Sunday 19 January 2020

விருப்பக்குரலும் திருத்த வேண்டிய உச்சரிப்பும்....


”சித் ஸ்ரீராம் முறைப்படி சங்கீதம் கத்துக்கிட்டு பாட வந்தவரு…அதென்ன அப்டி சொல்லிட்டீங்க….சரியா பாடலேன்னு…உச்சரிப்பு சரியில்லேன்னு…..”

“அவன் பயோவ கூகுள்ல தேடிப் பாரு…எத்தனை அவார்ட் வாங்கிருக்கான்னு…திறமை இல்லாமலா அவார்ட் குடுக்குறாங்க?”

“க்கா….சித் வாய்ஸ் எவ்ளோ சூப்பரா இருக்கு….அவனப் போய் நல்லாப் பாடலன்னு சொல்லிட்டீங்க….அதான் அந்த போஸ்ட நான் லைக் பண்ணவும் இல்ல…கமெண்ட் பண்ணவும் இல்ல…அப்டியே போய்ட்டேன்”

அன்பின் சித் ஸ்ரீராம் ரசிகர்காள்.....ரோமியோ ஜூலியட் படத்துல வர்ற “தூவானம் தூவ தூவ” பாட்டப் பாடின விஷால் தத்லானி தமிழன் இல்ல….

“பேட்ட” படத்துல “உல்லாலா” பாட்டப் பாடின நர்கீஸ் அஜீஸ் தமிழன் இல்ல….

லதா மங்கேஷ்கர், உஷா உதூப்ல இருந்து ஸ்ரேயா கோஷல் வரைக்கும் தமிழ் தெரியாத பாடகர்கள் பாடின தமிழ்ப்பாட்டுகளைக் கேக்கும் போது இவங்களுக்கெல்லாம் தமிழ் தெரியாதுன்னே சொல்ல முடியாது….அத்தனை கச்சிதமான உச்சரிப்பு இருக்கும்…

கர்நாடக சங்கீதம் தெரியாத சினிமா பாடகர்கள் ரொம்பவே கம்மி தான்….ஆனா சினிமாவுல பாட்டு பாடும் போது அந்த சாயல் வராம பாட்டு சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரிப் பாடுறதுல தான அவங்க திறமை இருக்கு…அதையும் மீறி ஒண்ணு ரெண்டு இடங்கள்ல அவங்க ஒரிஜினாலிட்டி வெளிப்படும் தான்….ஆனா முழுப்பாட்டும் அப்படியே இருக்கும்போது தான் பாட்டு அந்நியமாகுது….

விஜய் பிரகாஷ எடுத்துக்கிட்டோம்னா “நான் கடவுள் “ படத்துல வர்ற “ஓம் சிவோஹம் பாட்டு”ல மனுசன் பிரிச்சி மேய்ஞ்சிருப்பாரு…அந்தப் பாட்டுக்கான அத்தனை தேவையும் அதில குறையில்லாம இருக்கும்….அதே விஜய் பிரகாஷ், ”தென்மேற்குப் பருவக்காற்று” படத்துல வர்ற ’ஏடி கள்ளச்சி’ பாட்டுல  ”முள்ளு தச்ச ஆடு போல நெஞ்சுக்கு”ழி” நோக-ன்னு ”ழி”க்கு அத்தனை அழகா அழுத்தம் குடுத்துப் பாடியிருப்பாரு…ஆனா படத்துல விஜய் சேதுபதி தேனி பக்க ஊர்க்காரர்…அங்கிட்டு இருக்கவய்ங்களுக்கெல்லாம் ”ழ” எப்டிய்யா வரும்”

அதே மாதிரி தான் ’எள்ளு வய பூக்கலையே’ பாட்டுல ’கொல்லையில வாழ எல, கொட்டடியில் கோழிக்குஞ்சு”ன்னு பாடும்போது சைந்தவி ”ழ”கரத்த அத்தனை அழகா உச்சரிச்சுருப்பாங்க….ஆனா இதுலயும் படம் எடுக்கப்பட்ட இடம்…திருநெல்வேலிப்பக்கம்….அங்கயும் யாருக்கும் “ழ” வராது….ரெண்டு படமுமே நேட்டிவிட்டிய சொல்லியிருக்க விதம் அட்டகாசமா இருக்கும்…அந்தப் பாய்ச்சல்ல இந்தப்பாட்டுகள்ல வர்ற இந்தச் சின்ன விசயமெல்லாம் ஒரு பொருட்டே இல்ல….ஆனாலும்…அந்த உச்சரிப்புல நேட்டிவிட்டி மிஸ் ஆகிடுதுல்ல….. 

இதெல்லாம் கூட ஒண்ணு ரெண்டு எழுத்துக்களோட பெருசா கவனத்த சிதைக்காம பாட்டோட ஒட்டிக் கிடக்குறதால நாமளும் அத கண்டுக்குறதில்ல….ஆனா சித்ஸ்ரீராம் பாட்டுல இது எல்லாமே தனித்தனியா அங்கங்க தொங்கிட்டு இருக்கது தான் பிரச்சனயே…..   

பாடகர்கள்தான்னு இல்ல, இன்னும் கூட ரஜினி , அர்ஜூன் உச்சரிப்பப் பார்த்தீங்கன்னா சில தமிழ் வார்த்தைகள் அவங்களுக்கு வரவே வராது….உதாரணமா….”ஒண்ணு சொல்றேன்”ங்கிறது ரஜினி வாயில இருந்து ”வொண்ணு சொல்றேன்”னு தான் வரும்….சமீபத்திய உதாரணம் தர்பார் படத்துல வற்ற டயலாக் ”ஒரிஜினலாவே நான் வில்லன் தான்ப்பா”ங்கிறத “வொரிஜினலாவே”ன்னு தான் சொல்லுவார்….

சரி இவங்கல்லாம் தமிழர்கள் இல்ல….அதனால மன்னிச்சு விட்ரலாம்…தக்காளி சித்துவுக்கெல்லாம் என்ன கேடுன்றேன்….

ஆனாலும் சித்ஸ்ரீராமின் பொருட்டு விரும்பியே பாரம் சுமக்கும் பரிசுத்த ஆவிகளுக்கு ஆறுதலான ஒரு செய்தியும் இருக்கிறது…. ஆளானப்பட்ட ஜேசுதாஸ் கூட ஆரம்ப காலகட்டத்துல திருக்கோவிலை ”தெருக்கோவிலேன்னு” பாடினவரு தான்….. அதனால மனச தளரவிட்ராம கொஞ்சம் மெனக்கெட்டு தமிழ சரியா உச்சரிச்சுப் பாடினா கேக்க இன்னும் நல்லா இருக்கும்.

கறிவேப்பிலை : பாட்டை ரொம்ப சிலாகிச்சு எங்கூட ஃபேஸ்புக், வாட்ஸப், ஃபோன்கால்ல சண்டை போட்டவங்களுக்கு நாலு வரி ’நான் பாடினத’ அனுப்பியும் வச்சிருக்கேன்… அத்தோட அங்கிட்டு நாலு ஆத்மா ஜீவசமாதி ஆகிருச்சு….வேற யாருக்கும் பாட்டு வேணுமா???

No comments:

Post a Comment