Wednesday 11 September 2019

அன்னப்பறவையும், அருந்தும் பாலும்


அன்னப்பறவையும், அருந்தும் பாலும்.......



கடந்தவாரம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ”சித்தன்னவாசல்” சென்றிருந்தோம்….அங்குள்ள தியான மண்டபத்தைப் பற்றியும் மேற்கூரையில் இயற்கை வண்ணங்களால் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் குறித்தும் அங்கே காவலுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பணியாளர் ஆர்வத்துடன் விளக்கிச் சொன்னதில் மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமும் இருந்தது…..அது அன்னப்பறவையானது பாலும் தண்ணீரும் கலந்து இருந்தால் கூட அதில் தண்ணீரைப் பிரித்து பாலை மட்டும் உண்ணும் என்ற செய்தி… இந்த செய்தி சிறு வயது முதலே கேள்விப்பட்ட ஒன்றுதான் என்றாலும் கூட அதற்கு அவர் அளித்த விளக்கம் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் உண்மையாக இருக்கக்கூடும் என்று நம்பும்படியும் இருந்தது.

அவர் சொன்ன விளக்கம் “தாமரைப்பூக்கள் நிரம்பியுள்ள இந்தக்குளத்தில் அன்னப்பறவைகள் நீந்திக் கொண்டிருக்கும் போதும், நீரில் உள்ள் மீன்கள் மற்றும் சிறு பூச்சிகளைப் பிடித்து இரையாக உட்கொள்ளும் போதும் அவற்றின் கூரிய கால் நகங்கள் மற்றும் கூரிய அலகு, தாமரைத்தண்டின் மீது பட்டு அவை வெட்டுப்படும் போது அந்தத் தாமரைத் தண்டின் வெட்டப்பட்ட பகுதியில் இருந்து வரும் பாலானது தண்ணீருடன் கலக்காமல் நீரில் மிதந்து கொண்டிருக்கும்…அந்தப் பாலையே அன்னப்பறவையானது உண்ணும்….

தண்ணீரிலேயே இருந்தாலும் கூட தாமரை இலைகளிலோ பூவிலோ நீர் ஒட்டாது என்பது நாம் அறிந்ததே. அது போல தாமரைத்தண்டின் பாலும் தண்ணீரில் ஒட்டாமல் மிதந்து கொண்டிருக்க, அதை அன்னப்பறவை உண்ணும் என்று விளக்கினார். இந்த விளக்கம் மிக எளிதாகவும் உண்மையாய் இருக்கக்கூடியதாகவும் இருக்கிறது….

நேற்றைக்கு மகள் எப்போதும் விரும்பிப் பார்க்கும் சுட்டி டீவியில் “பொம்மியும் திருக்குறளும்” என்கிற நிகழ்ச்சியில் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் குழந்தைகளுக்கு எளிதாகப்புரியும் வகையில் திருக்குறளைப் பற்றி சிறு சிறு கதைகளாகச் சொல்லும் தொடரின் ஒரு பகுதியைப் பார்க்க நேர்ந்தது….

அதில் அன்னப்பறவையைப் பற்றி அவர் குழந்தைகளுக்குக் கொடுத்த விளக்கம் “அன்னப்பறவையின் அலகில் ஒரு ஸ்ப்ரே இருக்கும்….அதைத் தண்ணீரில் தெளித்தவுடன் தண்ணீரும் பாலும் தனியாகப் பிரிந்துவிடும்…அதன் பின்னர் அன்னப்பறவை அந்தப்பாலை மட்டும் அருந்தும்” எத்தனை அபத்தமான விளக்கம்….