Saturday 24 October 2015

கீழடி - நம் முன்னோர்களின் காலடி

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த நம் தமிழ் மக்களின் வாழ்விடத்தை சற்றும் சலனமேயின்றி தன்னுள் புதைத்து வைத்தவாறு அன்றைய வரலாற்றின் மவுன சாட்சியாய் பரந்து கிடந்தது அந்த தென்னந்தோப்பு. கால் பதிக்கும் இடமெல்லாம் சிதறிக் கிடக்கும் மண்பாண்டத் துண்டுகளில் மறைந்து போன அம்மக்களின் பசி தீர்த்த கலயங்கள் எத்தனையோ !!!! இத்தனை ஆயிரம் வருடங்கள் கழித்தும் இந்த பூமிக்குப் பங்கமின்றி அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களுக்கு இன்றைய தினத்தில் விலை மதிப்பே இல்லை.
மண்பாண்டங்களின் வடிவமைப்பும், உறுதியும், வேலைப்பாடுகளும் இத்துனை வருடங்கள் தாண்டியும் சிதையாமல் இருப்பதில் அதை வனைத்தவர்களின் உழைப்பும், ஈடுபாடும், அர்ப்பணிப்பும் பிரமிக்க வைக்கிறது. அவர்கள் அணிந்திருந்த ஆபரணத்தில் தங்கமும் வைரமும் இல்லை தான்.... கண்ணாடியிலும் களிமண்ணிலும் கண்ணைக் கவரும் வகையில் கலைநயத்துடன் ஆபரணங்களை வடிவமைக்கத் தெரிந்தவர்களுக்கு தங்கம் வைரத்தின் தேவையென்ன இருந்திருக்கப் போகிறது?. அன்றைக்கு நம் பூட்டி அணிந்திருந்த அந்த நகைகள் தான் இன்றைய நவீன நங்கையரின் நாகரீக அடையாளமான டெரகோட்டா நகைகள். வரலாறு இந்த இடத்தில் திரும்பித்தான் இருக்கிறது….
கட்டிடங்களுக்கு உபயோகப்படுத்தியிருக்கும் செங்கற்களின் அதிக எடையும் அளவும் அவற்றின் கட்டமைப்பும் அதீத பலத்துடன் இன்றும் கம்பீரமாய் இருக்கிறது. உறைகிணறுகள் , தரைப்பரப்பு, தண்ணீர்த்தொட்டிகள் , தானியங்கள் சேமித்து வைக்கும் குலுதாடி , இரும்பு ஆயுதங்கள், சிட்டாங்கல் விளையாடப் பயன்படுத்தும் வட்டவடிவ தட்டைக்கல், மண்பொம்மைகள், தந்தம், கண்ணாடியில் செய்யப்பட்ட ஆபரணங்கள் எனப் பலவற்றையும் காண முடிந்தது.
இந்த வருடம் மழைக்காலம் தொடங்குவதற்குள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இந்த இடங்கள் அனைத்தும் மறுபடி மூடப்படும் என அங்குள்ள ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இத்தனைப் பேரின் முயற்சியாலும் உழைப்பாலும் அடையாளம் காணப்பட்டுள்ள இந்த அரிய பொக்கிஷத்தை அதிக விலை கொடுத்தேனும் பாதுகாக்காமல் மறுபடி ஏன் மூடுகிறார்கள் என விளங்கவேயில்லை. அரசாங்கம் இந்த இடத்தை தன்னகப்படுத்தி மேலும் ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கப்படுத்தினால் இன்னும் பலப்பல அரிய பொருட்களும் நம் தமிழ் வரலாற்றின் தொன்மையும் தெளிவாக உலகுக்கு தெரியும் என்பதில் ஐயமேதும் இல்லை.
அடுத்தமுறை இங்கு வந்தால் இவற்றை மறுபடி பார்க்க முடியுமா என்ற சிந்தனையோடு அந்த தென்னந்தோப்பை விட்டு வெளியேறுகையில் மனதில் தோன்றியது ஒரு விஷயம் தான். அதிகபட்சம் இரண்டே இரண்டு வருடங்களில் நம் வாழ்நிலத்தை பிளாஸ்டிக் பொருட்களால் எளிதாக சீரழித்துக் கொள்ள முடிகிற நமக்கு இந்த வரலாறு சொல்லும் பாடம் என்ன தெரியுமா? நமக்குப் பின்னான சந்ததிக்குமானது தான் இந்த நிலமும் நீர்ப்பரப்பும்….இயற்கை கொடுத்த எதையுமே அழிக்கும் உரிமை மனிதனுக்கு கிடையாது. நம் முன்னோர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ள அதே சமயத்தில் நமக்குப் பின்னான அனைத்து உயிர்களும் வாழக்கூடியதாய் இந்த பூமியை விட்டுச் செல்வதில் தான் நாம் வாழும் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தம் உள்ளது.
கீழடி – நம் முன்னோர்களின் காலடி

No comments:

Post a Comment