Wednesday 12 June 2019

வேதம் அல்லது போதை


கொஞ்ச நாட்களாகவே ஒரு ஹாக்கி ஸ்டிக் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை மனதிற்குள் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது…. சென்னைக்கு வந்து வேலைக்குப் போக ஆரம்பித்த பொழுது முதல் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வந்து போன ஆசை தான் என்றாலும் கூட இப்போது ஏனோ அதை உடனே வாங்கி விட வேண்டுமென்று ஒரு பரபரப்பு…
பள்ளி நாட்களில் விளையாடிய ஹாக்கி ஸ்டிக்குகளின் இந்நாளைய பிராண்ட் மற்றும் விலை விபரமெல்லாம் அறிந்து கொள்ளும் பொருட்டு இரண்டு நாட்களாக ஆன்லைனில் தேடிக் கொண்டிருந்தேன். நாங்கள் விளையாடிய போது பயன்படுத்திய ஸ்டிக்குகளின் பெயர் “Vampire” “Punjab Tiger” என்றளவில் மட்டுமே நினைவில் உள்ளது….அந்த வகை ஸ்டிக்குகளின் விலையைப் பார்த்து விட்டு மனம் சற்று பின்வாங்கிக் கொண்டதென்னவோ உண்மை தான்.
இங்கே பிரச்சனை, வாங்குவதில் மட்டும் இல்லை…வாங்கிய பின் என்ன செய்வது என்று தான்…..மொட்டை மாடியில் wall practice செய்யலாம் என்றால் எங்கள் வீடோடு சேர்ந்து இரு பக்க வீடுகளும் பொதுச்சுவர்…..வீட்டு உரிமையாளரும் மாசாமாசம் வாடகை கேட்பது தவிர வேறு வகையில் மோசமில்லை என்பதால் சுவரை சேதப்படுத்தும் எண்ணமும் ”இப்போதைக்கு” இல்லை.
ஹாக்கி ஸ்டிக்கை எப்படிக் கையில் பிடித்துக் கொள்ளவேண்டும் என்பது தான் முதல் பாடமே.  ஸ்டிக்கை தலைகீழாகப் பிடிப்பதோ …முற்றாகத் தூக்கி எறிவதோ (கோவத்திலோ அல்லது மகிழ்ச்சியிலோ) கிடைமட்டமாய் தரையில் கிடத்துவதோ அல்லது கீழே கிடக்கும் ஸ்டிக்கை தாண்டுவதோ மிதிப்பதோ ஹாக்கி ஸ்டிக்கிற்குத் தரும் அவமரியாதை என எங்களுக்கு சொல்லித்தரப்பட்டது….
இயல்பிலேயே தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையில் நிறையவே சுருண்டு கிடந்தவளை நிமிர்ந்து நிற்க வைத்த இடம் ஹாக்கி மைதானங்கள் மட்டுமே…. கக்கத்தில் கைப்பையை இறுக்கிக் கொண்டு தூக்கிக் கட்டிய கொண்டையும் நெடு நெடுவென்ற உயரமுமாய் இருந்த பாளையங்கோட்டை டீச்சர் “எடீ அந்த அஞ்சாம் நெம்பர்க்காரிய பிடி “என கத்திக் கொண்டே மைதானத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த தருணங்கள் இன்றளவும் என் வாழ்நாளின் நிறைபோதைக் கணங்கள்….ஆறு வருடங்கள் ஆடிக் களித்த அந்த விளையாட்டின் போது எனக்குக் கொடுக்கப்பட்ட சட்டையின் எண் 5…என்னுடைய பிறந்த தேதியும் 5 தான் என்பதில் கூடுதல் பெருமை…
எனக்கு எப்போதும் ஹாக்கி ஸ்டிக்கும் அய்யனார் கையில் உள்ள அரிவாளும் ஒன்று போலத் தான் தெரியும்…..எந்த அய்யனாரும் அரிவாளை தலைகீழாகப் பிடித்தோ காலுக்குக் கீழே போட்டோ பார்த்திருக்க மாட்டோம் தானே…..இறுகப் பற்றிய பின் மேலே உயர்த்தி இறக்கினால் இரண்டிலும் பலி அல்லது கோல் விழ வேண்டும்…இல்லையா…
அடிக்கடி வந்து போகும் ஹாக்கி கனவுகளில் மைதானமோ கோல் போஸ்ட்டோ எதுவுமே தெரியாத வெட்ட வெளியில் ஓடிக்கொண்டிருக்கையில் கையில் உள்ள ஹாக்கி ஸ்டிக்கின் முன்னால் இந்த வாழ்க்கை தான் பந்தாக உருண்டு சென்றுகொண்டிருக்கும்…அந்தப் பந்தை எந்த கோல் போஸ்டில் கொண்டு சேர்ப்பது என்ற தெளிவே இன்னும் இல்லை என்ற போதும் இப்போதைக்கு விளையாடுவதை நிறுத்துவதாய் இல்லை……  
இங்கே கிரிக்கெட்டை மதமாகக் கொண்டாடுபவர்கள் உண்டு… என்னளவில் ஹாக்கி நான் கற்று மறந்த வேதம் அல்லது போதை….
பி.கு : சரி இப்போ எதுக்கு இப்டி புலம்பிட்டு இருக்க எனக் கேட்பவர்களுக்கு நாலு நாளைக்கு முன்னாடி தான் ”நட்பே துணை”ங்குற படத்துல ஹிப்ஹாப் ஆதி ஹாக்கி விளையாடுற சீன் பார்த்தேன்….ப்ப்ப்பாஹ் ஒண்ணும் சொல்றதுக்கில்ல……

Monday 10 June 2019

தேன் குழம்பு

தேன் குழம்பு ......
புதன் கிழமை என்றாலே ஞாயிறுக்கிழமை போல அசைவம் சாப்பிடும் ஆசை வந்துவிடுகிறது….நமக்கு எல்லா நாளும் ஒன்றுதான் என்றாலும் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் தெருவில் கூட யாரும் மீன் விற்றுக்கொண்டு போவதில்லை…… அதனாலேயே ஊருடன் சேர்ந்து சாம்பார் வைப்பதென்றாகிவிட்டது…..
இன்றைக்கு கோழிக்கறியோ, ஆட்டுக்கறியோ அதிர்ஷ்டம் இருந்தால் மீனோ சமைத்துச் சாப்பிட்டு விடவேண்டும் என்ற கனவுடன் தான் நேற்றைக்குத் தூங்கவே போனேன்…
காலையிலேயே மீன் விற்கும் அக்காவின் சத்தம் தான் எழுப்பி விட்டது…பக்கத்து வீட்டில் ஒவ்வொரு புதனும் தவறாமல் மீன் வாங்கி விடுவார்கள்…அதனால் அவர்கள் வீட்டு வாசலிலேயே மீன் விற்கும் அக்கா உக்கார்ந்திருந்தார்கள்….வாங்கும் மீனை அவர்களே சுத்தம் செய்து தருவதால் வேண்டிய மீன்களைத் தேர்வு செய்து பாத்திரம் கொடுத்து போய்விட்டு கொஞ்ச நேரம் கழித்து வந்து வாங்கிக் கொள்ளலாம். அந்த நேரத்தில் மற்ற வீட்டு வேலைகளைப் பார்க்கப் போய்விடலாம்….இது ஒரு வசதி.
அலுமினியக் குண்டான் நிறைய மீன் குவியல்கள்….எந்த மீனுக்கும் பேர் தெரியவில்லை எனக்கு….”என்ன மீனும்மா வேணும்” என அக்கா கேட்க “பாப்பாவுக்கு சாப்பிடக் குடுக்குற மாதிரி முள் அதிகம் இல்லாத மீனா குடுங்கக்கா” என்றேன்…. ஏதேதோ பேர் சொன்னார்….அதில் பாறை…கானாங்கத்தை என்ற பேர்கள் தான் பரிச்சயமாய் இருந்தது…. சென்னை முழுக்க விலை மீன் விலை மீன் என்று சொல்லி விற்கிறார்கள் பேரே அதுதானா எனத் தெரியவில்லை…தவிர விலை கொடுக்காமல் வாங்கும் மீனென்று எதுவும் இருக்கிறதா என்ன ?
ஊர்ப்பக்கமெல்லாம் ஆறு, குளம், அணைக்கட்டு என உயிரோடு மீன்களைப் பார்த்து வாங்கிய காலத்தில் பிறந்துவிட்டு …இப்போது என்னைப் பார் என் கண்ணைப் பார் என மீன்களின் கண்களைப் பார்த்து வாங்கும் காலத்திற்கு வந்தாயிற்று…நல்ல மீன்களைப் பார்த்து வாங்குவது எப்படி என்று இன்னும் புத்தகம் யாரும் எழுதாததே ஆச்சர்யமாய் இருக்கிறது….
அப்பாவுடன் ஊரிலுள்ள ஆற்றுமேட்டுக்கு வெள்ளம் வரும் காலங்களில் போய் வேஷ்டித் துணி விரித்து வெளிச்சி மீன் அல்லது அயிரை மீன் பிடித்திருக்கிறேன்….சேற்றில் ஜிலேபி கெண்டை மீனும் ….ஊருக்கு வெளியில் இருந்த கல்கிடங்கில் அப்பா தூண்டில் போட்டு மீன் பிடிக்கையில் கண்கொட்டாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்திருக்கிறேன். தூண்டிலில் மாட்டுவதற்கென மண்புழுக்கள் பிடித்து வைத்திருக்கும் டப்பாவைப் பார்த்துக் கொள்வது தான் என்னுடைய வேலை. வீட்டில் நாங்கள் செய்யும் சேட்டையின் போதெல்லாம் அந்தத் தூண்டில் குச்சி தான் அப்பாவின் நாவாகப் பேசி விளாசும்…..குப்பைமேட்டில் கண்ணாடித் துண்டுகள் பொறுக்கப் போய் வரிவரியாக முதுகில் வாங்கி வீங்கிக் கிடந்திருக்கிறேன்… தூண்டில் நரம்பும் நுனியில் மாட்டும் கொக்கியும் அப்பாவின் நினைவாக வீட்டு அலமாரியில் ஒரு சின்ன டப்பாவில் இன்றைக்கும் பத்திரமாக இருக்கிறது…..
அக்கா மகள் கீதாவை அவள் பள்ளியில் விடுவதற்குப் போகையில் ”அதோ அந்த தண்ணி டேங்குக்குப் பின்னாடி தெரியுது பாரேன்…அது தான் ஆத்து மேடு …அங்க வெள்ளம் வரும்போது தாத்தா கூடப் போய் மீன் பிடிப்போம்….குளிப்போம் துணி துவைப்போம்…செம்மையா ஆட்டம் போடுவோம்” என்று சொன்னதற்கு ”போங்க சித்தி…ஆறு இருந்திச்சாம் …தண்ணி வந்திச்சாம்…ஆட்டம் போட்டாகளாம் …சும்மா ரீல் விடாதீங்க”ன்னு வீடு வரும் வரையில் சிரித்துக் கொண்டே வந்தாள்.
அப்போது வரை கீதாவிடம் சுட்டிக் காட்டுவதற்காவது வற்றிப் போன ஆறும் கல்கிடங்கும் இருந்த இடம் வெற்றிடமாக இருந்தது…இன்றைக்கு அந்த இடங்களில் கட்டிடங்கள் முளைத்து ஊரின் முகமே அடையாளம் மாறிக் கிடக்கிறது…. கல்கிடங்குகள் இருந்த இடத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பாலங்கள் முளைத்திருக்கின்றன… பள்ளித் தோழி பாரதியும் நானும் அவரவர் வீட்டுக்குப் பிரியும் அந்த இருபக்க சாலையின் வளைவு இன்னும் நினைவில் இருந்து அழியவேயில்லை…..
வெண்பாவிடம் ஊரைப் பற்றிச் சொல்வதற்கோ என் பள்ளிக்காலங்களின் பொக்கிஷங்களைப் பகிர்ந்து கொள்வதற்கோ சான்றாக ஒன்றுமேயில்லை….
குழம்பில் மீன் வெந்து முடிப்பதற்குள் இந்த மனது ஒரு இருபது வருடம் பின்னோக்கி நீந்திப் போய் வந்துவிட்டது……மீன் பொரிப்பதற்கு மசாலா தோய்த்து வைத்த கைகளில் மிளகாய்ப்பொடி எரிச்சலும் எண்ணி ரெண்டே ரெண்டு மிளகாயை நீளவாக்கில் கீறிப்போட்டதன் காரம் நாக்கிலும் இன்னும் மிச்சமிருக்கிறது…. தோழி ஒருத்தி அடிக்கடி பீற்றிக் கொள்வாள்….”எங்கம்மா மீன் குழம்பு வச்சா தேன் குழம்பு மாதிரி இருக்கும்” என்று….அப்போதைக்கு ஏதாவது நக்கலாகச் சொல்லி அவள் வாயை அடைப்பேன்…இன்றைக்குத் தெரிந்தது மீன் குழம்பு தேன் குழம்பாவதன் ருசி ….