Saturday 11 April 2015

குற்றம் பார்க்கின் ....

வேளச்சேரியில் நாங்கள் அடிக்கடி செல்லும் ஒரு உணவகத்துக்கு சென்றிருந்தோம். அங்கு பணிபுரியும் கடைநிலை ஊழியர்களில் இருந்து மேலாளர் வரை அனைவரும் பணிவுடனும் துரிதமாகவும் நாம் கேட்கும் உணவுகளை வழங்குவார்கள். உணவகம் சுத்தமாகவும் அமைதியான சூழ்நிலையோடும் இருக்கும். வழக்கம் போல ஆர்டர் செய்து விட்டு பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது 40-45 வயது மதிக்கத்தக்க நபர் பக்கத்து மேசையில் வந்தமர்ந்தார். அடுத்த சில நொடிகளிலேயே அவரை நோக்கி வந்த உணவக பணியாளர்  சுத்தமான கண்ணாடி தம்ளரை மேசையில் வைத்து அதில் குடிநீர் ஊற்றிச் சென்றார். அவர் நகர்ந்து சென்ற இரண்டொரு நிமிடங்களில் மற்றொரு பணியாளர் அவரிடம் வந்து மிகப் பணிவாக மெனு கார்டை கொடுத்து அவர் விரும்பும் உணவினை தேர்வு செய்யக் கொடுத்தார்.

மெனுகார்டைப் பார்வையிட்டபடி அந்தப் பணியாளரிடம் அதட்டலான குரலில் அந்தந்த உணவு வகைகள் இருக்கிறதாவென ஒவ்வொன்றாய் மெனுகார்டைக் காட்டிக் கேட்டபடி இருந்த நபர் கடைசியில் ஒரு உணவு வகையினை தேர்வு செய்து ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்கத் தொடங்கினார்.

எங்களுக்கான உணவு வந்ததும் நாங்கள் சாப்பிடத் தொடங்கினோம். திடீரென்று அந்த பக்கத்து மேசை நபர் பெருங்குரலில் உணவகப் பணியாளர்களை நோக்கிக் கத்திக் கொண்டிருந்தார். வேறொரு மூலையில் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்த மேலாளர் இவரின் கூக்குரல் கேட்டு அவர் மேசையை நோக்கி ஓடி வந்தார்.

“என்னாச்சு சார்”

“ஆர்டர் குடுத்து எவ்ளோ நேரமாச்சு....இன்னும் டேபிளுக்கு வரல”

மேலாளர் , சமையல் அறை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த மேசைக்குரிய பணியாளரிடம் சென்று  விசாரித்து விட்டு “சார்....இதோ ரெடியாகிருச்சு சார் ...ரெண்டு நிமிஷத்துல வந்திடும்”

“என்ன ...வந்திடும் ....எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது.... ஆர்டர் வாங்கிட்டுப் போன அந்த ஹிந்திக்காரப் பையனக் கூப்பிடுங்க”

மேலாளர் அந்தப் பணியாளரை வரச் சொல்ல , அவரும் பணிவுடன் வந்து நின்றார்.

அவரிடம் ஹிந்தியில் இந்த நபர் “உங்கிட்ட ஆர்டர் குடுத்து அரைமணி நேரமாச்சு.....இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க” என எகிற

பணியாளரோ மிகத் தாழ்மையான குரலில் “ சார்.... உள்ள ரெடியாகிருச்சுன்னா  உடனே எடுத்துட்டு வந்திடுறேன்”

“இந்த ஐட்டத்துக்கே இவ்ளோ நேரமா .....நான் வந்து உக்கார்ந்து முக்கால்மணி நேரமாச்சு.... கஸ்டமரை சரியா கவனிக்க மாட்டேங்குற....என்னய்யா வேலை பார்க்குற” என்று அதிகாரமாகக் கேட்டார்.

பணியாளர் அப்போதும் அமைதியாக “ சார் ....நீங்க வந்து உக்கார்ந்து ரெண்டு நிமிஷத்துல தண்ணீர்  கொண்டு வந்து வச்சோம் சார்.... அப்புறம் ஆர்டர் எடுத்து அதுவும் ரெடியாகிருச்சு சார்”

“முட்டாள்.... எதிர்த்து எதிர்த்து பேசுற .....எந்த ஊரு நீ”

“சார் ....ஹைதராபாத் சார்”

“ஹைதராபாத்தா ....ஹிந்தி பேசுற....அப்புறம் ஹைதராபாத்துன்னு சொல்ற....என்ன பொய் சொல்றியா”

“இல்ல சார் நான் ஹைதராபாத் தான்”

இடையில் குறுக்கிட்ட மேலாளர் அந்த வாடிக்கையாளரிடம் “சார்...இங்க கஸ்டமர்  கிட்ட  எப்படி நடந்துக்கணும்னு இவங்களுக்கு கத்துக் கொடுத்திருக்காங்களோ அப்படி தான் சார் அந்தப் பையனும் நடந்துகிட்டான்....என்னோட வேலை இவங்கள கண்காணிக்குறது தான் சார்....உங்களுக்கு சரியான நேர இடைவெளியில தான் சார் ஆர்டர் எடுத்திருக்காங்க. அதுவும் ரெடியாகிருச்சு. இப்போ எடுத்துட்டு வந்துடுவாங்க” என்று பொறுமையாக விளக்கம் கொடுத்தார்.

அப்போதும் கோவம் குறையாத அந்த நபர் பணியாளரிடம் “நீ ஹிந்தி தான பேசுற…பின்ன ஏன் ஹைதராபாத்துன்னு பொய் சொல்ற” என்று ஹிந்தியில் கேட்க அதுவரை அமைதியாக இருந்த அந்தப் பணியாளர் தன் குரலை உயர்த்தி ”ஏன் சார் ஹைதராபாத்ல இருக்கவங்க ஹிந்தி பேசக்கூடாதா இல்ல ஹிந்தி பேசுறவங்க ஹைதராபாத்ல இருக்கக் கூடாதா ? உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை நான் வேலை செய்யுறதுலயா இல்ல ஹிந்தி பேசுறதுலயா?” என்று பொட்டில் அடித்தாற் போலக் கேட்க இப்போது அந்த நபர் வாயடைத்துப் போயிருந்தார்.

அந்த ஹோட்டலில் இருந்த யாருமே அந்த நபரின் பேச்சை விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. எல்லார் முன்பாகவும் உரக்கக் கேள்வி கேட்ட அந்தப் பணியாளரை நிமிர்ந்து பார்த்து பதில் சொல்ல முடியாத அந்த நபர்  மேலாளரிடம் திரும்பி “இங்க கஸ்டமர் கவனிப்பே சரியில்ல...நீங்களும் பொறுப்பில்லாம உங்க வேலைக்காரங்களை பேச விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க....நான் உங்க எல்லார் மேலயும் உங்க மேனேஜ்மெண்ட்ல கம்ப்ளெயிண்ட் பண்ணப் போறேன்” என்றார்.

சரியாக அந்த நிமிடத்தில் மேசைக்கு வந்த உணவினை அந்த நபருக்குப் பரிமாறச் சொல்லியபடி மேலாளர் வெகு சாதாரணமாக “சார்....நீங்க பில் கட்டுற இடத்தில் கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு போங்க. அவங்க பார்த்துப்பாங்க” என்று கூறிவிட்டு அந்தப் பணியாளரை அழைத்துப் புன்னகையுடன் தோளைத் தட்டிக்கொடுத்து வேறொரு டேபிளைக் காட்டி “அந்த கஸ்டமரைக் கவனி” என்று பணித்து விட்டு விலகி நடந்தார்.

மேலாளரும் அந்தப் பணியாளரும் வேறு வேறு மேசைகளில் புதிதாய் வந்த வாடிக்கையாளர்களை சிரத்தையோடு கவனித்துக் கொண்டிருந்தனர். பக்கத்து மேசை நபர் அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்து மேசையிலேயே பில்லுக்கான பணத்தை செலுத்தி வெளியேறும் வரை குனிந்த தலை நிமிரவேயில்லை. 

1 comment:

  1. தேவையா இது...? நல்லாவே வாங்கிக் கட்டிக் கொண்டார்...

    ReplyDelete