழம்பு வைப்போமே”ன்னதும்
“ன்னாது அது புளிக்கொழம்பு”
“அதான்….இங்க காரக்குழம்புன்னு சொல்லுவீங்களே”
“ஆங்ங்ங்….சரியாப் போச்சு…..ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மாதிரி போல”ன்னுட்டு போய்ட்டாங்க
எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருந்த பெரியம்மா ஒருத்தங்க மெதுவா கிட்ட வந்து ”யம்மா…இதுக்கு உங்கூர்ல என்னா பேரு”ன்னாங்க
“எல்லா ஊர்லயும் இதுக்குப் பேரு உருளைக்கிழங்குதான்”னதும் ஒரு பெருமூச்சு விட்டு முகத்தை முந்தானையால துடைச்சிட்டு “இந்த ஊர் நாட்டுக்காரங்கல்லாம் பேர் வைக்கிறதே வேலன்னு இருப்பாங்க போல”ன்னு முனகிட்டே போனாங்க….
இதெல்லாம் போகட்டும்….இந்த சிறுகிழங்கு பத்தி நிறைய பேருக்குத் தெரியல….தை மாசம் ஒட்டி தான் இந்தக் கிழங்கு நிறைய கிடைக்கும்….கிழங்கு முழுக்கவே மண்ணு ஒட்டியிருக்கும்….கொஞ்சம் ஈரப்பதத்தோட இருக்கும் போதே கையால அல்லது சாக்குப்பையால கிழங்க தேய்ச்சோம்னா அதோட தோல்பகுதி தனியா வந்துடும்…கிழங்கு வெளேர்னு இருக்கும்….கழுவிட்டு ஒண்ணு ரெண்டா துண்டாக்கி கனத்த இரும்புச்சட்டியில எண்ணெய் விட்டு காய்ஞ்சதும் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்துப் போட்டு அதுல கிழங்க வறுத்து எடுத்து சாப்பிட்டா அவ்ளோ ருசியா இருக்கும்….அல்லது குக்கர்ல ஒரு விசில் வேக வச்சு தோல உரிச்சு வதக்கியும் சாப்பிடலாம்…..
கிழங்கு வகைகள் எல்லாமே மண்ணுக்குள்ள தான் விளைஞ்சு வருது ஆனாலும் இந்தக்கிழங்கோட ஸ்பெஷல் என்னன்னா சமைச்சதுக்கப்புறம் கூட இந்தக்கிழங்குல மண் வாசம் இருக்கும்….சாம்பார் பருப்பு மாதிரியான குழம்புக்கெல்லாம் சூப்பரான சைட் டிஷ்…..இன்னும் ரெண்டு மாசத்துக்கு கிடைக்கும்னு நினைக்கிறேன்….கடைகள்ல பார்த்தீங்கன்னா கண்டிப்பா வாங்கி சாப்பிட்டுப் பாருங்க….    

Sunday 19 January 2020

விருப்பக்குரலும் திருத்த வேண்டிய உச்சரிப்பும்....


”சித் ஸ்ரீராம் முறைப்படி சங்கீதம் கத்துக்கிட்டு பாட வந்தவரு…அதென்ன அப்டி சொல்லிட்டீங்க….சரியா பாடலேன்னு…உச்சரிப்பு சரியில்லேன்னு…..”

“அவன் பயோவ கூகுள்ல தேடிப் பாரு…எத்தனை அவார்ட் வாங்கிருக்கான்னு…திறமை இல்லாமலா அவார்ட் குடுக்குறாங்க?”

“க்கா….சித் வாய்ஸ் எவ்ளோ சூப்பரா இருக்கு….அவனப் போய் நல்லாப் பாடலன்னு சொல்லிட்டீங்க….அதான் அந்த போஸ்ட நான் லைக் பண்ணவும் இல்ல…கமெண்ட் பண்ணவும் இல்ல…அப்டியே போய்ட்டேன்”

அன்பின் சித் ஸ்ரீராம் ரசிகர்காள்.....ரோமியோ ஜூலியட் படத்துல வர்ற “தூவானம் தூவ தூவ” பாட்டப் பாடின விஷால் தத்லானி தமிழன் இல்ல….

“பேட்ட” படத்துல “உல்லாலா” பாட்டப் பாடின நர்கீஸ் அஜீஸ் தமிழன் இல்ல….

லதா மங்கேஷ்கர், உஷா உதூப்ல இருந்து ஸ்ரேயா கோஷல் வரைக்கும் தமிழ் தெரியாத பாடகர்கள் பாடின தமிழ்ப்பாட்டுகளைக் கேக்கும் போது இவங்களுக்கெல்லாம் தமிழ் தெரியாதுன்னே சொல்ல முடியாது….அத்தனை கச்சிதமான உச்சரிப்பு இருக்கும்…

கர்நாடக சங்கீதம் தெரியாத சினிமா பாடகர்கள் ரொம்பவே கம்மி தான்….ஆனா சினிமாவுல பாட்டு பாடும் போது அந்த சாயல் வராம பாட்டு சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரிப் பாடுறதுல தான அவங்க திறமை இருக்கு…அதையும் மீறி ஒண்ணு ரெண்டு இடங்கள்ல அவங்க ஒரிஜினாலிட்டி வெளிப்படும் தான்….ஆனா முழுப்பாட்டும் அப்படியே இருக்கும்போது தான் பாட்டு அந்நியமாகுது….

விஜய் பிரகாஷ எடுத்துக்கிட்டோம்னா “நான் கடவுள் “ படத்துல வர்ற “ஓம் சிவோஹம் பாட்டு”ல மனுசன் பிரிச்சி மேய்ஞ்சிருப்பாரு…அந்தப் பாட்டுக்கான அத்தனை தேவையும் அதில குறையில்லாம இருக்கும்….அதே விஜய் பிரகாஷ், ”தென்மேற்குப் பருவக்காற்று” படத்துல வர்ற ’ஏடி கள்ளச்சி’ பாட்டுல  ”முள்ளு தச்ச ஆடு போல நெஞ்சுக்கு”ழி” நோக-ன்னு ”ழி”க்கு அத்தனை அழகா அழுத்தம் குடுத்துப் பாடியிருப்பாரு…ஆனா படத்துல விஜய் சேதுபதி தேனி பக்க ஊர்க்காரர்…அங்கிட்டு இருக்கவய்ங்களுக்கெல்லாம் ”ழ” எப்டிய்யா வரும்”

அதே மாதிரி தான் ’எள்ளு வய பூக்கலையே’ பாட்டுல ’கொல்லையில வாழ எல, கொட்டடியில் கோழிக்குஞ்சு”ன்னு பாடும்போது சைந்தவி ”ழ”கரத்த அத்தனை அழகா உச்சரிச்சுருப்பாங்க….ஆனா இதுலயும் படம் எடுக்கப்பட்ட இடம்…திருநெல்வேலிப்பக்கம்….அங்கயும் யாருக்கும் “ழ” வராது….ரெண்டு படமுமே நேட்டிவிட்டிய சொல்லியிருக்க விதம் அட்டகாசமா இருக்கும்…அந்தப் பாய்ச்சல்ல இந்தப்பாட்டுகள்ல வர்ற இந்தச் சின்ன விசயமெல்லாம் ஒரு பொருட்டே இல்ல….ஆனாலும்…அந்த உச்சரிப்புல நேட்டிவிட்டி மிஸ் ஆகிடுதுல்ல….. 

இதெல்லாம் கூட ஒண்ணு ரெண்டு எழுத்துக்களோட பெருசா கவனத்த சிதைக்காம பாட்டோட ஒட்டிக் கிடக்குறதால நாமளும் அத கண்டுக்குறதில்ல….ஆனா சித்ஸ்ரீராம் பாட்டுல இது எல்லாமே தனித்தனியா அங்கங்க தொங்கிட்டு இருக்கது தான் பிரச்சனயே…..   

பாடகர்கள்தான்னு இல்ல, இன்னும் கூட ரஜினி , அர்ஜூன் உச்சரிப்பப் பார்த்தீங்கன்னா சில தமிழ் வார்த்தைகள் அவங்களுக்கு வரவே வராது….உதாரணமா….”ஒண்ணு சொல்றேன்”ங்கிறது ரஜினி வாயில இருந்து ”வொண்ணு சொல்றேன்”னு தான் வரும்….சமீபத்திய உதாரணம் தர்பார் படத்துல வற்ற டயலாக் ”ஒரிஜினலாவே நான் வில்லன் தான்ப்பா”ங்கிறத “வொரிஜினலாவே”ன்னு தான் சொல்லுவார்….

சரி இவங்கல்லாம் தமிழர்கள் இல்ல….அதனால மன்னிச்சு விட்ரலாம்…தக்காளி சித்துவுக்கெல்லாம் என்ன கேடுன்றேன்….

ஆனாலும் சித்ஸ்ரீராமின் பொருட்டு விரும்பியே பாரம் சுமக்கும் பரிசுத்த ஆவிகளுக்கு ஆறுதலான ஒரு செய்தியும் இருக்கிறது…. ஆளானப்பட்ட ஜேசுதாஸ் கூட ஆரம்ப காலகட்டத்துல திருக்கோவிலை ”தெருக்கோவிலேன்னு” பாடினவரு தான்….. அதனால மனச தளரவிட்ராம கொஞ்சம் மெனக்கெட்டு தமிழ சரியா உச்சரிச்சுப் பாடினா கேக்க இன்னும் நல்லா இருக்கும்.

கறிவேப்பிலை : பாட்டை ரொம்ப சிலாகிச்சு எங்கூட ஃபேஸ்புக், வாட்ஸப், ஃபோன்கால்ல சண்டை போட்டவங்களுக்கு நாலு வரி ’நான் பாடினத’ அனுப்பியும் வச்சிருக்கேன்… அத்தோட அங்கிட்டு நாலு ஆத்மா ஜீவசமாதி ஆகிருச்சு….வேற யாருக்கும் பாட்டு வேணுமா???

Friday 17 January 2020

பொங்கல் துணி

எப்பவும் துணி தைக்கக் குடுக்குற டெய்லர் அக்கா…பொங்கலை முன்னிட்டு ரொம்ப பிஸியாகிட்டதால எனக்குத் தைக்க வேண்டிய துணியை எடுத்துட்டு வேற ஒரு டெய்லர் கடைக்குப் போயிருந்தேன்….
வாசல்லயே குறுக்கும் நெடுக்குமா பெண்கள் ஒரு பரபரப்போட உலாவிட்டுருந்தாங்க….. அதப் பார்த்ததும் எனக்கு டெலிவரிக்கு ஆஸ்பத்திரி போன ஞாபகம் வந்தது…அங்க தான் பெண்கள் முகத்துல இவ்ளோ டென்சனப் பார்த்திருக்கேன்…
இது போக நாலைஞ்சு பேர் வரிசையில வேற நின்னுட்டு இருந்தாங்க…..அவங்கள்லாம் துணி தைக்கக் குடுக்க காத்திருக்க வரிசையாம்….சரின்னு கடைசியாப் போய் நின்னேன்….குடுகுடுன்னு ஒரு அக்கா ஓடி வந்து எனக்கு முன்ன இருந்தவங்களக் காட்டி இவங்களுக்கு அடுத்து உங்களுக்கு முந்தி நான் தான்….முன்னாடி இருக்க நாலு பேர் தைக்கக் குடுக்குறதுக்குள்ள நான் போய் மாவு வாங்கிட்டு வந்துர்றேன்….நீங்க யாரையும் விட்ராதீங்கன்னு மிரட்டாத குறையா சொல்லிட்டுப் போனாங்க…
சரி யார் தான் அந்த டெய்லர் அக்கான்னு பார்ப்போமேன்னு நாலு பேரைத் தாண்டி அந்த அளவெடுக்குற அக்காவ எட்டிப் பார்த்தேன்….டேபிள் மேல துணியெல்லாம் குவிச்சு வச்சிருந்ததால …அவங்க முகத்தப் பார்க்க முடியல….சரின்னு ஒரு ஸ்டெப் பின்னாடி நகர்ந்தா கால்ல ஏதோ இடிக்குற மாதிரி ஃபீலாகவும் திரும்பிப் பார்த்தா எனக்குப் பின்னாடி ஒருத்தங்க….நான் கொஞ்சம் முன்னால நகர்ந்த கேப்-ல அவங்க துணிப்பைய என் காலுக்குப் பின்னாடி வச்சிருக்காங்க…”என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா”ன்னு கேக்க நினைச்சு நிமிர்ந்து பார்த்தா என் உயரத்துக்கு அவங்க தோள் மட்டும் தான் தெரியுது…. ஆள் தோரணையப் பார்த்து பேசாம திரும்பி அட்டென்சன்ல நின்னுக்கிட்டேன்….
இதுக்குள்ள முதல் ஆள் தைக்கக் குடுத்துட்டு கிளம்ப மத்தவங்களும் முன்னால நகர்ந்ததும் நானும் ஒரு அடி எடுத்து வைக்க பழையபடி பின்னங்கால்ல கட்டைப்பை….தோள்பக்கமா மெல்ல திரும்பி அவங்களுக்குத் தெரியாம முறைச்சுட்டு முன்னாடி திரும்புனா , என் மூக்குல முட்டுற மாதிரி மூஞ்சியக் கொண்டு வந்து ”போட் நெக்குன்னா என்ன”னு எனக்கு முன்னாடி நின்னுட்டு இருந்தவங்க கேட்டாங்க….
”போட் நெக்குன்னா கழுத்து உயரமா வைக்குறதுங்க”
“முன்னாடியா பின்னாடியா”ன்னு கேட்டதும் நான் முழிச்சுட்டு நிக்க…
பின்னாடி இருந்து கட்டப்பை என் தோள்ல கை போட்டு அழுத்தி “ஏங்க அறம் படத்துல நயந்தாரா போட்டுட்டு வர்றது தாங்க போட் நெக்”குன்னு சொன்னதும் முன்னாடி இருந்தவங்க “ஓ….அப்ப போட் நெக் தச்சுப் போட்டா நாமளும் நயந்தாரா மாதிரி இருப்பமா”ன்னு இந்தம்மா கேக்க “ஆமா அடுத்து ரஜினி படத்துல நடிக்க உங்களத்தான் கூப்புடுவாங்க”ன்னு அந்தம்மா சொல்ல கலகலப்பு படத்துல பேயிக்கும் திமிங்கலத்துக்கும் நடுவுல சந்தானம் மாட்டிக்கிட்டு தலையில அடிச்சுக்குற மாதிரி என்னைய நிக்க வச்சுட்டு ரெண்டு பேரும் ஒரே சிரிப்பு….
ரெண்டாவது ஆளும் தைக்கக் குடுத்துட்டுப் போய்ட்டாங்க… அடுத்ததா நம்ம போட் நெக்கும் வேலைய முடிச்சுட்டு நகர அப்பாடான்னு கட்டப்பையிட்ட இருந்து சந்தோசமா கால நகர்த்துனேன்…..க்ளைமேக்ஸ்ல ப்ளாட்ஃபார்ம்ல விழுந்தடிச்சு ஓடி வந்து டிரெயின்ல போற ஹீரோயின நிறுத்துற ஹீரோ மாதிரி நம்ம மாவு அக்கா மூச்சு வாங்க வந்து என் கைய பிடிச்சு நிறுத்திட்டாங்க…. “நல்ல வேள நீங்க குடுக்குறதுக்குள்ள வந்துட்டேன்”ன்னதும் ஆத்தீ…நம்மள விடப் பெரிய்ய அத்லெட்டா இருப்பாங்க போலன்னு நினைச்சுட்டே “கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்கக்கா”ன்னேன்….
ஒரு வழியா என்னோட முறை வந்து பைக்குள்ள இருந்து துணிய வெளிய எடுத்து டேபிள் மேல வச்சேன்… டெய்லர் அக்கா அதிர்ச்சியாகி ”நைட்டியா”ன்னு கேட்டுட்டு ”கூட வச்சிருக்கவங்களுக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் குடுக்குறதில்லம்மா” கணக்கா…. ”இப்ப இருக்க பிஸிக்கு பொங்கலுக்கு நைட்டில்லாம் நைட்டி தச்சுக்குடுக்க முடியாதுங்க…வேணும்னா 22ம் தேதி வாங்கிக்கோங்க” நெக்ஸ்ட்ன்னு சொல்லாத குறையா எனக்குப் பின்னாடி நின்னுட்டுருந்த கட்டப்பையப் பார்க்கவும் விட்டா மூஞ்சில தூக்கி எறிஞ்சிடுவாங்க போலயேன்னு மரியாதைய காப்பாதிக்க வேற வழி இல்லாம “பரவால்ல….அவசரம் இல்ல….நீங்க பொங்கலுக்கு அப்புறமே தச்சுக் குடுங்கன்னு குடுத்துட்டு திரும்பினேன்….
ஏதோ ஞாபகம் வர ”நீங்க பில்லு குடுக்கலையே”ன்னு கேட்க அவங்க கட்டப்பைக்கு அளவு நோட் பண்ணிட்டே “இப்போதைக்கு யாருமே நைட்டி தைக்க குடுக்கலைங்க…நான் ஞாபகம் வச்சிருப்பேன்….அது அங்கேயே தான் இருக்கும்….எதுக்கும் 22ம் தேதி ஒரு ஃபோன் பண்ணிட்டு வாங்க”ன்னுட்டு நோட்ல எழுத ஆரம்பிச்சாங்க……கட்டப்பை லைட்டா திரும்பி “போட் நெக்குக்கு நீ முழிக்கும் போதே நெனைச்சேன்….நீ நைட்டி கோஷ்டின்னு” எகத்தாளமா பார்க்க நொந்துட்டே வீட்டுக்கு வந்தா வாசல்கிட்ட பக்கத்து வீட்டுக்காரம்மா
”என்ன வெண்பாம்மா….பொங்கல் வந்திருச்சு போல”ன்னு கையில இருந்த துணிப்பைய பார்த்துட்டே கேக்க கவுண்டமணி வடக்குப்பட்டி ராமசாமிகிட்ட குடுத்த கடன் மாதிரி ஊ ஊன்னு ஊளைச்சத்தம் தான் மண்டைக்குள்ள கேக்குது….