Saturday 25 April 2015

பூனைக்கு மணி

இந்த தடவ ஊருக்குப் போனப்ப நான் படிச்ச பாலிடெக்னிக்ல வேலை பாக்குற ஒருத்தர்கிட்ட (எங்க பேட்ச் லேப் அட்டெண்டர்) இருந்து சில தகவல்கள் தேவைப்பட்டதால அவரை நேர்ல பார்க்கப் போயிருந்தேன். பாலிடெக்னிக்ல இப்போ எக்ஸாம் நடந்துட்டு இருக்கதால என்னை ஆஃபீஸ் ரூம் வெளியில வெயிட் பண்ணச் சொல்லியிருந்தார்.

கிட்டத்தட்ட பத்து வருஷம் கழிச்சு நான் படிக்குற பாலிடெக்னிக்கப் பார்த்தேன். நுழைவாயில் கிட்ட ஒரு ஓடை இருக்கும். அதுக்கு குறுக்க சின்னதா பாலம் கட்டியிருப்பாங்க அது மேல நடந்து/சைக்கிள்ள/பைக்குல/கார்ல தான் உள்ள போக முடியும்.  (கிட்டத்தட்ட அகழி மாதிரி) முன்வாசல் நுழைவுல பெரிய ஆர்ச்ல காலேஜ் பேர் எழுதியிருந்தாங்க. வாசல்லயே செக்யூரிட்டி ரூம். மெயின் கேட் பூட்டியிருக்க சைட்ல இருந்த சின்ன இடைவெளி வழியா என் வண்டியில உள்ள வந்தேன். 

செக்யூரிட்டி நிறுத்தி “மேடம்….எக்ஸாமைனரா”ன்னு கேட்க வண்டி ஸ்பீடை இன்னும் குறைச்சு “இல்ல ஓல்டு ஸ்டூடண்ட்டு”ன்னு பெருமையா(!!) சொல்லிட்டு ஆக்ஸிலேட்டரை முறுக்கி விட்டுப் பறந்தேன்.

மெயின் கேட்டுக்கும் பாலிடெக்னிக் நிறுவனர் சிலைக்கும் கிட்டத்தட்ட ரெண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கலாம். ரெண்டு பக்கமும் காட்டுச் செடிகளா இருக்கும்/ இருந்தது. கொஞ்ச தூரத்துல ஒரு பெரிய கல்லு மேல மயில் உக்கார்ந்திருந்தது. வண்டிய நிறுத்தி ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன்.
நிறுவனர் சிலைக்கு இடது பக்கம் சுத்தி தான் காலேஜுக்குள்ள போகணும். வழியில ஃபர்ஸ்ட் இயர் லேப், மெக்கானிக்கல் லேப் அடுத்து சிவில் லேப் எல்லாம் கடந்து பசங்க சைக்கிள் ஸ்டாண்ட். எதிர்ல காலேஜ் லைப்ரரி. அதுக்கு அடுத்து தான் ஆஃபீஸ் இருக்கும்.  இப்போ சிலைக்கு வலது பக்கம் புதுசா ஆஃபீஸ் கட்டியிருக்காங்க. ஷெட் போட்டிருந்த இருந்த டூவீலர் ஸ்டாண்ட்ல வண்டிய நிறுத்திட்டு உள்ள போனேன். நான் பார்க்க வந்தவரின் பேரைச் சொல்லி விசாரிக்க அவர் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துடுவார்னு தகவல் சொன்னதும் வெளியே கிடந்த பெஞ்ச்சில் உக்கார்ந்து வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்.

உள்ளேயிருந்து மணி சாரின் குரல் கேட்டுச்சு. மணி சார் தான் எக்ஸாம்க்கு பணம் கட்டின ரசீது/ஹால் டிக்கெட் எல்லாத்துக்கும் இன்சார்ஜ். ரொம்ப நக்கல் பிடிச்ச ஆளு. எல்லா ஸ்டூடெண்ட்டும் அவர் கிட்ட பேசவே பயப்படுவோம். அவர்கிட்ட ஹால் டிக்கெட் வாங்குறதுக்குள்ள கிட்டத்தட்ட எக்ஸாம் எழுதுற அளவுக்கு டென்ஷன் ஆக்கி விட்ருவாரு. எத்தனையோ முறை அவரைப் பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ணினாலும் அந்த மணிக்குப் பூனை கட்டுற….ச்சே அந்தப் பூனைக்கு மணி கட்டுறதுக்கு ஆளே இல்லாமப் போச்சு.

மாறாத அதே நக்கல் குரலில் மணி சார் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்.

“நாளைக்கு எக்ஸாம வச்சிட்டு இன்னைக்கு ஹால் டிக்கெட் வாங்க வந்திருக்க…. அதுவும் உடனே பிரின்ஸ்பால் கையெழுத்து வேணும்னா எப்டி…அவர் ஊருக்குப் போயிருக்கார்….வர்றதுக்கு எப்படியும் 5 இல்லேன்னா 6 மணியாகிடும்”

”சார் …நான் ஃபோன் பண்ணிக் கேட்டுட்டு தான் வந்தேன். பிரின்ஸ்பால் 4 மணிக்கு வந்திடுவார்ன்னு சொன்னாங்க சார்”

“அப்டின்னு யாரு சொன்னா?” 

“ஆஃபீஸ்ல இருக்க லேண்ட் லைனுக்கு தான் சார் ஃபோன் பண்ணிக் கேட்டேன். யாரு பேசுனாங்கன்னு பேர் தெரியல சார்”

“யார் சொன்னாங்களோ அவங்க கிட்டயே போய் கேளு….”

”சார்…”

“நீ காலேஜ் முடிச்சுப் பத்து வருஷமாச்சு ….இன்னும் பாஸ் பண்ணாம இருந்துட்டு இங்க வந்து ஏம்மா எங்க உயிர வாங்கிட்டு இருக்க? இங்க வாய் பேசுறதெல்லாம் அரியர் க்ளியர் பண்றதுல காட்டு”

“ஆமா சார்…நான் ஃபர்ஸ்ட் இயர் கணக்குப் பாடத்துல ஃபெயிலாகி அரியர் வச்சிருக்கேன் தான். அதுக்கென்ன இப்போ?? இந்தப் பத்து வருஷத்துல நான் கரஸ்ல படிச்சு ரெண்டு டிகிரி வாங்கிட்டேன். சொந்தமா கம்பெனி வச்சி நடத்துறேன். மாசம் 40,000 சம்பாதிக்குறேன். ஆஃபீசுல என்கிட்ட 20 பேர் வேலை செய்றாங்க. இங்க ஃபெயிலான கணக்குப் பாடத்துல வர்ற ஒரு கணக்கு கூட எனக்கு இந்தப் பத்து வருஷத்து வாழ்க்கையில ஒரு தடவை கூட யூஸ் ஆகல….பிரின்ஸ்பால் கையெழுத்து இல்லேன்னா அஸிஸ்டென்ட் பிரின்ஸ்பால் கிட்ட கையெழுத்து வங்கிக்கலாம்ல…நான் அவர்கிட்டயே வங்கிக்குறேன் சார்”

உறுதியா தெளிவாப் பேசுன அந்தப் பெண் குரல் எனக்குப் பரிச்சயமான குரல்னு மண்டைக்குள்ள மணி அடிக்க சட்டுன்னு எழுந்து நிக்கவும் அந்தப் பெண் உள்ளே இருந்து வெளியே வரவும் சரியா இருந்தது. நேராக முகத்தைப் பார்த்து அடையாளம் தெரிஞ்சதும் பேர் என்னன்னு ரெண்டு நிமிஷம் குழம்பி என்னையும் அறியாம “ஹேய்ய்ய் உமா”ன்னு நான் சந்தோஷமாய்க் கத்த முன்னாடி நடந்துட்டு இருந்தவ திரும்பிப் பார்த்து புருவத்தை சுருக்கி கண்ணுக்குள்ள என்னை உள்வாங்கி அதே சந்தோஷக் குரலில் கூப்பிட்டா “ஏய்ய்ய் ஸ்ரீ”

”ஹேய்ய்ய் என்னடி …எப்டியிருக்க? எங்கேயிருக்க? லைஃப் எப்டிப் போகுது என்ன ஒரு சர்ப்ரஸ்ல….நம்பவே முடியலடி”ன்னு நான் சொல்லிட்டே போக அவள் பதிலுக்கு “நல்லாருக்கேண்டி…. இப்போ மதுரையில இருக்கேன். ரெண்டு பசங்க. சொந்தமா கடை வச்சிருக்கோம். லைஃப் சூப்பரா போகுது. நீ என்கேயிருக்க? ஆள் அடையாளமே தெரிலடி”

“ம்ம் நான் நல்லாருக்கேன்டி. சென்னைல இருக்கேன். இங்க ஒரு வேலையா மூர்த்தி சாரைப் பார்க்க வந்தேன்”

அவ அடுத்த கேள்வி கேக்குறதுக்கு முன்னாடி வைஸ் பிரின்ஸ்பால் பைக்ல லேப் பக்கம் போகவும் “ஏய்…இருடி …ரெண்டு நிமிஷத்துல வரேன்”ன்னு அவரைப் பார்த்து ஹால் டிக்கெட்ல கையெழுத்து வங்கிட்டு வரப் போனா.

நான் திரும்பவும் வெயிட் பண்ணுன இடத்துக்கே போகவும் நான் பார்க்க வந்தவர் எதிரே வரவும் சரியா இருக்க, நான் தேடி வந்த தகவல்களின் பிரிண்ட் அவுட்டை வாங்கிட்டு அவருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு உமா போன பக்கமே பார்த்தபடி வண்டி நிறுத்தியிருந்த இடத்துக்குப் போய் அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.   

கையெழுத்து வாங்கின ஹால் டிக்கெட்டை ஹேண்ட்பேக்குல போட்டபடி எங்கிட்ட வந்தவ ” வண்டியில வந்தியா? நான் ரெயில்வே ஸ்டேஷன் போய் டிரெயின பிடிக்கணும்டி. கிளம்பட்டுமா”ன்னு கேக்க “எரும….வண்டில ஏறு …ஸ்டேஷன்ல விடுறேன்”

 “நீ எப்ப டி டூவீலர் ஓட்டக் கத்துக்கிட்ட……லைசன்ஸ் இருக்கான்னு” கேட்டவள்ட்ட “ம்க்கும் லைசன்ஸ் வாங்கி எட்டு வருசம் கழிச்சு தாண்டி வண்டியே வாங்கிருக்கு”ன்னு சொல்லிட்டே வண்டியை நிறுத்தி “ஏய் இருடி …ஒரு ஃபோட்டோ எடுக்கலாம்னு” அவள் மொபைல்லயும் என்னோட கேமராவுலயும் எடுத்துக்கிட்டோம். சத்தமா பேசிக்கிட்டும் சிரிச்சுக்கிட்டும் மெயின் கேட்டைத் தாண்டினோம்.

பாலிடெக்னிக்கை விட்டு வெளியே வந்து மெயின் ரோட்டத் தொட்டு கொஞ்ச தூரத்தில் தள்ளு வண்டியில் நுங்கும் பதனியும் விற்குறதப் பார்த்து வண்டியை ஓரங்கட்டி ஆளுக்கொரு தொன்னையில பதனி குடிச்சு ரெண்டு பார்சல் நுங்கும் வாங்கியாச்சு. ராஜலட்சுமி தியேட்டர் பக்கத்துல ரயில்வே சிக்னல்ல போடாம இருந்த நல்ல நேரத்துல போனதால ஸ்டேஷனுக்கு சரியான டைமுக்கு போயாச்சு.  

எனக்கொரு பிளாட்ஃபார்ம் டிக்கெட்டும் அவளுக்கு மதுரைக்கு டிக்கெட்டும் எடுத்துட்டு டிரெயினுக்காகக் காத்திருந்த நேரத்துல அவ கிட்ட சொன்னேன் “உன்ன நெனைச்சா ரொம்பப் பெருமையாவும் சந்தோசமாவும் இருக்குடி. இந்தப் பத்து வருசத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்து ரெண்டு டிகிரி முடிச்சு சொந்தமா பிஸினெசும் நடத்திட்டு இருக்க பாரு…யூ ஆர் ரியலி கிரேட் டி. படிக்கும் போது பார்த்த உமாவா இதுன்னு ஆச்சரியமா இருக்கு…. என்னப் போல நிறைய பேருக்கு நீ ஒரு முன்னுதாரணம்”

ஆமோதிக்குற மாதிரி ரெக்கார்ட் வாய்ல டிரெயின் பத்தின அறிவிப்பு கேட்டது…… தோள்ல மாட்டியிருந்த ஹேண்ட் பேக்க அட்ஜஸ்ட் பண்ணிட்டே டிரெயின் வரப்போற திசைய ஒரு முறை பார்த்துட்டு “போடி …நானாவது ரெண்டு டிகிரி வாங்குறதாவது….. கல்யாணம் ஆனதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் ஹவுஸ் வொய்ஃப் தான். இவரு போன மாசம் தான் துபாய்ல வேலைக்கு சேர்ந்துருக்காரு. ஃபேமிலி கஷ்டமெல்லாம் இல்ல….ஆனா பிள்ளைங்க படிப்புக்காக கொஞ்சம் பணம் சேர்க்க வேண்டிருக்கே அதான் போயிருக்காரு…. அப்பா இறந்த பிறகு அம்மா எங்கூட தான் இருக்காங்க. பிள்ளைங்க ரெண்டும் நல்லா படிக்குறாங்க. மாமியாரும் மாமனாரும் இவர் தம்பி வீட்ல இருக்காங்க. நான் சந்தோசமா இருக்கேன்….. கருமம் இந்த எக்ஸாம மட்டும் எழுதித் தொலைச்சு பாஸ் பண்ணிட்டா என் வீட்டுக்காரர் கிண்டல்ல இருந்து தப்பிச்சுடலாமேனு தான் இந்த தடவ எழுத வந்தேன்…. ஆனாலும் அந்த மணிக்கு ரொம்பத் தான் வாயிடி….. காலேஜ்ல படிக்கும் போதே அந்தாளப் பிடிக்காது …இன்னைக்கு தான் சான்ஸ் கெடைச்சது. அதான் ரெண்டு வாங்கு வாங்குனேன்… சரிடி டிரெயின் வந்திருச்சு…நான் வரேன்…மதுரையில இறங்கிட்டு ஃபோன் பண்றேன்”ன்னுட்டுப் போனா….


டிரெயின் என்னைக் கடந்து கடைசிப் பொட்டி கண்ல இருந்து மறையுற வரைக்கும் அவ போன திசையவே பார்த்துட்டு இருந்தேன் ….. தக்காளி இந்த வருஷமாச்சும் நானும் அரியரைக் க்ளியர் பண்ணிடனும் ;) :p 

1 comment: