Thursday 16 June 2016

கேசரியா உப்புமாவா..... என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா

பக்கத்து வீட்ல இருந்து இன்னைக்கு ஒரு டப்பா நிறைய கேசரி கொண்டு வந்து கொடுத்தாங்க...
“வீட்ல ஏதும் விஷேசமாங்க?”
“அட ...அதெல்லாம் இல்லீங்க ...இந்த ரவைய வாங்கி நாளாச்சு....அதான் வேஸ்ட்டாகுதேன்னு கேசரி செஞ்சுட்டேன்”
“  " (அடங்கொக்காமக்கா)
"ம்ம்...சாப்ட்டு பாருங்க”
“இல்ல பரவால்ல....நான் அப்புறமா சாப்பிடுறேன் ...இப்ப தான் டிஃபனே சாப்ட்டேன்”
“ஆங்ங் அதெல்லாம் இல்ல...நீங்க ஏன் சாப்புட மாட்டேங்குறீங்கன்னு தெரியும்”
(தெரிஞ்சி போச்சா) “அப்டியா...ஏன்ன்னு சொல்லுங்க பாப்போம்”
“உங்க ஹஸ்பண்டுக்கும் குடுத்து சாப்புடணும்னு தான அப்புறமா சாப்பிடுறேன்னு சொல்றீங்க”
(ஷப்பா ....இத நாஞ்சொன்னா என் ஹஸ்பண்டே நம்ப மாட்டாரு தாயி) ”ஹி ஹி”
“சரி பரவால்ல...கொஞ்சம் டேஸ்ட் பண்ணி சொல்லுங்க”
(வேற வழி) “ம்ம் நல்லாருக்கு”
“இல்லையே .....சுகர் கொஞ்சம் கம்மியாருக்குமே”
(இதுக்கு மேல முடியாது) “கொஞ்சமில்ல ரொம்பவே கம்மியாருக்குங்க”
“ஆமா...ஏன்னா எங்க மாமனாருக்கு சுகர்....அதனால எப்பவும் கேசரியில சீனி கொஞ்சமா தான் போடுவோம்”
“ம்ம்”
“நெய் வாசனையும் வந்திருக்காதே”
”ம்ம் ....அதான் உங்க மாமனாருக்கு.....”
“ஆங்ங் கரெக்ட் கரெக்ட்” “முந்திரிப்பருப்பும் கூட போடல”
“ம்ம் ம்ம் புரிஞ்சுக்கிட்டேன்”
“இல்ல இல்ல அது காலியாப் போச்சு ...அதான் போடல”
(பின்ன எதுக்கும்மா கேசரி பண்ணீங்க)“ஓகோ”
“இத இப்டியே சாப்புடாதீங்க”
( நான் எப்புடியும் சாப்புட மாட்டேன்ம்மா...கவலப்படாத) “ஆங்ங் அப்புறம்”
“சீனி தொட்டு சாப்புடுங்க”
“என்னது சீனி தொட்டா? உப்புமாவுக்கு தான சீனி தொட்டு சாப்புடுவோம்”
“ஹா ஹா அப்டித்தான்...இதுல தான் சீனியே இல்லையே...அதனால நாங்கல்லாம் சீனி தொட்டு தான் சாப்புடுவோம்”
(அடாப்பாவிகளா) “வாவ்....செம ஐடியாங்க”
“ம்ம் சரி சாப்பிடுங்க.....உங்க ஹஸ்பண்டுக்கு வேணும்னா இன்னும் கொஞ்சம் கேசரி கொண்டு வந்து தரேன்”
(இன்னுமா இத கேசரின்னு சொல்றீங்க) “இல்ல பரவால்ல...நாங்க இதையே ஷேர் பண்ணிக்குறோம்”
“ம்ம் ...ஓக்கேங்க”
ஒலகத்துலேயே ”கேசரிக்கு” சீனி தொட்டுச் சாப்பிடுற ஃபேமிலி இதுவாத்தான் இருக்கும் போல 
ஃபேஸ்புக்ல பத்துப் பதினைஞ்சு ஃபேக் ஐடிய ஃப்ரெண்டா வச்சிருக்கவங்கல்லாம் நிம்மதியா இருக்காங்க… பக்கத்து வீட்ல ஒரே ஒருத்தர ஃப்ரெண்டா வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே…அய்யோயோய்யோ 

அம்மா வீடு

பத்து நாள் அம்மா வீட்ல இருந்துட்டு வந்தாலும் கூட பத்தவே மாட்டேங்குது. சிங்கிள் லக்கேஜோட ஊருக்குப் போய் இறங்கிட்டு திரும்ப வரும் போது ஒரு சின்ன சரக்கு ரயில் அளவுக்கு பொருட்களோட நேத்து சென்னைக்கு ரயில் ஏறியாச்சு.
ஊருக்குப் போயி அம்மாவுக்கு எல்லா வேலைகள்லயும் உதவி பண்ணணும்னு நெனைச்சுட்டுப் போனா அங்க சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி எந்திருக்கவே நேரம் பத்தல 
“ம்மா அடுத்த தடவ வரும் போது உங்கள ரெஸ்ட்டா உக்கார வச்சு நானே எல்லா வேலையும் பார்க்குறேன்”ன்னு சொன்னதுக்கு “அதெல்லாம் வேணாம்டி....உங்க வீட்ல மாப்பிள்ளைய வேலை வாங்காம நீயும் வேலை செய்யப் பழகு”ன்னு சொல்றாங்க....( இன்னுமாய்யா உதய்ய இந்த உலகம் நம்புது  )
ஏழு கழுத வயசானாலும் இன்னமும் ஊருக்குக் கிளம்பும் போது கண்ணு கலங்கத்தான் செய்யுது. சோஃபாவுல கிடந்த கர்ச்சீஃப எடுத்து கண்ணீரத் தொடைச்சுட்டு ஹேண்ட் பேக்ல வச்சிக்கிட்டேன். கீதா மட்டும் ரொம்ப அமைதியா என்னையே பார்த்துட்டு இருந்தா.
ரயில் ஏறிட்டு அம்மாவுக்கு ஃபோன் பண்ணிச் சொன்னதும் கீதா ஃபோன வாங்கி கேட்டா “சித்தி அழுவுறீங்களா?”
“சேச்சே இல்லையே”
“அப்ப ஏன் சோஃபால கிடந்த கர்ச்சீப்ப எடுத்து கண்ண துடைச்சிட்டு ஹேண்ட்பேக்ல வச்சிக்கிட்டீங்க?”
“அதுவா...அது சும்மா”
“அந்த கர்ச்சீஃப்ல தான் நான் மூக்க சிந்திட்டு வச்சிருந்தேன்....வீட்டுக்குப் போனதும் நல்லா துவைச்சிடுங்க”
“அட பிசாசே....முதல்லயே சொல்ல வேண்டியது தானடி”
“ஆங்ங்...நீங்க தான் அழுதுட்டு இருந்தீங்களே”
“மூஞ்சி...சரி சரி இதப் போயி யார்ட்டயும் சொல்லாத என்ன”
“நான் சொல்ல மாட்டேன் சித்தி”
“வெரிகுட்”
“ஆனா ஃபோன் ஸ்பீக்கர்ல தான் இருக்கு”
(பின்னாடி ஒரே சிரிப்புச் சத்தம்......)