Wednesday 22 April 2020


நேற்று யூ-ட்யூப்பில் “உயரே” மலையாள திரைப்படம் பார்த்தேன்… சப்டைட்டில்கள் இல்லாத பிரிண்ட்….சப்டைட்டில்களை  வாசிக்கும் நேரத்தில் கேரக்டர்களின் உடல்மொழியைப் புரிந்து கொள்ள மெனக்கெடலாம் என்பது என் புரிதல்…..அப்படித்தான் நிறைய வேற்றுமொழிப் படங்களைப் பார்க்கிறேன்…..
இதில் “உயரே” மொத்தப் படமும் எத்தனை நிமிடங்கள் என்று தெரியவில்லை….நான் பார்த்ததில் 2 மணிநேரம் 6 நிமிடங்கள் என்று இருந்தது…..காட்சிகள் ஏதும் விடுபட்டிருந்ததாவெனத் தெரியவில்லை….மலையாளமும் எனக்குத் தெரியாது…..வசனங்கள் தவிர்த்துப் படத்தைப் புரிந்து கொண்டவகையில் சில கேள்விகள் இருக்கிறது….அதனால் இந்தப் பதிவு…
பள்ளிப்பருவத்திலிருந்தே பைலட் ஆகும் கனவுகளுடன் வளர்கிறார் பார்வதி…. அம்மா இறந்தவுடன் ஹாஸ்டலில் சேர்ந்து படிப்பைத் தொடரும் நேரத்தில் சீனியர் பையன் கோவிந்தனுடன் அறிமுகமாகும் நட்பு பள்ளியிலிருந்து கல்லூரி வரையிலும் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவு வரையில் கொண்டு செல்கிறது….
தன்னுடைய முன்கோபத்தாலும் நிலையின்மையாலும் தொடர்ந்து ஒரே வேலையில் நிலைக்க முடியாமல் பல கம்பெனிகள் மாறுகிறான் கோவிந்தன்….பார்வதியின் விருப்பப்படி கோவிந்தனை அவனது அலுவலகத்தில் சந்திக்கச் செல்கிறார் பார்வதியின் அப்பா….பத்து நிமிட சந்திப்பிலேயே அவன் மீது நம்பிக்கையின்மை கொள்கிறார்…
வீட்டுக்கு வந்து அதைப் பார்வதியிடம் சொல்லி தெளிவான சிந்தனையுள்ள பெண்ணான நீ எப்படி கோவிந்தனை விரும்பினாய் எனப்புரியவில்லை எனக் கேட்கிறார்…. பார்வதி, தான் ஹாஸ்டல் சேர்ந்த புதிதில் தன்னுடைய சக மாணவர்களின் கேலிப்பேச்சுகளிலிருந்து தன்னைக்காத்து தனக்கு பாதுகாப்பாகவும் சப்போர்ட்டாகவும் கோவிந்தன் இருந்ததாகப் பதில் சொல்கிறார்….திகைப்புடன் இதை ஏன் அப்போதே என்னிடம் சொல்லவில்லை என்ற கேள்விக்கு அப்போது நான் உங்களை வெறுத்திருந்த காலம் அப்பா என்று சங்கடத்துடன் சொல்கிறாள்.
இதன் நடுவே தன்னுடைய கனவுப்படி பைலட் பயிற்சிக்காக மும்பை செல்கிறாள் பார்வதி…. பார்வதியின் மீதான பொஸஸிவ்னஸ்ஸும், இயல்பிலே முன்கோவமும் கொண்ட கோவிந்தன், பார்வதி பைலட் பயிற்சி வகுப்பில் இருக்கும்போதும் நண்பர்களுடன் இருக்கும்போதும் அவ்வப்போது போனில் அழைத்தும், அவள் ஃபோனை எடுக்காவிட்டால் கையை கிழித்துக்கொள்வது போன்ற கிறுக்குத்தனங்களையும் செய்து அவளை எரிச்சலடையச் செய்கிறான்….
பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த தினத்தில் இரவு டின்னருக்கு நண்பர்களுடன் ஹோட்டல் செல்கிறாள்….ஹோட்டலில் இருக்கும்போது போன் செய்யும் கோவிந்தனிடம், அவன் இயல்பைப் புரிந்து கொண்டதால் தான் ஹாஸ்டல் அறையில் இருப்பதாகவும் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் நாளை காலை பேசுகிறேன் எனவும் சொல்கிறாள்.
இடையிடயே மறுபடி தொடரும் கோவிந்தனின் ஃபோன்கால்களை துண்டித்தவாறும், நண்பர்களுடன் ஒன்றமுடியாத மனதோடும் ஹாஸ்டல் வந்து சேர்கிறாள்…..அங்கே ஊரிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் வந்து வாசலிலேயே அவளுக்காக கோவிந்தன் காத்திருக்கிறான்….
அவள் எத்தனையோ எடுத்துச் சொல்லியும் இப்படித்தான் தினமும் என்னிடம் பொய் சொல்லிவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறாயா எனக் கோவம் கொண்டு அவளை திட்டுகிறான்…..ஒரு கட்டத்தில் அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் பார்வதி, தனக்கான இடைவெளி ஒன்று வேண்டுமென கோவிந்தனிடம் சொல்கிறாள்….தன் வாழ்விலிருந்து வெளியேறும்படி சொல்லிவிட்டு தன் அறைக்குள் செல்கிறாள்…. அன்றைய இரவு முழுவதும் கோவிந்தனின் தொடர் தொலைபேசி அழைப்புகளை துண்டிப்பதோடு ஃபோனையும் அணைத்து வைக்கிறாள்…..
மறுநாள் காலை தன்னுடைய வண்டியில் வெளியே செல்லும்போது கோவிந்தன் அவளிடம் பேச வேண்டுமென நிற்கச் சொல்கிறான்….அவன் தனக்களித்திருந்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தவாறே வண்டியில் தொடந்து செல்ல முயற்சிக்கும் பார்வதியின் முகத்தில் ஆஸிட் எறிந்து விட்டு ஓடுகிறான் கோவிந்தன்….      
கோர்ட்டில் விவாதம் நடக்கும் போது கோவிந்தன் இதைச் செய்யவில்லை என கோவிந்தனின் வக்கீலும் கோவிந்தனும் நீதிபதியிடம் சொல்கின்றனர்….தான் அன்றைக்கு ஒரு இண்டர்வியூவில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்றதாக கோவிந்தன் சொல்கிறான்….
கோவிந்தனின் வக்கீல் நீதிபதியிடம் “கோவிந்தன் இந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வதாக இருந்தார்….இப்போதும் அவர் அதற்கு தயாராகவே இருக்கிறார்” எனச் சொல்கிறார்…..
நீதிபதி பார்வதியிடம் “அவர் சொல்வது போல் உங்களுக்கு எண்ணமிருக்கிறதா?” எனக் கேட்கிறார்….
அதிர்ந்து போகும் பார்வதி “வாட் யூ மீன்” என நடுங்கும் குரலிலே தான் கேட்கிறாள்…..
அதற்குப் பதில் பேசும் நீதிபதி பார்வதியிடம் “Mind ur language” எனச் சொல்கிறார்…..கோவிந்தன் பார்வதி மீது ஆஸிட் வீசியதை விடவும் அதிகம் அதிர்ந்து நான் கோவப்பட்டது இந்தக் காட்சியில் தான்… நண்பர் ஒருவரிடம் இந்தக் காட்சி பற்றிக் கேட்டபோது நீதிபதியிடம் ”What u… “ என்று சொல்வது அவரையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் தொனி என்பதால் அப்படிப் பேசக் கூடாது எனச் சொன்னார்….
எனக்குத்தான் மனது ஆறவில்லை… நீதிபதி என்பவர் வழக்கின் இருபக்கத்தையும் விசாரித்து இரு தரப்பு சாட்சியங்கள் அடிப்படையில் தீர்ப்பு சொல்பவர் என்ற வரையில் ஓக்கே….இந்தக்கதையில் தனிமனிதத் தாக்குதலில் சிக்கி உருக்குலைந்து சிதைந்து போய் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டு கண்முன்னே நிற்கும் ஒரு பெண்ணிடம் கூடவா நீதிமன்றத்திற்கும் நீதிபதிக்கும் மரியாதை தேவைப்படுகிறது…. உண்மையில் அந்தப்பெண் எதிர்வினையின்றி தாக்கப்படும் இடம் இது….ப்ச் …. இது போலத்தான் தாக்கியவனை அடையாளம் காட்டும் காட்சியும்….அப்போதும் அவளை அலட்சியக் கண்களுடன் பார்த்து விட்டு வேறு பக்கம் முகத்தைத் திருப்புவான் கோவிந்தன்…..      
பதினான்கு வயதிலிருந்து கண்களில் சுமந்து கொண்டு வந்த தன் கனவை தன் திறமையாலும், அறிவாலும், உழைப்பாலும் அந்தப் பெண் வெற்றிகரமாக அடையப் போகிற நேரத்தில் முன்கோவம், பொறுப்பின்மை,முட்டாள்தனம், சந்தேகபுத்தி நிறைந்த ஒரு கேவலமான ஆண் சிதைத்துப் போட்டு அதைத் தான் செய்யவேயில்லை என்றும் அபோதும் அவளைத் திருமணம் செய்யத் தயார் என்றும் சொல்லும்போது அந்தப் பெண் வேறென்ன செய்ய வேண்டுமென அந்த மெத்தப் படித்த நீதிபதி நினைக்கிறார் எனப் புரியவில்லை. இந்த இடத்தில் கோவிந்தனும் அந்த நீதிபதியும் ஒரு தராசின் இரு சமநிறை எடைக்கற்களே…..
பெண்கள் மீதான வன்முறைகள் தினந்தோறும் கணக்கேயின்றி உலகெங்கும் நடந்து கொண்டிருந்தாலும் …இந்தப் படத்தில் இத்தனைக் கொடூரமாக ஆஸிட் வீசி (தான் விரும்பிய ) பெண்ணைத் தாக்கியபின்னும் அதைச் செய்தவன் அந்தக் குற்றவுணர்வின் சாயல் சிறிதுமின்றி அலட்சியத்துடனே படம் முழுக்க வளைய வருவதாகக் காட்டப்பட்டிருப்பது மிகத்தவறான காட்சிப்படுத்தல்… அது போலவே மீடியா என்றொரு விசயமே இந்தப் படத்தில் இல்லை….ஒரு பெண் ஆசிட் வீசித் தாக்கப்படுவது என்பது சாதாரணமாகப் பஸ்ஸில் பயணிக்கும்போது பர்ஸ் திருடப்பட்டுவிட்டதைப் போல மலிந்து விட்டதாக நினைத்தார்கள் போல….
அதன் பிறகு தொடர் உடல் பயிற்சிகளின் மூலம் தேறி வரும் பார்வதி இந்த ஆஸிட் தாக்குதலால் இடது கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டு அதனால் விமானத்தை இயக்குவதில் குழப்பங்கள் ஏற்படும் என்ற நிலையின் மூலம் பைலட் லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது…. பார்வதி நொறுங்கிப் போகிறாள்…
ஒரு விமானப்பயணத்தில் இரண்டாம் முறையாக சந்திக்கும் டோவினோ மூலம் ஏர் ஹோஸ்டஸ் ஆகிறார்…..அந்த வேலையில் தன்னம்பிக்கையோடு தொடரும் நேரத்தில் ஒரு நாள்  அந்த விமானத்திலேயே பயணிக்கும்  கோவிந்தன் அவளுடன் பேச முயற்சிக்கிறான்…. அவனைக் கண்டுகொள்ளாமல் தவிர்க்கும் பார்வதியிடம் எரிச்சலடையும் கோவிந்தன் அவளிடம் வழக்கம் போல திமிராகப் பேச அவன் முகத்தில் தண்ணீரை வீசுகிறாள்…இதனால் கோவிந்தன் அவள் பணிபுரியும் விமானசேவை அலுவலகத்தில் அவளைப் பற்றிய குற்றச்சாட்டை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கிறான்…பார்வதியின் வேலை ஒரு மாத நோட்டீஸ் பீரியடுடன் பறிபோகிறது…
பார்வதியின் கடைசிநாள் பணியில் போது அந்த விமானத்தின் பைலட் உடல்நலக்குறைவால் மயக்கமடைய விமானம் தடுமாறுகிறது…. உதவி பைலட்டின் அனுபவமின்மையும் பதட்டமும் அவரை அந்தச் சூழலைக் கையாளத் தெரியாமல் திணறவைக்கிறது….விமான சேவை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு நிலைமையைச் சொல்லி விமானம் தரையிறங்க உதவி தேவைப்படுவதாக சொல்கிறார்….
அலுவலகத்திலிருந்து பேசும் மூத்த அதிகாரி விமானத்திலுள்ள பயணிகளில் யாரேனும் முறைப்படி விமானம் ஓட்டப் பயிற்சி பெற்ற பைலட் இருக்கிறார்களா எனக்கேட்கிறார்…..திரும்பத்திரும்ப இந்தக்காட்சியைப் பார்த்தபின்னும் கூட அவர் கேள்வியின் லாஜிக்கே புரியவில்லை….ஒரு ரயில் பயணத்திலோ பஸ் பயணத்திலோ ஓட்டுனருக்கோ பயணிகளுக்கோ ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்படும்போது அந்த பஸ்ஸில் அல்லது ரயிலில் யாரேனும் மருத்துவர்கள் இருக்கிறார்களா எனக் கேட்பதில் ஒரு லாஜிக் இருக்கிறது….பெரும்பாலும் முன்பதிவுகளிலேயே டாக்டர் என்றால் அதைக் குறிப்பிடுவோம் என நினைக்கிறேன்….
இது எதுவுமே இல்லையென்றாலும் ரங்கநாதன் தெருவின் நடுவே நின்று கொண்டு கூட்டத்தைப் பார்த்து இங்கே யாரும் டாக்டர் இருக்கிறீர்களா எனக்கேட்டால் நிச்சயம் பத்துப்பேரும் இஞ்சினியர் எனக்கேட்டால் நூறுபேரும் வந்து நிற்பார்கள்….அத்தனைக்கு சாத்தியம் இருக்கும் இடம் அது….
ஆனால் அந்த விமானத்தில் முறைப்படி பைலட் லைசன்ஸ் பெற்ற பைலட் யாரும் இருக்கிறார்களாவென பணிப்பெண்ணிடம் கேட்டறியச் சொல்லி அலுவலகத்திலிருந்து கத்துகிறார் பிரதாப்போத்தன்…பயணிகளின் விபரத்தில் பைலட் என்ற குறிப்பு இருக்காதா….அப்படி இல்லையென்றால் அதை விட முட்டள்தளம் ஏதுமில்லை….சரி அதை விட்டுவிடலாம்…
இப்போது விமானத்தைத் தொடந்து இயக்கி அது சேர வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்பது உண்மைதான்….ஆனால் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியாக வேண்டும்…வேறு வழியின்றி பார்வதி காக்பிட்டுக்குள் நுழைந்து பைலட்டாக அமர்கிறாள்….
துணை விமானியின் செய்தி மூலம் பார்வதி அங்கே அமர்ந்திருப்பதை அறிந்த பிரதாப் போத்தன் பதற்றம் கொள்கிறார்….டோவினோவை அழைத்து பார்வதியை அங்கே இருந்து வெளியேறும்படி சொல்லச் சொல்கிறார்…அவளுக்குப் பார்வைக்குறைபாடு இருப்பதால் அவளால் விமானம் ஓட்டமுடியாது என அவளுடைய பைலட் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டிருப்பதைச் சொல்லிவிட்டு “How dare she get in cockpit?” எனக் கேட்கிறார்…..
அந்த விமானத்தில் உள்ள பயணிகளில் யாருமே பயிற்சி பெற்ற பைலட் இல்லை…துணை விமானியும் பதட்டத்தில் இருக்கிறார்…விமானத்தைத் தரையிறங்க வைக்கப் பார்வதியின் துணை அன்றி வேறு தீர்வே அங்கு இல்லை….ஆனாலும் பார்வதியை நோக்கி “How dare” என்ற கேள்வியே கேட்கப்படுகிறது…இது அந்தப் பெண்ணின் மீதான இன்னொரு வகை தாக்குதல் தான்….
அப்பாவிடமும், பிரதாப்போத்தனின் தலைமையிலான அலுவலகத்திடமிருந்தும் கடும் நெருக்கடிகள் வந்த போதும் பார்வதியின் மீதுள்ள நம்பிக்கையில் அவளால் விமானத்தை இயக்கி பத்திரமாகத் தரையிறங்கமுடியும் என டோவினோ நம்புகிறான்….அந்த நம்பிக்கையைப் பார்வதிக்கும் கடத்துகிறான்….பார்வதி விமானத்தை பத்திரமாகத் தரையிறக்குகிறாள்….
சக விமானி “I can’t see the runway” எனும் போது பார்வதி “I can” என்கிறாள்….Yes…she can…because it’s just not only the runway…it’s her dream”
படம் பார்த்துவிட்டு disturbed ஆகவே தூங்கப் போயிருக்கிறேன் போல….இரவில் கண்ட கனவு காலையில் கூட தெளிவாக நினைவுக்கு வந்தது…. என் வீட்டுச் சுவற்றை விமானம் ஒன்று பறந்து வந்து இடித்து விட்டு நிற்பது போலக் கனவு….கேபிள் டீ.வி வயரெல்லாம் பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது….நல்லவேளையாக எனக்குப் பைலட் ஆகும் கனவும் இல்லை அந்த விமானத்தை நான் ஓட்டி வரவும் இல்லை என்பது மட்டுமே மிஞ்சி நின்ற ஆறுதல்….ஆனா இப்போ ஹாக்கி ஸ்டிக் வேணுமே…ஞான் எந்து செய்யும் L